டெல்லி: வரும் 2019 ஜூலை 12-ம் தேதி, அன்று இந்தியா மற்றும் அமெரிக்கா இரு நாட்டு தரப்பும் வர்த்தகப் பிரச்னை மற்றும் இறக்குமதி வரிப் பிரச்னை தொடர்பாக ஒன்று கூடி பேசப் போகிறார்களாம்.
அமெரிக்கா தரப்பில் அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் குழு, இந்தியாவின் வணிக அமைச்சக உயர் அதிகாரிகளோடு பேச்சு வார்த்தை நடத்தப் போகிறார்களாம்.
அமெரிக்கா மற்றும் இந்தியா இரு நாட்டு தரப்பும் சந்திக்க இருப்பதை இந்தியாவின் வெளியுறவுத் துறைச் செயலர் விஜய் கோகலே சொன்னதாக, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக பத்திரிகைத் தொடர்பாளர் ரவீஷ் குமார் கடந்த வியாழக்கிழமை அன்று பத்திரிகையாளர்களிடம் சொல்லி இருந்தார். இப்போது தான் தேதி உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
சில வாரங்களுக்கு முன் ஜப்பானில் நடந்த ஜி20 மாநாட்டில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சந்தித்துப் பேசிய பிறகு, வர்த்தகப் பிரச்னை தொடர்பாக, இரு நாட்டு பிரதிநிதிகளும் சந்தித்துக் கொள்ளும் முதல் சந்திப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே இருநாட்டுக்கும் இடையிலும் கொஞ்சம் வர்த்தக விவரங்களில் உரசிக் கொண்டிருந்த போது, அமெரிக்கா தன் இஷ்டப்படி, ஜூன் 05, 2019-ல் Generalized system of Preference பட்டியலில் இருந்து இந்தியாவை நீக்கியது. அமெரிக்காவின் இந்த திடீர் நடவடிக்கையால், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு இறக்குமதி வரி உடன் வியாபாரம் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார்கள் இந்திய வணிகர்கள்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய அரசும், அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் 25 பொருட்களுக்கு இறக்குமதி வரி விதித்து ட்ரம்புக்கு கிலி கிளப்பியது. அதன் பிறகு தான் ட்ரம்ப் இறங்கி வந்து "என்னங்க, நீங்க அமெரிக்க பொருட்கள் மேல விதிச்சிருக்குற வரி சரியில்ல" என தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.
அதன் பிறகு மைக் பாம்பியோ டெல்லிக்கு வந்திருந்த போது கூட, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் சில வர்த்தகப் பிரச்னைகள் இருப்பது உண்மை தான். ஆனால் அதை கூடிய விரைவில் சரி செய்ய இருப்பதாகச் சொல்லி இருந்தார். அதை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரும் ஆமோதித்தார்.