டெல்லி: நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை, மற்றும் தொழில் வளர்ச்சி குறைவு போன்றவற்றால் மத்திய அரசுக்கு வரவேண்டிய வரி வசூல் குறைந்து போன காரணத்தால், வரி வருவாயை அதிகரிக்கம் வகையில் 34 ஆண்டுகளுக்கு முன் காலாவதியான பரம்பரை வரியை மீண்டும் கொண்டுவர மத்திய அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்கும் அதிகமாக சொத்து வைத்திருப்போர் இறப்பிற்கு பிறகு, அவர்களுடைய வாரிசுதாரர்கள் பெறும் பரம்பரையான சொத்துக்களுக்கும் வரி செலுத்து வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது. சுதந்திர இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கை மிக சொற்ப அளவிலேயே இருந்ததால் கடந்த 1985ஆம் ஆண்டில் பரம்பரை வரி முறை ஒழிக்கப்ட்டது.
ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்தே இந்தியாவில் சொத்து வரி வசூலிக்கும் முறை இருந்தது வந்தது. எஸ்டேட் வரி அல்லது பரம்பரை வரி என்ற பெயரில் சுதந்திரம் அடைந்த பின்னரும் பரம்பரையான சொத்துக்களுக்கு வரி செலுத்தும் முறை தொடர்ந்து இருந்து வந்தது. இதன் படி குறிப்பிட்ட வரம்புக்கு அதிகமாக பரம்பரை சொத்துக்களை வைத்திருப்போர் இறந்த பின்னர் அவர்களுடைய சட்டப்படியான வாரிசுதாரர்கள் பெறும் பரம்பரை சொத்துக்களுக்கும் வரி செலுத்தவேண்டும்.
ஆனால், இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் பரம்பரையான சொத்துக்களை வைத்திருப்போரின் எண்ணிக்கை மிக சொற்ப அளவிலேயே இருந்தது. பரம்பரை சொத்துக்களின் மீது விதிக்கப்பட்டு வந்த வரி வருவாயும் சொற்ப அளவிலேயே இருந்தது. இதனால் கடந்த 1985ஆம் ஆண்டில் எஸ்டேட் வரி என்னும் சொத்து வரிமுறை முழுமையாக நீக்கப்பட்டுவிட்டது.
கடந்த 1990ஆம் ஆண்டுகளில் உலகளாவிய வர்த்தகம் என்னும் உலக மயமாக்கலுக்கு பின்னர் உலகம் முழுவதும் பணக்காரர்கைளின் எண்ணிக்கை உயரத் தொடங்கியது. இதனால் பணக்காரர்களிடமிருந்து பரம்பரை வரி எனப்படும் எஸ்டேட் வரி வசூலிக்கும் முறை கொண்டுவரப்பட்டது. குறிப்பாக வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற வளர்ந்த நாடுகளில் இன்னமும் பாரம்பரிய வரி முறை இருந்து வருகிறது. அமெரிக்காவில் சுமார் 11 மில்லியன் டாலர்களுக்கு அதிகமாக இருக்கும் சொத்துக்களுக்கு 40 சதவிகித சொத்து வரி செலுத்த வேண்டும். அதேபோல், ஜப்பானில் 55 சதவிகித வரியும் தென்கொரியாவில் 40 சதவிகித வரியும் வசூலிக்கப்படுகிறது.
உலக மயமாக்கலுக்கு பின்பு இந்தியாவிலும் பணக்காரர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கத் தொடங்கியது. பணக்காரர்கள் அதிக அளவில் வருவாய் ஈட்டி சொத்துக்களை சேர்ப்பதும், ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாக உழலும் சூழ்நிலை நிலவி வருகிறது. தற்போது இந்தியாவில் உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பில் சுமார் 77.40 சதவிகிதம் வரையில் வெறும் 10 சதவிகிதி பணக்காரர்களின் கைகளில் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயத்தில், நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 60 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் வைத்திருக்கும் மொத்த சொத்துக்களின் மதிப்போ வெறும் 4.7 சதவிகிதம் மட்டுமே.
தற்போது வருமானவரிச் சட்டத்தின் படி வருமான வரி செலுத்தும் தனிநபர் மற்றும் இந்திய கூட்டுக் குடும்பங்களும் தங்களின் ஆயுட்காலத்தில் அனுபவித்து வந்த சொத்துக்களை, தனது சட்டப்படியான வாரிசுகளுக்கு கொடுக்கும்போது, அந்த சொத்துக்கள் வருமான வரிச் சட்டம் விதித்துள்ள வரம்புக்கு அதிகமாக இருக்குமானால் அதற்கு கூடுதல் வரி விதிக்கப்படும். இதில் அசையும் மற்றும் அசையா சொத்துக்களும் அடங்கும். அதே போல் அதிகப்படியான பணம் சம்பாதிப்பவர்களுக்கு செல்வ வரி (Wealth Tax) வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த வரி முறை கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், நாட்டின் தொழில்துறையின் வளர்ச்சி சுனக்கமான நிலையில் இருப்பதால், வரி வருவாயும் எதிர்பார்த்த அளவில் இல்லாமல், பொருளாதார வளர்ச்சி தடைபட்டுள்ளது. வரி வருவாயை அதிகரிக்கும் வகையில் மீண்டும் எஸ்டேட் வரி என்னும் பரம்பரை வரி முறையை அமல்படுத்தும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரம்பரை வரி முறை அமல்படுத்தப்பட்டாலும், பெரிய அளவில் தாக்கம் இருக்காது என்பதே வரி ஆலோசகர்களின் கருத்தாகும்.
தற்போது இரண்டாம் முறையாக ஆட்சிக்கட்டிலில் அமர்ந்திருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரி வருவாயை அதிகரிக்கும் நோக்கில் சில அதிரடியான வரிச்சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்கக்கூடும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர்.