டெல்லி : மோடி 2.0 அரசில் இரண்டாவது முறையாக பதவியேற்ற பின்பு,, தனது முதல் பட்ஜெட்டை கடந்த வாரம் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில் அந்த பட்ஜெட் 2019ல் பல முக்கிய அம்சங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல வர்த்தக நிறுவனங்களுக்கு செக் வைக்கும் வகையிலும் ஒரு அறிவிப்பு வெளியானது. அதில் ஒரே ஆண்டில் வங்கி கணக்கில் இருந்து 1 கோடி ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்தால் 2 சதவிகிதம் வரி பிடித்தம் செய்யப்படும் என்று பட்ஜெட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்த நிலையில் ஊழியர்களுக்கு சம்பளம் அளிப்பதற்காக, நிறுவனங்கள் தங்களது வங்கி கணக்கில் இருந்து ரொக்கமாக பணம் எடுக்கின்றன. அதை தவிர்க்க வைக்கும் நோக்கத்தில் தான், இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாக கருதப்படும் நிலையில், கடந்த 2017 - 2018 நிதியாண்டில் பல நிறுவனங்கள் பல கோடி ரூபாயை ரொக்கமாக எடுத்திருப்பது தற்போது தெரிய வந்துள்ளது.
448 நிறுவனங்கள் ரூ.100 கோடிக்கு மேல் பணம் எடுத்துள்ளன?
குறிப்பாக 448 நிறுவனங்கள், வங்கி கணக்கில் இருந்து தலா ரூ.100 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனங்கள் இவ்வாறு எடுத்த மொத்த தொகை ரூ.5.56 டிரில்லியனாகும் (ஐந்து லட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் கோடி ரூபாயாகும்).
2 லட்சம் பேருக்கு மேல் ரூ.1 கோடி!
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில் இதே ஆண்டில், தலா ரூ.1 கோடிக்கு மேல் ரொக்கமாக எடுத்த தனிநபர்கள் கிட்டதட்ட 2 லட்சம் பேராகும். இவ்வாறு நிறுவனங்களும் எடுத்த மொத்த தொகையின் அளவு 11.31 டிரில்லியனுக்கும் அதிகமாக இருக்குமாம்.
ரூ.1 – 2 கோடி பணம் எடுத்தவர்கள்!
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், 1 முதல் 2 கோடி ரூபாய் வரை எடுத்த நிறுவனங்கள் எண்ணிக்கை 1.03 லட்சமாகும். இந்த நிறுவனங்கள் எடுத்த மொத்த தொகையின் அளவு 1.43 லட்சம் கோடி ரூபாயாகும். இதுவே 58,160 நிறுவனங்கள் தலா ரூ.2 முதல் 5 கோடி வீதம், மொத்தம் ரூ.1.75 லட்சம் கோடியை எடுத்துள்ளனவாம்.
ரூ.5 -10 கோடி பணம் எடுத்தவர்கள்!.
இதுவே ரூ.5 முதல் ரூ.10 கோடி வீதம் 14,552 நிறுவனங்கள், மொத்தம் ரூ.98,900 கோடியை எடுத்துள்ளனராம். இதில் ரூ. 10 முதல் 100 கோடி வரையில் 7,300 பேர், மொத்தம் ரூ.1.57 லட்சம் கோடியை எடுத்துள்ளனராம். அதிக பட்சமாக 100 கோடி ரூபாய்க்கும் மேல் கிட்டதட்ட 448 நிறுவனங்கள் எடுத்தும் உள்ளனவாம்.