டெல்லி : ரூ.100 கோடி அபராதம் விதித்த பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசின் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.
குறிப்பாக சென்னை மாநகரில் ஓடும் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகியவை மாசடைந்து விட்டதாகவும், அதை தமிழக அரசு தடுக்க தவறியதாகவும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஜவகர் சண்முகம் என்பவர் உள்பட சிலர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் தீர்ப்பாய தலைவர் நீதிபதி ஏ.கே.கோயல் தலைமையிலான முதன்மை அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது விசாரணை முடிந்து இந்த அமர்வு தீர்ப்பு, அளித்துள்ளது.
இதில் கூவம் ஆறு, அடையாறு, பக்கிங்காம் கால்வாய் ஆகிய நீர்நிலைகள், தங்குதடையின்றி மேன்மேலும் மாசடைந்து வருகின்றன. ஏன் தற்போது அவை சாக்கடைகளாகவே மாறிவிட்டன. இதை தடுக்க தவறிய தமிழக அரசின் தோல்வியையே இந்த வழக்கு காட்டுகிறது.
சென்னையில் நீர்நிலைகளை மாசடைய செய்தவர்களுக்கு அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளனர். மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தயாரித்த 351 மாசடைந்த ஆறுகள் பட்டியலில் மேற்கண்ட 3 நீர்நிலைகளும் இல்லை. இருப்பினும், இவை மாசடைந்து விட்டது என்பதிலோ, அதிகாரிகள் எடுத்த நடவடிக்கை போதுமானதாகவோ இல்லை என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை எனலாம்.
கூவம், அடையாறு ஆறுகளை சீரமைக்க ரூ.104 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதிகாரிகள் இந்த நீர்நிலைகளை பாதுகாக்கும் கடமையில் மெத்தனமாகவே செயல்பட்டுள்ளனர். ஆகவே இதன் மூலம் எங்கள் அதிருப்தியை பதிவு செய்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசின் இந்த தோல்வியை கருத்தில் கொண்டு, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் தமிழக அரசு ரூ.100 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று இடைக்கால உத்தரவு பிறப்பிக்கிறோம்.
மேலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதற்காக இந்த அபராதம் விதிக்கப்படுகிறது என்றும், இந்த அபராத தொகையை சுற்றுச்சூழலை மேம்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாம்.
இந்த நிலையில், பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை கோரிய தமிழக அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர் நீதி மன்றம் இந்த மனுவை தள்ளுபடி செய்ததோடு, அபராதத்தையும் கட்ட உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.