டெல்லி: கூடிய விரைவில், நிறைய கடன் வைத்திருக்கும் Air India-வை தனியார் மயம் ஆக்குவோம் என சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி மாநிலங்களவையில் நேற்று (ஜூலை 03, 2019, புதன்கிழமை) சொல்லி இருக்கிறார்.
Air India நிறுவனத்திடம் நல்ல சொத்துக்கள் மற்றும் விமானங்கள் எல்லாம் இருக்கின்ற போதிலும், நாள் ஒன்றுக்கு சுமார் 15 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறதாம். இப்போதே Air India நிறுவனத்துக்கு சுமார் 59,000 கோடி ரூபாய் கடன் இருக்கிறதாம். இதில் 29,000 கோடி ரூபாய் கடனை கழித்துக் கொள்வதாகவும் சொல்லி இருக்கிறது மத்திய அரசு. இதற்கு மத்தியில் Air India நிறுவனத்தை லாபகரமான நிறுவனமாக மாற்ற அரசு தன்னால் ஆன வரை முயற்சித்துக் கொண்டிருக்கிறது எனவும் பேசி இருக்கிறார்.
மத்திய அரசு Air India-வை தனியாரிடம் கொடுக்க எல்லா வேலைகளை பார்த்துக் கொண்டு தான் இருந்தது. ஆனால் நிலையற்ற விமான எரிபொருள் விலை மற்றும் நிலையற்ற டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு போன்ற காரணத்தால் Air India நிறுவனத்தை தனியார் மயமாக்கும் வேலையைக் கொஞ்சம் கிடப்பில் போட்டிருக்கிறது.
கடந்த 2018-ம் ஆண்டே மத்திய அரசு Air India நிறுவனத்தின் 76 சதவிகித பங்குகளை விற்க முயன்றது. ஆனால் Air India நிறுவனத்தை வாங்க எந்த ஒரு முதலீட்டாளரோ, நிறுவனமோ முன் வராததால் திட்டம் தோல்வியுற்றது. இப்போது மீண்டும் Air India-வை தனியார்மயமாக்க ஒரு புதிய திட்டத்துடன் வருவதாகச் சொல்லி இருக்கிறது மத்திய அரசு.
சமீபத்தில் மத்திய அரசு, சுமார் 4,000 கோடி ரூபாயை Air India நிறுவனத்துக்கு பணம் கொடுத்ததும் நினைவுக்கு வருகிறது. இப்படித் தான் ஜெட் ஏர்வேஸும் கடைசி வரை யாராவது இந்த நிறுவனத்தை வாங்க வருவார்கள். அவர்களிடம் இருந்து மொத்தக் கடனையும் வசூலித்துக் கொள்ளலாம் என காத்திருந்தது எஸ்பிஐ. கடைசி வரை ஜெட் ஏர்வேஸை யாரும் வாங்க முன் வராததால், ஜெட் ஏர்வேஸின் சொத்துக்களை விற்று கடன்களை மீட்டுக் கொள்ளும் நிலைக்குப் போய்விட்டது. இப்போது ஏர் இந்தியாவுக்கும் இதே நிலை தான் வருமோ என கொஞ்சம் யோசிக்கத் தோன்றுகிறது.