முக்கம், கோழிக்கோடு, கேரளா: பொதுவாக திருமணம் செய்து கொண்ட தம்பதிகளுக்கு சில இடங்களில் மீண்டும் திருமண சான்றிதழ்களைக் கட்டாயமாக கொடுக்க வேண்டி இருக்கும்.
உதாரணமாக: கணவன், மனைவியாக வெளிநாடுகளுக்குச் செல்லும் போது, சொத்துப் பிரச்னைகளில் மனைவி அல்லது கணவனுக்கு பாகம் வரும் போது, பெயர் மாற்றம் செய்யும் போது... என பல சந்தர்ப்பங்களில் இந்த திருமண சான்றிதழ் தேவையாக இருக்கும்.
அப்படி கேரளத்தில் ஒரு தம்பதியினர், தங்களுடைய திருமணச் சான்றிதழைக் கேட்டிருக்கிறார்கள். அதை உடனடியாகத் தராமல் இழுத்தடித்தவர்களின் நிலை தான் இன்று பரிதாபம்.
விண்ணப்பித்தல்
கேரள மாநிலத்தில், கோழிக்கோடு மாவட்டத்தில், முக்கம் பகுதியில் உள்ள துணை பதிவாளர் அலுவலகத்தில் மதுசூதனன் என்பவர் தனக்கு திருமணச் சான்றிதழ் தரும் படி முறையாக அரசு அலுவலகத்தில் விண்ணப்பித்திருக்கிறார். 16 வருடத்துக்கு முன் 2003-ம் ஆண்டே திருமணம் செய்து கொண்டவர் மதுசூதனன். இதில் குறிப்பிட வேண்டிய முக்கியமான விஷயம், இவர் சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் (Provision of Special Marriages act) திருமணம் செய்து கொண்டவர்.
காத்திருப்பு
முக்கம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில், அரசு அலுவலர்களாக இருந்த தேவி பிரசத், சிவராமன் நாயர், டி கே மோகன் தாஸ் மற்றும் பி பி ரிஜேஷ் போன்றவர்கள் முதலில் இந்த தம்பதிகளை கேலிப் பேசி இருக்கிறார்கள். அதன் பிறகு 3 நாட்களுக்கு மேல் திருமண சான்றிதழுக்காக காக்க வைத்திருக்கிறார்கள். வழக்கமாக திருமணச் சான்றிதழ் கேட்டு வருபவர்களுக்கு ஒரே நாளில் தருவது தான் வழக்கமாம். ஆனால் மதுசூதனனை கேலி பேசியதோடு மூன்று நாட்கள் காத்திருப்பு பட்டியலில் வேறு வைத்திருக்கிறார்கள் மேலே சொன்ன 4 அதிகாரிகள்.
மீண்டும் செய்
இதை எல்லாம் விட, அரசு அலுவலர்களாக இருந்த தேவி பிரசத், சிவராமன் நாயர், டி கே மோகன் தாஸ் மற்றும் பி பி ரிஜேஷ் ஆகியோர்கள், பழைய பதிவுகளைத் தேடி எடுப்பது சிரமம் ஆகையால் நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ளுங்கள் உடனடியாக திருமணச் சான்றிதழ் கொடுத்துவிடுகிறோம் என வாய்க்கு வந்த படி பேசி அவமானப்படுத்தி இருக்கிறார்கள். மனம் நொந்து போன மதுசூதனன் தன் வருத்தத்தை ஃபேஸ்புக் வலைப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
தற்காலிக பணி நீக்கம்
இந்த விஷயம் கேரள மாநில அரசின் பதிவுத் துறை அமைச்சர் ஜி சுதாகரன் கவனத்துக்கு வந்திருக்கிறது. உடனடியாக பதிவுத் துறை மேலதிகாரிகளிடம் சொல்லி அந்த நான்கு பேரிடமும் விசாரித்து ஒரு அறிக்கை சமர்பிக்கச் சொல்லி இருக்கிறார். அதோடு அரசு அலுவலர்களாக இருந்த தேவி பிரசத், சிவராமன் நாயர், டி கே மோகன் தாஸ் மற்றும் பி பி ரிஜேஷ் ஆகிய நான்கு பேரையும் தற்காலிக பணி நீக்கம் செய்யவும் உத்தரவிட்டிருக்கிறார் அமைச்சர் சுதாகரன். அதோடு இந்த நான்கு பேரும் மேற்கொண்டு அரசு பணியில் இருக்க சரியானவர்கள் தானா..? என விசாரிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.