இந்தியாவின் முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவரான சுவாமிநாதன் "நிர்மலா சீதாராமனின் (Budget 2019)-ஐ முதல் பட்ஜெட் அவ்வளவு விமர்சையாக ஒன்றும் இல்லையே" என தன் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
மேலும் "சொல்லப் போனால் அவர்கள் தன் நிதிப் பற்றாக்குறை இலக்கைப் பற்றிக் கூட சொல்லவில்லையே. அதைத் தானே சந்தை ஆர்வமாக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" எனக் கேட்டு இருக்கிறார்.
அதோடு நிற்காமல் "இந்தியாவின் நிதிப் பற்றாக்குறை விவரங்களில் மறைப்பதற்கு ஏதாவது இருக்கிறதா என்ன..?" என பட்ஜெட் முடிந்தும் முடியாததுமாக தன் விமர்சன கருத்துகளை முன் வைத்திருக்கிறார்.
மிதமான பட்ஜெட்
மேலும் பேசிய அவர் "இந்த பட்ஜெட்டை ஒரு மிதமான பட்ஜெட் எனச் சொல்லலாம். இந்த பட்ஜெட்டில் பெரிய தைரியமான முடிவுகள் எதுவும் இல்லை. எதிர்காலம் குறித்த விஷயங்கள் இல்லை. இதை ஒரு கூடுதல் பட்ஜெட் என்று தான் சொல்ல வேண்டும்" எனவும் விமர்சித்திருக்கிறார். அதோடு "நிர்மலா சீதாராமன் உள்நாட்டில் கடன் அழுத்தத்தைக் குறைக்க எடுத்த முடிவுகளைப் பார்க்கும் போது நல்ல முடிவாகத் தெரிகிறது. அதோடு வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு முதல் கொடுக்க முன் வருவது மற்றும் ஏஞ்சல் வரிப் பிரச்னையில் ஸ்டார்ட் அப்களுக்கு ஒரு முடிவு சொன்னது எல்லாம் நல்ல நடவடிக்கையாகத் தெரிகிறது " என்றார்.
முடியுமா..?
ஆனால், அரசு சொத்துக்களை விற்று கொண்டு வர வேண்டிய வருவாய்க்கு மிகப் பெரிய இலக்கு நிர்ணயித்திருப்பதை விமர்சிக்கிறார். அரசு விற்க வேண்டிய சொத்துக்களில் ஏர் இந்தியாவும் ஒன்று. கடந்த 2018-ம் ஆண்டிலேயே ஏர் இந்தியாவின் 76 சதவிகித பங்குகளை விற்க முயற்சி செய்து முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை வாங்கவே ஆள் இல்லாத போது, ஏர் இந்தியாவை யாரிடம் விற்பார்கள் எனவும் கேள்வி எழுப்பி இருக்கிறார் சுவாமிநாதன்.
அந்த 0.7% மட்டும் எதுக்கு
பாஜக ஆட்சிக்கு வந்த போதில் இருந்து கார்ப்பரேட்களுக்கான வரி 25 சதவிகிதத்துக்குள் கொண்டு வருவோம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது 400 கோடி ரூபாய்க்குள் ஆண்டுக்கு டேர்ன் ஓவர் பார்க்கும் நிறுவனங்கள் 25 சதவிகிதம் வரி செலுத்தினால் போதும் என வரம்பை மாற்றி அமைத்திருக்கிறார்கள். பாஜக சொன்ன படி அனைத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்குமான வரியை 25 சதவிகிதமாகக் கொண்டு வரவில்லை. "99.3 சதவிகிதம் பேருக்கு செய்ய முடியும் போது பாக்கி உள்ள 0.7 சதவிகித பேருக்கு செய்ய முடியாதா" என கேள்வி எழுப்பி இருக்கிறார்.
10-க்கு 6 தான்
இந்தியாவில் கார்ப்பரேட் வரி, அதிகமாக இருப்பதால், இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்ற நாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களோடு போட்டி போட முடியாமல் போகிறது. அதோடு உள்நாட்டில் ஏகப்பட்ட பொருட்களுக்கான தொழிற்துறையை பாதுகாக்க முயற்சிப்பதையும் விமர்சித்திருக்கிறார். ஆக மொத்தத்தில் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டுக்கு 10-க்கு 6 மதிப்பெண் கொடுத்திருக்கிறார் பொருளாதார வல்லுநர் சுவாமிநாதன்.
நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன், பட்ஜெட் வாசித்து முடித்த பின் தனியாக நிதிப் பற்றாக்குறை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். கடந்த நிதி ஆண்டில் நிதிப் பற்றாக்குறை 3.4 சதவிகிதமாக இருந்தது. ஆனால் இப்போது இந்த 2019 - 20 நிதி ஆண்டில் நிதி பற்றாக்குறை 3.3 சதவிகிதமாக குறைத்து நிர்ணயித்திருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார். ஆக பொருளாதார வல்லுநர் சுவாமிநாதன் சொல்வது போல நிதி அமைச்சர், நிதி பற்றாக்குறையைப் பற்றி பேசவில்லை எனச் சொல்ல முடியாது.