டெல்லி: இந்தியாவின் முன்னாள் ஓப்பனிங் பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கின் மனைவி ஆர்த்தி கடந்த மாதம் காவல் நிலையத்தில், தன் பிசினஸ் பார்ட்னர்கள் மீதே ஒரு புகார் கொடுத்திருக்கிறார்.
அந்த புகாரில், தன்னுடைய பிசினஸ் பார்ட்னர்கள், வீரேந்திர சேவாக்கின் மனைவி, ஆர்த்தி சேவாக்கின் கையெழுத்தைப் போலவே வேறு ஒருவர் கையெழுத்து போட்டு மோசடி செய்து, வேறு சில நிறுவனங்களில் இருந்து 4.5 கோடி ரூபாய் கடன் வாங்கி இருக்கிறார்கள். அப்படி வாங்கிய கடனையும் ஒழுங்காகத் திருப்பிச் செலுத்தவில்லை என புகார் கொடுத்திருக்கிறார்.
அதோடு ஆர்த்தி சேவாக்கின் பிசினஸ் பார்ட்னர்கள், வீரேந்திர சேவாக்கின் பெயரை தவறாக பயன்படுத்தி மயக்கி தவறான முறையில் கடன் வாங்கி இருக்கிறார்கள் எனவும் புகார் கொடுத்திருக்கிறார். இந்த கடன் வாங்க மூன்று தரப்பினர் ஒரே ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இந்த மூன்று தரப்பினர்கள் கடன் கொடுக்கும் போது போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில், ஆர்த்தி சேவாக் கையெழுத்துப் போடவில்லை எனச் சொல்லி புகார் கொடுத்திருக்கிறார்.
கடனை சரியான நேரத்தில் திருப்பிக் கொடுக்க, இரண்டு முன் தேதி இட்ட காசோலைகளைக் கொடுத்திருக்கிறார்கள் ஆர்த்தியின் பிசினஸ் பார்ட்னர்கள். கடன் கொடுத்தவர்கள் அந்த தேதிகளில் காசோலைகளில் வங்கியில் கொடுத்த போது வங்கிக் கணக்கில் பணம் இல்லை என திருப்பிக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
எனவே கடன் கொடுத்தவர்கள் உட்பட மூன்று பேர் சேர்ந்து செய்து கொண்ட ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டிருப்பது போல பணத்தைக் கொடுக்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்கள். அப்போது தான் வீரேந்திர சேவாக்கின் மனைவி ஆர்த்தி சேவாக்குக்கு இந்த 4.5 கோடி ரூபாய் கடன் விஷயம் தெரிய வந்திருக்கிறது.
அதன் பிறகு தான் காவல் நிலையத்தில் முறையாக, தன் பிசினஸ் பார்ட்னர்கள் மீது புகார் கொடுத்திருக்கிறார் ஆர்த்தி சேவாக். ஆர்த்தி சேவாக் புகாரின் அடிப்படையில் அவர் பிசினஸ் பார்ட்னர்கள் மீது ஐபிசி 420 (cheating and dishonestly), 468 (forgery), 471 (using as genuine a forged document) and 34 (common intention) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்களாம். வீரேந்திர சேவாக்கும், ஆர்த்தியும் கடந்த 2004-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.