ஹைதராபாத் : நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை ஒரு புறம் அதிகரித்துக் கொண்டே சென்றாலும், அதை தடுக்க மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டே இருந்தாலும், மத்தியில் மோடி 2.0 அரசு இரண்டாவதுமுறையாக பதவியேற்ற பின்பு, கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் தாக்கலில் எரிபொருளுக்காக கலால் வரியை உயர்த்தியுள்ளார் நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன்.
இந்த நிலையில் ஏற்கனவே தாறுமாறாக ஏறிக் கொண்டிருந்த பெட்ரோல் டீசல் விலை தற்போது சொல்லவே வேண்டாம். ஒரே நாளில் ரூ.2.57 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த நிலைமையையும் மாற்றி அமைத்திருக்கிறார். ஹைதராபாத்தை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியர் சதீஷ் குமார். இதில் என்ன குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 40 - 50 ரூபாய்க்கு கொடுப்பதே ஆச்சரியம்.
பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி எரிபொருள்?
அட ஆமாங்க.. ஹைதராபத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை பயன்படுத்தி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர், தினசரி 400 லிட்டர் எரிபொருளை உற்பத்தி செய்து அசத்தி வருகிறார். உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகளை தடுக்க, அவற்றுக்கு அரசு தடைவிதித்தாலும், அதன் பயன்பாடு இருந்து கொண்டே தான் வருகிது. ஏன் அதன் பயன்பாட்டை அரசு குறைக்கவும் முடியவில்லை. ஆனால் இந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் நமக்கு தகுதாற்போல் மாற்றிக் கொள்ள முடியும் என்றும் மாற்றியமைத்திருக்கிறார் சதிஷ்.
குறைந்த விலைக்கே விற்பனை?
இந்த நிலையில், ஹைதாராபாத்தை சேர்ந்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பேராசிரியர் சதீஷ்குமார் கடந்த 2015ம் ஆண்டு ரூ.80 லட்சம் முதலீட்டில் ஒரு தொழிற்சாலையை தொடங்கி உள்ளார். இதன் மூலம் பிளாஸ்டிக்கிலிருந்து டீசல், பெட்ரோல் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தொடங்கி உள்ளார். இந்த தொழிற்சாலை மூலமாக தினந்தோறும் டீசல், ஹைபவர் டீசல், பெட்ரோல் உற்பத்தி செய்து ஹைதராபாத்தை சுற்றியுள்ள மக்களுக்கும், தொழிற்சாலைகளுக்கும் குறைந்த விலைக்கே விற்பனை செய்தும் வருகிறார்.
500 பிளாஸ்டிக்கை கொண்டு 400 லிட்டர் எரிபொருள்!
நாளுக்கு நாள் பிளாஸ்டிக்கால் சுற்றுசூழம் மாசு அதிகரித்து வருகிறது, என்று கூறப்படும் நிலையில், இந்த எரிபொருள் உற்பத்திக்காக மூன்று ஆண்டுகால சிரமத்திற்கு மத்தியில் தற்போது 500 கிலோ பிளாஸ்டிக்கை கொண்டு தினந்தோறும் 400 லிட்டர் எரிபொருள் தயார் செய்து வருகிறேன் என்கிறார் சதிஷ். இதில் குறிப்பாக 200 லிட்டர் டீசல், 150 லிட்டர் ஹைபவர் டீசல், 50 லிட்டர் பெட்ரோல் என உற்பத்தி செய்யப்படுகிறதாகவும் கூறியுள்ளார் சதிஷ்.
கழிவுகள் உரமாக பயன்பாடு!
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், பெட்ரோல் டீசல் தயாரித்த பின்பு வெளியேறும் கழிவுகள், உரமாகவும் பயன்படுத்தப்படுகிறதாம். இது தவிர, சமையல் எரிவாயு உற்பத்தியும் செய்து வருகிறாராம். பிளாஸ்டிக்கில் இருந்து பெட்ரோல், டீசல் தயாரிப்பதற்காக ஹைதாராபாத்தை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஒரு கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் ரூ.5 - 8 விலைக்கு வாங்கி அதனை சிறிய துண்டுகளாக கட் செய்து பெட்ரோல், டீசல் தயார் செய்யப்பட்டு வருகிறதாம். அவ்வாறு உற்பத்தி செய்யப்பட்ட டீசல் லிட்டர் ரூ.45க்கும், பெட்ரோல் ரூ.50க்கும் விற்பனை செய்யப்படுவதால் ஹைதாராபாத்தை சுற்றியுள்ள வாகன ஓட்டிகளும் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்தும் ஆர்வத்துடன் வந்து வாங்கிச் செல்கின்றனராம்.
அரசு ஊக்குவிக்க வேண்டும்?
ஹைதராபாத் நகரில் நாள்தோறும் டன் கணக்கில் பிளாஸ்டிக் கழிவுகள் வெளியேற்றப்படுகிறது. இதனை மறுசுழற்சி செய்ய முடியாமல் அனைத்தும் மாநகராட்சி குப்பைகளுக்கு வருவதால் அதனை அழிப்பதில் மாநகராட்சி கடும் சிரமத்தை எதிர்கொண்டு வருகிறது. அதோடு இது போன்ற ஆரம்ப நிலையில் பல்வேறு நிறுவனங்கள் தொடங்கி, அதற்கு அரசு ஊக்குவிப்பு தந்தால் பிளாஸ்டிக்கால் ஏற்படக்கூடிய பாதிப்புகளில் இருந்து காப்பதோடு, சுற்றுச்சூழலும் பாதிப்படையாமல் எரிவாயு குறைவான விலையில் கிடைக்கும் என்பதே பலரின் கருத்தாகவும் உள்ளது.