டெல்லி: ரயில் பயணிகளின் வசதியை அதிகரிக்கும் வகையில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வரும் அக்டோபர் மாதம் முதல் கூடுதலாக 4 லட்சம் படுக்கை வசதிகளை கொண்ட பெட்டிகள் இணைக்கப்படும் என்று இந்தியன் ரயில்வே அறிவித்துள்ளது. படிப்படியாக டீசலுக்கு விடை கொடுத்து விட்டு மின்சாரத்திற்கு முழுமையாக மின்சாரத்தில் இயங்கும் தொழில் நுட்பத்திற்கு மாற தயாராகி வருகிறது.
நாட்டில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் அனைத்து ரயில்களிலும் கடைசி பெட்டியாக இருக்கும் மின் உற்பத்தி பெட்டி நீக்கப்பட்டு அதற்கு பதிலாக, அனைத்து ரயில்களிலும் புதிதாக படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றப்பட உள்ளது. இதற்கான புதிய தொழில்நுட்பத்தை இந்திய ரயில்வே துறை பயன்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது.
தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரயில் பெட்டிகளின் கடைசி பெட்டியில் இருக்கும் ஜெனரேட்டர்கள் படிப்படியாக நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக எச்ஓஜி(HOG) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதனால் டீசல் செலவும் மிச்சமாகும். மேலும் சுற்றுப்புறச்சூழலுக்கும் எந்தவிதமான கெடுதலும் ஏற்படாது என்பது இதன் சிறப்பம்சமாகும்.
செங்குன்றம் டு சிந்தாதிரிப்பேட்டை
இந்திய ரயில்வே, உலகின் மிகப்பெரிய ரயில்வே அமைப்புகளில் ஒன்றாகும். இந்தியாவில் முதல் ரயில் 1837ஆம் ஆண்டில் சென்னை செங்குன்றம் முதல் சிந்தாதிரிப்பேட்டை வரை பாலம் வரையிலும் ஓடியது. பின்னர் ரயில் சேவை 1853ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ரயில்வே துறையை மத்திய அரசு எடுத்துக்கொண்டதோடு அரசுடைமை ஆக்கப்பட்டது. இதில் சுமார் 16 லட்சம் ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.
லாபத்தில் ரயில்வே துறை
இந்தியாவில் ரயில் சேவை தொடங்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து நட்டத்தில் இயங்கிவந்த சோக வரலாற்றை முதன் முதலாக லாபத்தில் இயங்கும் நிறுவனமாக மாற்றிய பெருமை முன்னாள் ரயில்வே அமைச்சரான லாலு பிரசாத் யாதவையே சேரும். இதன் காரணமாகவே வெளிநாட்டு மாணவர்கள் பலர் இவரிடம் ரயில்வே துறையை லாபத்தில் இயக்குவது எப்படி என்பது பற்றி கற்றுக்கொள்வதற்கு வந்த வரலாறும் உண்டு.
கூடுதல் படுக்கை வசதி
அதே போல், ரயில்வே துறையில் புதுமைய புகுத்தியவர் ரயில்வே துறையின் முன்னாள் இணை அமைச்சரான ஆர்.வேலு தான். இவர் கடந்த 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரையிலும் ரயில்வே இணையமைச்சராக இருந்தபோது, சில குறிப்பிட்ட வழித்தடங்களில் ஓடிக்கொண்டிருந்த ரயில்களில், கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பக்கவாட்டு படுக்கை வசதி கொண்ட இருக்கைகளையும் வழக்கம்போல் மூன்று படுக்கை வசதிகள் கொண்ட இருக்கைகளாக மாற்றி சாதனை படைத்தார். இதன் காரணமாக ரயில்வேயின் வருவாய் கணிசமாக உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.
காத்திருப்போர் பட்டியல்
பொதுவாகவே, சாதாரண நாட்களில் நாட்டின் பெரும்பாலான ரயில்களில் படுக்கை வசதிகள் கொண்ட இருக்கைகள் கிடைப்பது மிக கடினமாகும். அதுவும் தமிழ்நாட்டில் சென்னையில் இருந்து கடைக்கோடி தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் தினமும் கூட்டம் அலைமோதும். காத்திருப்போர் பட்டியலே 300 பேர்களை தாண்டி இருக்கும். இதனால் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போவதோடு, பெரும்பாலானவர்கள் நின்றுகொண்டே பயணிப்பதும் நடந்து வருகிறது.
நீளும் காத்திருப்போர் பட்டியல்
அதுவே, தீபாவளி மற்றும் தைப் பொங்கல் போன்ற திருவிழா காலங்களில் என்றால் சொல்லவே வேண்டாம். முன்பதிவு செய்யும் நாளில் காலை 8 மணிக்கே அனைத்து தென்மாவட்ட ரயில்களிலும் அனைத்து இருக்கை வசதி மற்றும் படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் எல்லாமே முன்பதிவு வசதி முடிந்து காத்திருப்போர் பட்டியலே மேலும் 10 ரயில்களில் பயணிக்கும் அளவிற்கு நீண்டிருக்கும். இதனால் தென்மாவட்ட பயணிகள் அனைவரும் தங்களுக்கு கூடுதலாக ரயில்கள் தேவை என்று அன்றாடம் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
மாற்றம் முன்னேற்றம்
இதையடுத்து, ரயில்வே துறை அனைத்து வழித்தடங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் ரயில்களில் மாற்றங்களை கொண்டுவரும் முயற்சியில் இறங்கியுள்ளது. தற்போது அனைத்து ரயில்களிலும் கடைசி பெட்டியாக இருக்கும் மின்சார-உற்பத்தி(Power Generation) பெட்டியை முற்றிலும் மாற்றிவிட்டு அதற்கு பதிலாக படுக்கை வசதி கொண்ட பெட்டிகளாக மாற்ற திட்டமிட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்பத்தை ரயில்வே துறை பயன்படுத்த உள்ளது.
என்ட் ஆஃப் ஜெனரேசன்
நாட்டில் தற்போது தொலைதூரங்களுக்கு செல்லும் அனைத்து ரயில்களிலும் விரைவு (Express). அதிவிரைவு (Super Fast) மற்றும் இண்டர்சிட்டி விரைவு (Intercity) மற்றும் சதாப்தி விரைவு (Sathapthy Express) வண்டிகளில் எல்லாம் இந்த மின்-உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர்கள் உள்ள பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும் (End of Generation-EOG) என்பது ரயில் பயணிகள் பெரும்பாலானவர்கள் அறிந்திருக்கக்கூடும்.
மின்கம்பத்தில் இருந்து நேரடியாக
ரயிலின் கடைசி பெட்டியில் உள்ள மின்-உற்பத்தி பெட்டியில் இருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம் தான் ரயில் வண்டியின் அனைத்து பெட்டிகளிலும் உள்ள மின் விளக்குகள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் மின் விசிறிகள் இயங்கிக் கொண்டிருக்கும். ஆனால் ரயில் இன்ஜின் இயங்குவதற்கு தேவைப்படும் மின்சாரம் மட்டுமே மின் கம்பத்தில் இருந்து நேரடியாக எடுத்தக்கொள்ளப்படுகிறது.
ஹெட்-ஆன்-ஜெனரேசன்
இந்திய ரயில்வே தற்போது இந்த தொழில்நுட்பத்தை மாற்றி ஹெட்-ஆன்-ஜெனரேஷன் (Head-on-Generation-HOG) என்னும் தொழில்நுட்பத்தை பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் பல்வேறு நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இந்தியாவும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த தயாராகிவிட்டது.
அனைத்திற்கும் பயன்படுத்தலாம்
இந்தியாவில் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பத்தின் மூலம் மின் கம்பியில் இருந்து ரயில் இன்ஜினுக்கு மட்டுமே மின்சாரம் எடுத்துச்செல்ல முடியும். இந்த தொழில்நுட்பத்திற்கு பான்டோகிராப் (Pantograph) என்று பெயர். இத்தொழில்நுட்பத்தின் மூலம் ரயில் இன்ஜினை மட்டுமே இயக்கமுடியும். ஆனால், எச்ஓஜி (HOG) தொழில்நுட்பத்தின் மூலம் ரயில் இன்ஜினுக்கு மட்டுமல்லாது ரயிலின் அனைத்து பெட்டிகளுக்கும் மின்சாரத்தை எடுத்து பயன்படுத்த முடியும். மின் விளக்குகள், மின் விசிறி மற்றும் குளிர்சாதன வசதிகளையும் பயன்படுத்த முடியும்.
கூடுதலாக 4 லட்சம் படுக்கைகள்
தற்போது நாட்டில் புழக்கத்தில் இருக்கும் ரயில்களில் உள்ள சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் உற்பத்தி செய்யும் ஜெனரேட்டர் பெட்டிகள் சீரமைக்கப்பட்டு படுக்கை வசதிகள் கொண்ட பெட்டிகளாக மாற்றம் செய்யப்படும். இதன்மூலம் தினசரி ரயில்களில் பயணிக்கும் பயணிகளுக்கு கூடுதலாக சுமார் 4 லட்சம் படுக்கைகள் கிடைக்கும். இவ்வாறு மாற்றம் செய்யப்படுவதற்கு மத்திய அரசுக்கு சுமார் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரையிலும் செலவுகள் குறையும் என்று தெரிகிறது.
கெடுதல் இல்லை
இது பற்றி விளக்கமளித்த ரயில்வே துறை உயரதிகாரிகள், தற்போது பயன்பாட்டில் இருக்கும் ரயில் பெட்டிகளின் கடைசி பெட்டியில் இருக்கும் ஜெனரேட்டர்கள் படிப்படியாக நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக எச்ஓஜி(HOG) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும். இதனால் டீசல் செலவும் மிச்சமாகும். தற்போது ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு 40 லிட்டர் டீசல் செலவாகிறது. ஏசி பெட்டிகளுக்கு 70 லிட்டர் டீசல் செலவாகிறது. ஆனால் ஒரு லிட்டர் டீசலுக்கு 3 யூனிட் மின்சாரமே உற்பத்தி செய்யப்படுகிறது. இதனால் சுற்றுப்புறச்சூழலுக்கும் எந்தவிதமான கெடுதலும் ஏற்படாது என்று தெரிவித்தார்.