டெல்லி : என்னதான் பேச்சு பேச்சாக இருந்தாலும், காரியத்தில் கண்ணாகவே இருக்கிறார் நம்ம அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப். ஒரு புறம் நாம் இணைந்து வர்த்தகம் செய்யலாம். அதோடு இன்னும் பல புது வர்த்தகத்தில் ஈடுபடுவோம் என்று கூறியவர், தற்போது மீண்டும் இந்தியாவுக்கு எதிராக களத்தில் குதித்துள்ளார்.
அட ஆமாங்க.. ட்விட்டரில் இந்தியாவைச் எச்சரித்துள்ளார். அதிலும் இந்தியாவின் இந்த அதிகப்படியான வர்த்தக வரியை ஒரு போதும் ஏற்க முடியாது என்றும் அதிரடியாய் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளாராம்..
ஒரு புறம் அமெரிக்கா சீனா பிரச்சனைக்கு தீர்வு காணப்படவில்லை என்றாலும், தற்போது மிக அமைதியாக சென்று கொண்டிருக்கிறது. அதே நேரம் ஈரானுடன் இனி அவ்வப்போது மோதி வந்த டிரம்பிற்கு, தற்போது இந்தியாவின் நியாபகம் வந்து விட்டது போலும்.
இந்தியாவுக்கு எச்சரிக்கை?
என்ன தான் பேச்சு பேச்சாக இருந்தாலும், அவ்வப்போது இந்தியாவை எச்சரிக்கை விடுத்தால் தான் மனுசனுக்கு தூக்கம் வரும் போல. அதிலும் இந்த வாரம் நடக்கவிருக்கும் அமெரிக்கா- இந்தியா இடையேயான உத்தியோகபூர்வ அளவிலான வர்த்தக பேச்சு வார்த்தைகளுக்கு முன்னதாக, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவின் இந்த உயர் கட்டண கொள்கையை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் மீண்டும் எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா – இந்திய கட்டண பிரச்சனை நீண்ட காலமாக உள்ளது?
அமெரிக்காவுக்கு நீண்ட காலமாக அதிக வரி விதித்து வரும் இந்தியாவின் வரிக் கொள்கையை இனியும் ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் டிரம்ப் கடந்த செவ்வாய் கிழமையன்று ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அமெரிக்கா முன்னதாக பல முறை வரி விகிதம் மிக அதிகம் என்று கூறி வந்த நிலையில், கடந்த வருடமே உலக வர்த்தக அமைப்பில் இது குறித்து முறையிட்டது குறிப்பிடத்தக்கது.
அதிக வரி விதிப்பு வேண்டாம்?
இதை பல முறை அமெரிக்கா சொல்லி பார்த்தும், இந்தியா செவி மடுத்ததாக இல்லை என்ற நிலையில், இந்தியாவுக்கு கிடைத்த ஜி.எஸ்.பி வரி சலுகையை அதிரடியாக ரத்து செய்தார் டொனால்டு டிரம்ப். இந்த நிலையில் இதை ஏற்றுக் கொண்ட இந்திய அரசு, இதற்கு பதிலடி கொடுப்பதாக அமெரிக்காவின் பொருட்களுக்கு அதிரடியாக வரியை உயர்த்தியது. ஆமாங்க.. ஆப்பிள் பாதாம் உள்ளிட்ட 28 அமெரிக்க பொருட்களுக்கு இந்தியா வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதோடு ஜூலை-5ல் அலாய் ஸ்டீல் மற்றும் கார் பாகங்கள் உள்ளிட்ட பல தயாரிப்புகளில் சுங்க வரிகளையும் இந்தியா உயர்த்தியது .
முட்டுக்கட்டையை உடைத்தெரிய ஆயத்தம்?
இந்த நிலையில் இந்தியா - அமெரிக்கா இடையே நிலவி வரும் வர்த்தக முட்டுக் கட்டைகளை உடைத்தெரிய, இந்த இரு நாட்டு அதிகாரிகளும் இந்த வாரத்தில் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக அமெரிக்காவின் வர்த்தக பிரதிநிதி கிறிஸ் வில்சன் மற்றும் துணை உதவியாளர் பிரெண்டன் லிஞ்ச் ஆகியோர் இந்திய அதிகாரிகளை சந்தித்து பேசுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுல எதும் சூழ்ச்சி இருக்கலாம்?
உலக வர்த்தக அமைப்பின் இந்தியாவின் முன்னாள் தூதர் அயந்த் தாஸ் குப்தா, இந்தியாவிலிருந்து அதிகமானவற்றைப் பெறுவதற்கான, ஒரு சூழ்ச்சியாக கூட இந்த அழுத்தம் இருக்கலாம். அதிலும் நடப்பு வாரத்தில் நடவிருக்கும் இந்த பேச்சு வார்த்தைகளுக்கு முன்னால், இந்த அழுத்தம் எதற்காக என்றும் கேள்வுயெழுப்புகிறார். கடந்த மாதம் மோடியுடனான பேச்சு வார்த்தைக்கு முன்பு இதே போல் ட்வீட் செய்துள்ளதையும் குறிப்பிட்டுள்ளார்அயந்த். தற்போது அதே முறையை தான் தற்போது மீண்டும் பின்பற்றுகிறார் என்றும் கூறியுள்ளார்.
மாநாட்டில் என்ன நடந்தது?
ஜூன் 27ம் தேதி அன்று ஒசாகா மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க ஜனாதிபதியும் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போது, இதன் முக்கிய அம்சமாக வர்த்தகமே கருதப்பட்டது. இந்த நிலையில் இது குறித்து விளக்கமளித்த வெளிவிவகார துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார், ஒசாகாவில் மோடி - டிரம்ப் இரு தரப்பிலும் விவாதிக்கப்பட்ட முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வர்த்தகம் என்றும், இந்தியா அமெரிக்கா போன்ற பல பரிணாமங்களை கொண்ட எந்தவொரு உறவிலும், சில வேறுபாடுகள் இருக்க வேண்டும். அதோடு நாம் வேறுபட்ட அணுகு முறையைக் பகிர்ந்து கொள்ள முன்னோக்குகளாக இருக்க வேண்டும் என்றும். நடந்த எல்லா பிரச்சனைகளும் நாங்கள் அறிந்தது தான். இதற்கு ஒரு சரியான தீர்வை பேச்சு வார்த்தை மூலம் காணுவோம் என்றும் இரு தரப்பினரும் கூறியிருந்தனர் என்று கூறியுள்ளார்.
இந்தியா “tariff king"
இந்தியா ஒரு "tariff king" என்று அடிக்கடி டிரம்ப் கூறுவது தான் என்றாலும், அதை மறக்காமல் இம்முறையும் உச்சரித்துள்ளார். அதேபோல ஹார்லி டேவிட்சன் சைக்கிள்களின் இறக்குமதி வரி 50 சதவிகிதம் என்பதையும் மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார்.