டெல்லி : மத்தியில் மோடி தலைமையிலான அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பின்னர், முதல் பட்ஜெட் தாக்கல் கடந்த வெள்ளிக்கிழமையன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த பட்ஜெட் தாக்கலின் போது ரூ.50,000 க்கும் அதிகமான ரொக்கப் பணப்பரிவர்த்தனைகளுக்கு, கட்டாயம் பான் கார்டு தேவை என்று முன்பிருந்தது. இந்த நிலையில் இனி பான் கார்டு தேவையில்லை, அதற்கு பதில் ஆதார் கார்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என வருவாய்த்துறை செயலர் அறிவித்துள்ளார்.
இந்தியாவின் தேசிய பயோமெட்ரிக் ID ஆதார் கார்டு ஆகும். தற்போது ரூ .50,000 க்கும் அதிகமான பண பரிவர்த்தனைகளுக்காகவும், சில விஷயங்களுக்கு கட்டாயம் பான் கார்டு தேவை என்று இருந்து வந்தது. உதாரணத்திற்கு வருமான வரி தாக்கல் செய்வதற்கு பான் எண் கட்டாயமாக இருந்து வந்தது.
பான் கார்டு கட்டாயம் இருக்க வேண்டும் என்ற நிலையில், இப்போது கட்டாயமாக உள்ள அனைத்து இடங்களிலும் ஆதார் ஏற்றுக்கொள்ள வங்கிகளும் பிற நிறுவனங்களும் பின்தளத்தில் மேம்படுத்தும் என்று வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷண் பாண்டே சனிக்கிழமை தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமான ரொக்கப் பணப்பரிவர்த்தனைக்கு பான் எண் கட்டாயம் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால் பட்ஜெட் தாக்கலின் போது பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பான் கார்டுக்குப் பதில் ஆதாரையோ, ஆதாருக்குப் பதில் பான் எண்ணையோ பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக செய்தியாளரிடம் பேசிய வருவாய்த்துறை செயலாளர் அஜய் பூஷன் பாண்டே, நாடு முழுவதும் 120 கோடி பேர் ஆதார் வைத்திருப்பதாகவும், 20 கோடி பேர் மட்டுமே பான் அட்டை இருப்பதாகவும் கூறியுள்ளார்.
அதோடு பான் கார்டு விண்ணப்பிக்க ஆதார் கார்டு கட்டாயம் என்பதால், ஆதாரே வசதி மிக்கது என்றும், இதற்காக பான் கார்டு தேவையில்லை என்றும் கூறியுள்ளார். அப்படி என்றால் இனி பான் கார்டு பயன்பாட்டில் இருக்காதா? என்ற போது, ஆதாரும், பான் எண்ணும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு எது வசதியாக இருக்குமோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.