தஞ்சாவூர் : சூரியனுக்கும் கூட தலைவணங்காத கோவில் நம்மூர் தஞ்சை பெரிய கோவில் தான். இது தமிழர்களின் பெருமையை பறை சாற்றுவதோடு, உலக முழுக்கவும் இதன் புகழ் பரவிக் கிடக்கிறது என்றே சொல்லலாம்.
இந்த நிலையில் தஞ்சாவூரில் தஞ்சை பெரிய கோவில் மட்டும் அல்ல, நம்ம அண்ணன் நாசரின் இடியாப்பமும், அதற்கு கொடுக்கப்படும் பாயாவும் கூட ஸ்பெஷல்தான் என்கிறார்கள் அந்த ஊர்க்காரர்கள்.
அதிலும் குடும்பமே இணைந்து செயல்படும் இந்த கடை, இன்று நேற்றல்ல கடந்த 35 வருடங்களாக தங்களது ருசிகர உணவை மக்களுக்கு வழங்கி வருகிறது நம்ம நாசர் இடியாப்பம் பாயா உணவகம்.
அப்படியென்ன ஸ்பெஷல்?
தஞ்சாவூரில் சின்ன குழந்தைக்கும் கூட தெரியாமல் இருக்காது நம்ம நாசர் இடியாப்பம் உணவகம். இங்கு தரப்படும் இடியாப்பமும், ஆட்டு கால் பாயாவும் அப்படி ஒரு ஸ்பெஷல் என்கிறார்கள் அவ்வூர் மக்கள். அனைவரையும் சப்புக் கொட்டி சாப்பிட வைக்கும் இந்த பாயாவும் இடியாப்பமும் இவர்களின் தாரக மந்திரமாம். பல தரப்பட்ட ருசியான உணவுகள் வழப்பட்டாலும் இடியாப்பம் தான் இங்கு ரொம்ப பேமஸாம்.
பழையகால நடைமுறை?
இந்த உணவகம் 35 வருட பழமையான உணவகம் என்றாலும், இங்கு செய்யப்படும் உணவு செய்முறையும் மிகப்பழமையானதே. ஆமாங்க.. அதிலும் இடியாப்பம் செய்வது பனையோலைகளில் பின்னப்பட்ட கூடைகள் போல் இருக்கும், பின்னப்பட்ட அடுக்கடுக்கான சிறு கூடைகளை, அடுக்கடுக்காக அடுக்கி வேக வைக்கிறார்கள். அதையும் மக்களின் கண் முன்னே செய்வது தான் இவர்களின் வெற்றி என்கிறார்கள்.
எத்தனை மணி வரைக்கும் இருக்கும்?
காலையில் 11 மணிக்கு திறக்கப்படும் இந்த உணவகம் மாலை 3 மணிக்கு மூடப்பட்டு 1 மணி நேரம் இடைவெளியாம். இந்த இடைவெளியில் ஹோட்டலை கழுவி சுத்தப்படுத்த எடுத்துக் கொள்ளப்படும் நேரம் என்கிறார்கள். இதுவே மாலை மீண்டும் 4 மணிக்கு திறந்தால், மீண்டும் இரவு 11 மணி வரை இருக்குமாம். அதோடு எந்த நேரமாக இருந்தாலும் உணவு இல்லை என்று கூற முடியாத அளவுக்கு இருந்து கொண்டே இருக்கும் என்றும் கூறப்படுகிறது. .
அன்னிய நாடுகளை சேர்ந்தவர்களும் வருவார்கள்?
இந்த நாசர் இடியாப்ப கடையை பொறுத்த வரை உள்ளூர் வாடிக்கையாளர்களே அதிகமாம். ஏனெனில் ஒரு முறை இவர்களின் உணவை சுவைத்து பார்த்து விட்டால் மறு முறை சுவைக்காமல் இருக்க முடியாது என்கிறார்கள். அதோடு பெரியவர் குழந்தைகள் என்று அனைவருக்கும் ஏற்றாற்போல் இங்குள்ள பாயா வகைகளும் குழம்பு வகையும் தயார் செய்யப்படுமாம். இதில் குறிப்பிட பட வேண்டிய விஷயம் என்னவெனில் தஞ்சாவூருக்கு சுற்றுலா செல்லும் உள்நாட்டு பயணிகளாகட்டும், வெளிநாட்டுகாரர்களாகட்டும், இவர்களின் கடையையே தேடி வருவது தான் வழக்கமாம். அதனாலேயே கூட்டம் எப்போதும் கணிசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
மழை பெய்தாலே உணவகத்தில் கூட்டம் அதிகரிக்கும்?
தஞ்சாவூரில் மழை என்றாலே நாசர் இடியாப்ப கடையில் திருவிழாதானாம். ஆமாங்க.. அந்தளவுக்கு கூட்டம் அதிகமாக இருக்குமாம். எந்த மழையாக இருந்தாலும் சரி, வெய்யிலாக இருந்தாலும் சரி கடை இருக்குமாம். ஆரம்ப காலத்தில் தள்ளுவண்டியிலே கடை வைத்திருந்த சகோதரர்கள், மழை என்றாலும் சரி வெயிலானலும் சரி குடை பிடித்துக் கொண்டாவது சமைத்துக் கொடுப்பார்களாம். அதனாலேயே இன்று மக்களால் அதிகம் விரும்பபடுவதாகவும் கூறுகிறார்கள் இந்த வெற்றி சகோதரர்கள். இதில் அவர்கள் குறிப்பிட்டு சொல்லும் ஒரு விஷயம் என்னவெனில் வருஷத்தில் 365 நாளில், 364 நாட்களும் கடை இருக்கும் என்பதே.
குறைகளையும் கேட்டுக் கொள்வோம்?
எங்களது கடைக்கு வாடிக்கையாளர்கள் திரும்ப திரும்ப வருகிறார்கள் என்றால், அதற்கு சுத்தமான, மிகத் தரமான உணவு மட்டுமே காரணம் என்கிறார்கள். அதோடு அப்படி ஏதேனும் வாடிக்கையாளர் குறை சொன்னாலும் கூட அதைக் தீர்க்க முற்படுவார்களாம். அதோடு மிகக் கடும் கோபக்காரர்கள் கூட இந்த உணவகத்திற்கு வந்தால், சிரித்துக் கொண்டே மீண்டும் வருவார்களாம். அந்தளவு முகம் சுளிக்காமல் சேவை கொடுப்போம் என்கிறார் இந்த சகோதரர்களில் ஒருவர்.
அனவருக்கும் பொருந்தும் விலையா?
இவ்வளவு கூட்டம் இருக்கே, விலை அதிகமாக இருக்குமோ என்று கவலைப்பட வேண்டாம். சாதாரணமாக 4 பீஸ் 30 ரூபாயாம். இதற்கு சிக்கன் குருமா, மட்டன் குருமா, வெஜ் குருமா என நான்கு விதமான குருமாக்கள் தயார் செய்யப்படுகின்றவாம். இது தவிர ஸ்பெஷல் மட்டம் பாயா பிளேட் 110 ரூபாயாம். வேண்டுமென்றால் அதையும் வாங்கிக் கொள்ளலாம் என்கிறார்கள். அதோடு குழந்தைகளுக்கு பிடித்தவாறு காரம் குறைவாக இருக்கும். பெரியவர்களுக்கு ஏற்றவாறும் இருக்கும், அதானாலேயே குடும்பத்தோடு இங்கு வரும் வாடிக்கையாளர்கள் மிக அதிகமாம்.
ஆட்டோகாரர்களும் இங்கு தான் வருவார்கள்
சுற்றுலா பயணிகளை அதிகளவில் கூட்டிச் செல்லும் ஆட்டோக்காரர்களிடம், ஏதாவது நல்ல உணவகங்களுக்கு செல்ல சொன்னால் அவர்களும், இங்கு தான் கூட்டிக் கொண்டு வருவார்களாம். அதிலும் இரவில் 10 மணிக்கெல்லாம் பல கடைகள் மூடப்பட்டு விடும். ஆனால் நாசர் கடை இருக்கும் என்ற நம்பிக்கையுடன் இங்கு தான் வருவார்கள் என்றும் கூறுகிறார்கள். எப்படியும் தினசரி பல நூறு வாடிக்கையாளருக்கு சளைக்காமல், உணவளிக்கும் இந்த நாசர் இடியாப்ப உணவகத்திற்கு ஒரு ஹேட்ஸ் ஆப்!