கோயமுத்தூர் : என்னதான் பானி பூரி, காளான், மக்காச்சோளம், முறுக்கு என்றாலும், நம்ம சேலத்துல உள்ள தட்டுவடை செட்டுக்கு ஈடாகுமான்னு தான் தெரியல என்கிறார் "சேலம் தட்டு வடை செட்டு கடை" உரிமையாளர் மோகன் ராஜ்.
சேலத்தில் இது போன்ற பல கடைகள் இருந்து வருகிறது. வளர்ந்து வரும் போட்டியை சமாளிக்க, தனது ஊர் சேலம் என்றாலும் கோயமுத்தூரில் கடையை வைத்திருக்கும் மோகன், டிப்ளமோ முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்க விஷயம். மோகனுக்கு சொந்த தொழிலில் அலாதி பிரியம் உண்டு. அதிலும் சொந்த ஊரின் பெருமையை விரிவுபடுத்தவும், அதன் மூலம் தொழிலை விரிபடுத்தவும் நினைத்துள்ளார் மோகன்.
ஏன் எந்த ஊருக்கு சென்றாலும், அங்கு ஒரு உணவு ஸ்பெஷலாகவும் இருக்கும். அப்படி ஒரு உணவு தான் சேலம் தட்டு வடை ஸ்பெஷல். இது தற்போது சேலம் மட்டும் அல்ல சென்னை, கோயமுத்தூர் என அனைத்து நகரங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.
தட்டுவடைக்கும் ஸ்பெஷல்!
அதிலும் மாலை நேரத்தில் நடைபாதை வண்டிகளில் கண் கவர்ந்து மனம் மயக்கும் ஓர் உணவு... அதன் வண்ணங்களும் மனமும் சுவையும் நாசியை இழுக்கும். அப்படியொரு வல்லமை கொண்டது தான் சேலம் தட்டுவடை செட். சேலத்து மாம்பலம் அனைவரும் அறிந்த ஒன்றாக இருந்தாலும், சேலத்தில் மாலை வேளைகளில் தள்ளுவண்டிகளிலும் மொபட்களிலும் சிறிய கடைகளிலும் கிடைக்கும் தட்டுவடை செட் மிக பிரபலம். இந்த தட்டுவடை செட்டுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமும் உண்டு.
காய்கரிகளுக்கு நடுவில் சட்னியுடன் தட்டு வடை?
வட்ட வடிவமாக உள்ள இந்த தட்டைகளை எடுத்து, ஒன்றில் நல்ல காரமான ஒரு சட்னியையும், மறுபுறம் வேறு ஒரு சட்னியும் தடவி இரண்டுக்கும் நடுவே, பீட்ரூட், கேரட் கலவையை வைத்து சாண்ட்விட்ச் போல் அப்படியே சாப்பிடுவதே தட்டுவடை செட். சொல்லும் போது, இவ்வளவுதானா? இது என்ன பிரமாதம்?'என்று கூறலாம். ஆனால், ஒரு முறை இந்த தட்டையை சாப்பிட்டவர்கள் கண்டிப்பாக வாழ்நாள் முழுக்க மறக்க மாட்டார்கள் என்பதே உண்மை. வேண்டாம் என்று சொன்னவர்கள் எல்லாம் இன்று இதற்கு அடிமை என்பது தான் உண்மை என்கிறார் மோகன் ராஜ்.
அப்படி என்ன ஸ்பெஷல்?
இந்த சேலத்து தட்டுவடையின் ஸ்பெஷலே, அதில் வைத்துத் தரப்படும் சட்னியில் தான் உள்ளது. அதிலும் சேலம் முழுதும் சுற்றினால் நூற்றுக்கணக்கான வகை சட்னிகளுடன் தட்டுவடையை ருசிக்கலாம் என்கிறார்.. சேலம் சாரதா காலேஜ் ரோடு, கடைவீதி, செவ்வாய்ப்பேட்டை உள்பட சில இடங்களில் மிக அருமையான சுவையுடன் கிடைக்கும் இந்த தட்டுவடைக்கு இந்த ஊர் மக்கள் அடிமைதான். ஆமாங்க.. எப்போதும் பல கூட்டங்கள் இங்கு நிரம்பி வழியுமாம்.
அதிக விலையோ?
இதன் விலை மிக மிக குறைவு தான். 10 ரூபாயிலிருந்து ஆரம்பமாகும் இந்த விலை. 30 வரையில் தான் இருக்கிறதாம், அதிலும் நம்ம சேலத்து மோகன் வைத்திருக்கும் சேலம் தட்டு வடை செட்டு கடையில் கம்பு உருண்டை, ராகி உருண்டை, குதிரை வாலி உருண்டை, திணை உருண்டை, சாமை உருண்டை, சோளம் உருண்டை, சிவப்பு சோள உருண்டை, சிகப்பு அரிசி உருண்டை, வரகு உருண்டை, கொள்ளு உருண்டை, வெள்ளை எள் உருண்டை, நரி பயிறு உருண்டை, கோதுமை உருண்டை, கருப்பு எள் உருண்டை, பாசிப்பருப்பு உருண்டை, நிலக்கடலை உருண்டை என பலவகைகள் விற்பனை செய்யப்படுவதாகவும், இவை பாரம்பரியத்தை கொண்டு செய்யப்படுவாதாகவும், குறிப்பாக ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு செய்யப்படுவதாகவும் கூறுகிறார் மோகன்.
விற்பனை எப்படி?
மாலை 4.30 மணிக்கு திறக்கப்படும் இந்த கடைகள், இரவு 9.30 மணி வரை இருக்கும் என்கிறார் நம்ம மோகன் ராஜ். தினசரி மொத்தம் 1000 - 2000 வரை தட்டுவடை செட்டுகள் விற்பனையாகும். அதிலும் தற்போது உடலுக்கு ஆரோக்கியம் தரும் உருண்டைகளும் மிகப் பிரபலமாகி வருகின்றன என்கிறார்.
ஐ.டி பார்க் பக்கத்தில் தான் ஷாப்?
இந்த "சேலம் தட்டு வடை செட் கடை" கோயமுத்தூர் ஐ.டி பார்க் உள்ள கீரணத்தம் பகுதியில் தான் உள்ளது இந்த தட்டுவடை கடை. சேலத்தின் சுவையில், தற்போது கோயமுத்தூரிலும் கிடைக்கிறது. கொஞ்சம் நடையை கட்டித்தான் பார்ப்போமே. எப்படிதான் இருக்கிறது இந்த டேஸ்ட் என்று...