டெல்லி: முறையாக நேர்மையாக வரி செலுத்தும் சாமான்ய மக்களுக்கு எந்த விதமான வரிச்சலுகையையும் அறிவிக்காமல் முழுக்க முழுக்க கார்பரேட் நிறுவனங்களுக்காகவே தயாரிக்கப்பட்ட பட்ஜெட் இது என்று நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டைப் பற்றி முன்னாள் நிதியமைச்சரிடம் பலர் குமுறியிருக்கிறார்கள்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி விட்டீர்கள், நேர்மையாக சரி செலுத்தும் சாமான்ய மக்களான மாதச் சம்பளதாரர்களான எங்களுக்கு என்ன மாதிரியான வரிச் சலுகையை அறிவித்துள்ளீர்கள். ஒரு இபிஎஃப் பயன்பாடு, வரிப் பயன்பாடு, கிராஜூவிட்டி பயன்பாடு உண்டா என்றும் கிடுக்கிப்பிடியான கேள்விகளை கேட்டு திணறடித்திருக்கிறார்கள்
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின்போது இடையில் பழந்தமிழ் புறநானூற்றுப்பாடலை வேறு மேற்கோள் காட்டி பேசினார். அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொன்ன உடன் பிரதமர் மோடி வெகுவாக ரசித்து கைதட்டி வரவேற்றார்.
போதாக்குறையாக, முன்னால் நிதியமைச்சர் அருண் ஜெட்லியும் பட்ஜெட்டை புகழ்ந்து தள்ளிவிட்டார். ஏற்கனவே பட்ஜெட்டில் தங்களுக்கு எந்தவிதமான வரிப்பயன்பாடும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லையே என்ற கடுப்பில் இருந்த பெரும்பாலானவர்கள், ஜெட்லியின் பாராட்டைப் பார்த்து உடனடியாக ட்விட்டரில் வாட்டி எடுத்துவிட்டார்கள்.
வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை இல்லை, உள்கட்டமைப்புக்கு முக்கியத்துவம் இல்லை. பொதுமக்களின் நுகர்வுத் தன்மையை அதிகரிக்க எந்த திட்டமும் இல்லை. இவை எதுவும் இல்லாமல், வரும் 2025ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் டாலர் கொண்ட பொருளாதார நாடாக எப்படி இந்தியாவை உருவாக்க முடியும் என்று பெரும்பாலானவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
அமெரிக்க டாலருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை குறைத்து இந்திய ரூபாயின் மதிப்பை அதிகரித்து, கச்சா எண்ணெய் உள்பட சர்வதேச வர்த்தக பரிமாற்றத்திற்கு ரூபாயை பயன்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இதனால் இந்திய ரூபாயின் மதிப்பு டாலருக்கு எதிராக வலுவடையும் சிலர் பதிவிட்டிருக்கிறார்கள்
முறையகே நேர்மையாக வரி செலுத்தும் எங்களை தொடர்ந்து உதாசீனம் செய்து வருகிறீர்கள். இப்படியே போனால், மிக மோசமான பட்ஜெட்டில் இதுவும் சேர்ந்துவிடும் போலிருக்கிறது. கூடவே, நீங்கள் பெரும்பாலானவர்களின் ஆதரவையும் விரைவில் இழக்க நேரிடும் என்று ஆதங்கத்தை கொட்டி இருக்கிறார்கள்.
பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி விட்டீர்கள், நேர்மையாக சரி செலுத்தும் சாமான்ய மக்களான மாதச் சம்பளதாரர்களான எங்களுக்கு என்ன மாதிரியான வரிச் சலுகையை அறிவித்துள்ளீர்கள். ஒரு இபிஎஃப் பயன்பாடு, வரிப் பயன்பாடு, கிராஜூவிட்டி பயன்பாடு உண்டா, இவை எல்லாமே கார்பரேட் நிறுவனங்களிடம் தான் முடங்கி உள்ளன.
இப்படியே போனால் எங்கள் ஆதரவை இலக்கக் கூடும். நேர்மையாக வரிசெலுத்துபவர்களை அரவணைத்துச் செல்வது உங்கள் கடமை என்று பெரும்பாலானவர்கள் பொங்கி இருக்கிறார்கள். ஒருவேளை இப்படி எல்லாம் நடக்கும் என்று தெரிந்து தானோ என்னவோ முன்கூட்டியே கையெடுத்து கும்பிடு போட்டு எனக்கு இந்த ஆணி புடுங்குற நிதியமைச்சர் பொழப்பே வேண்டாம் என்று நடையை கட்டிவிட்டார் போல.
வருமான வரி செலுத்துவதற்கு பான் கார்டுக்கு பதிலாக ஆதார் கார்டு போதும் என்று அறிவித்தால் மட்டும் சாமான்ய மக்களுக்கு வரிப்பயன்பாடு கிடைத்துவிடுமா என்ன. முதலில் நீங்களே ஒரு பிரச்சனையை உருவாக்குகிறீர்கள். பின்னர் அதையே ஊதி பெரிதாக்குகிறீர்கள். பின்பு அதையே சிக்கல் நிறைந்ததாக பூதாகரமாக ஆக்குகிறீர்கள். பின்பு அதையே குறைக்க திண்டாடுகிறீர்கள் (என்னமா குழப்புறீங்க சார்) என்று அநியாயத்துக்கு ஒருவர் அருண் ஜெட்லியின் ட்விட்டர் பக்கத்தில் பொங்கி இருக்கிறார்.
அப்பாடா, ஒரு வழியாக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. ஆனால் ப்ரைம் மற்றும் ஹாட்ஸ்டார் போன்றவற்றுக்கு நாம் செலுத்தும் ஆண்டு சந்தாவுக்கு இன்னும் எந்தவிதமான சலுகையோ தள்ளுபடியோ அறிவிக்கப்படவில்லையே. இனிமேலும் நாம் இந்தியாவில் இருப்பதில் அர்த்தமே இல்லை என்று கடுப்பேற்றி இருக்கிறார்.