டெல்லி: இந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில், இந்தியாவின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கடன் தொகைக்கான வட்டியில் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரிக் கழிவு கொடுத்து ஊக்குவித்திருக்கிறது மத்திய அரசு. அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்த விரும்புகிறது Hyundai.
தென் கொரியாவின் மிகப் பெரிய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான Hyundai கார் நிறுவனம் அடுத்த மூன்று ஆண்டுகளில் சுமார் 1400 கோடி ரூபாயை முதலீடு செய்து, நவீன ரக, விலை மலிவான, இந்திய ஆட்டோமொபைல் சந்தைக்கு தகுந்த எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவிலேயே தயாரிக்க இருக்கிறார்களாம்.
இந்திய வாடிக்கையாளர்களுக்கு தனியாக ஒரு எலெக்ட்ரிக் வாகன ஆர்கிடெக்சரையும் பயன்படுத்தப் போவதாக Hyundai இந்தியாவின் நிர்வாக இயக்குநர் எஸ் எஸ் கிம் சொல்லி இருக்கிறார்.
ஏற்கனவே Hyundai இந்தியா, தென் கொரியாவில் இருக்கும் நாம்யங் (Namyang) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் இருக்கும் பொறியாளர்களோடு இணைந்து எலெக்ட்ரிக் கார்களை வாங்குபவர்கள் என்ன எதிர்பார்ப்பார்கள், எவ்வளவு தூரம் பயணிக்கக் கூடியதாக இருக்க வேண்டும், என்ன விலையில் எலெக்ட்ரிக் கார்கள் இருக்க வேண்டும் என பலவற்றையும் ஆலோசித்து மதிப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களாம்.
இந்த மதிப்பீடுகள் எல்லாம் முடிந்து தீர்மானிக்கப்பட்ட பின் தான் கார் உற்பத்தியில் களம் இறங்கும் என்கிறார்கள் துறை சார் வல்லுநர்கள். Hyundai நிறுவனம் தன், 25 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்ட எஸ் யூ வி ரக, கோனா எலெக்ட்ரிக் கார்களை அறிமுகப்படுத்தும் கூட்டத்தில் இந்த விஷயங்களை எல்லாம் சொல்லி இருக்கிறார்.
அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்குள், Hyundai நிறுவனமே ஒரு தனி லித்தியம் ஐயான் பேட்டரி உற்பத்தி ஆலையை இந்தியாவில் நிறுவுவதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார்களாம். ஒருவேளை அடுத்த 3 ஆண்டுகளில், இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் பெரிய அளவில் சந்தையைப் பிடித்துவிட்டால், இந்த புதிய லித்தியம் ஐயான் தொழிற்சாலை அப்போது உள்நாட்டு சந்தைக்கு அவசியமானதாக இருக்கும் எனச் சொல்லி இருக்கிறார் Hyundai இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் எஸ் எஸ் கிம்.