டெல்லி: சமீபத்தில் தான் ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கலாம் என மத்திய அரசு சலசலத்துக் கொண்டிருந்தது.
அதோடு, வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய Railways-க்கு 50 லட்சம் கோடி ரூபாயாவது முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும் எனச் சொன்னார் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல்.
இப்படி எல்லாம் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க, ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கங்கள் எல்லாம் ஒரு பக்கம் தனியார்மயம் கூடாது என போராடிக் கொண்டிருக்க ரயில்வே நிர்வாகம் அசால்டாக இரண்டு ரயில்களை தனியார் இயக்க அதிரடி வேலைகளில் இறங்கி இருக்கிறது மத்திய ரயில்வே அமைச்சகம்.
டெல்லி லக்னளெ
அதில் ஒன்று டெல்லி - லக்னெள பாதையில் ஓடும் தேஜாஸ் ரயில். மற்றொரு ரயிலை இன்னும் ரயில்வே நிர்வாகம் முடிவு செய்யவில்லையாம். ஆனால் எதைக் கொடுக்கலாம் என பயங்கர கவனத்துடன் ஆலோசித்து வருகிறார்களாம். ஆனால் அடுத்து கொடுக்க இருக்கும் ரயிலும் 500 கிலோமீட்டர் வழித் தடம் கொண்டு ரயிலாக இருக்கும் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.
அடுத்த 100 நாள்
அடுத்த 100 நாட்களுக்குள், சோதனை முயற்சியாக இந்த இரண்டு ரயில்களில் ஒன்று தனியார் இயக்கத்தின் கீழ் ஓடத் தொடங்குமாம். இப்போது இரண்டாவது ரயிலுக்கான தேடலும் இந்த டெல்லி - லக்னெள வழித் தடத்தில் ஓடும் ஒன்றாக இருக்கலாம் என்கிறார்கள் ரயில்வே அதிகாரிகள்.
2-வது ரயில்
இப்போது டெல்லி - லக்னெள வழித் தடத்தில் 53 ரயில்கள் ஓடுகிறதாம். அந்த 53 ரயில்களில் அதிக தேவை இருக்கும் ரயில்களில் சுவர்ன சதாப்தி ரயிலும் ஒன்றாம். இந்த ரயில் வெறும் 6 மணி 30 நிமிட நேரத்தில் பயண தூரத்தை கடந்துவிடுமாம். ஆக இதைக் கூட தனியார் சோதனை ஓட்டத்துக்கு கொடுக்கப்படலாம் என்கிறார்கள்.
ஏலம்
தற்போது உத்திரப் பிரதேசத்தில் ஆனந்த் நகர் ரயில் நிலையத்தில் அனாமத்தாக நிறுத்தப்பட்டிருக்கும் தேஜாஸ் ரயிலுக்கு முறையாக முதலில் ஏலம் நடத்தப்படும். திறந்த ஏலத்தில், தேஜாஸ் ரயிலை நல்ல விலைக்கு ஏலம் எடுக்கும் தனியார் நிறுவனத்துக்கு, தேஜாஸ் ரயிலை இயக்குவதற்கான உரிமை வழங்கப்படும் எனச் சொல்லி இருக்கிறது ரயில்வே நிர்வாகம்.
போராட்டம்
இப்போது மத்திய அரசின் முடிவுகளை கடுமையாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள் ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் யூனியன். மேற்கொண்டு தனியார் மயப்படுத்தினால் பெரிய போராட்டங்களை நடத்துவோம் எனவும் மத்திய அரசுக்கு லைட்டாக பயம் காட்டி இருக்கிறார்கள். இதுவரை மத்திய அரசு மக்களையோ, ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களையோ மதித்து எதையும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.