டெல்லி: ஒரு வழியாக கவிஞன் கவிதை படிப்பது போல ஒவ்வொரு வரியையும் அழுத்தம் திருத்தமாக, இரண்டு இரண்டு முறை படித்து, தன் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்துவிட்டார் இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். சரி விஷயத்துக்கு வருவோம்.
தலைப்பில் நீங்கள் படித்தது சரி தான். இந்திய அரசின் பட்ஜெட்டும் நம் வீட்டு பட்ஜெட் போல பெரிய துண்டு போட்டு தான் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசுக்கு 2019 - 20 நிதி ஆண்டில் வரப் போகும் மொத்த வரி வருவாய் 16.49 லட்சம் கோடி ரூபாய்.
மத்திய அரசுக்கு வர இருக்கும் வரி அல்லாத மற்ற வருவாய் 3.13 லட்சம் கோடி ரூபாய். இதெல்லாம் போக கொடுத்த கடனை வசூலிப்பது, இந்திய அரசுக்கு வேறு வழிகளில் இருந்து வரும் வருமானங்கள் எல்லாம் சேர்த்தால் 1.19 லட்சம் கோடி ரூபாய்.
ஆக மொத்தம் 20.81 லட்சம் கோடி ரூபாய் தான் இந்திய அரசுக்கு வர இருக்கும் மொத்த வருமானம். இந்த வருமானத்தை வைத்து இந்தியாவை நடத்தி விடலாமா என்று கேட்டால் முடியாது என்கிறார்கள்.
இந்த 20.81 லட்சம் கோடி ரூபாய் போக, 2019 - 20 நிதி ஆண்டில் ஒரு 7.03 லட்சம் கோடி ரூபாய் கடன் வேறு வாங்கப் போகிறார்கள். இந்த கடன் இருந்தால் தான் இந்தியாவின் அத்தியாவசியத் தேவைகளையே சரி செய்ய முடியும் என்கிற அளவுக்கு கொடூரமாக இருக்கிறது இந்தியாவின் நிதி நிலை.
2019 - 20 நிதி ஆண்டில், இந்திய அரசு கடன் வாங்கும் அளவுக்கு இணையாக 6.60 லட்சம் கோடி ரூபாயை, ஏற்கனவே வாங்கிய கடன்களுக்கு வட்டியாகச் செலுத்தப் போகிறார்கள்.
அதாவது, ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டித் தொகை 6.60 லட்சம் கோடி ரூபாயை திருப்பிச் செலுத்த, இந்திய அரசு மீண்டும் 7.03 லட்சம் கோடி ரூபாயை கடன் வாங்குகிறது எனச் சொல்லலாம்.
இந்திய அரசுக்கான வருவாய் பற்றாக்குறை (Revenue Deficit) 2019 - 20 நிதி ஆண்டுக்கு 4.85 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இதுவே 2019 - 20 நிதி ஆண்டுக்கான நிதிப் பற்றாக்குறை (Fiscal Deficit) 7.03 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.