டெல்லி: சமீபத்தில் தான் ரயில்வேயை தனியாருக்கு தாரை வார்க்கலாம் என மத்திய அரசு சலசலத்துக் கொண்டிருந்தது. அதோடு, வரும் 2030-ம் ஆண்டுக்குள் இந்திய Railways-க்கு 50 லட்சம் கோடி ரூபாயாவது முதலீடுகளைக் கொண்டு வர வேண்டும் எனச் சொன்னார் ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல்.
இப்படி எல்லாம் ஒரு பக்கம் பேசிக் கொண்டிருக்க, ரயில்வே ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலச் சங்கங்கள் எல்லாம் ஒரு பக்கம் தனியார்மயம் கூடாது என போராடிக் கொண்டிருக்க ரயில்வே நிர்வாகம் அசால்டாக இரண்டு ரயில்களை தனியார் இயக்க அதிரடி வேலைகளில் இறங்கி இருக்கிறது.
நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் தனியார்மயம், அந்நிய நேரடி முதலீடு போன்ற இரு தூண்கள் தாங்கிப் பிடித்த பட்ஜெட்டை கண் முன் காட்டுகிறது இந்தியாவின் முதல் தனியார் ரயில் இயக்கத் திட்டம். ஏற்கனவே சொன்னது போல பதவிக்கு வந்த முதல் 100 நாட்களுக்குள் Railway-ஸில் இரண்டு ரயில்களை தனியாரிடம் கொடுக்க முன் வந்திருக்கிறது மத்திய அரசு.
அதில் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல் லக்னெள வரையான தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கத்தை முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் இன்னும் சில நாட்களில் தனியாருக்கு தாரை வார்க்கப் போகிறார்கள்.
சரி இந்த தேஜாஸ் ரயிலில் என்ன வசதிகள் இருக்கும் என்று பார்த்தால் அதற்கு ஒரு பட்டியல் போட்டிருக்கிறார்கள்.
1. ஒவ்வொரு பயணிக்கும் தனித் தனியாக, எல் சி டி திரை இருக்குமாம். இதில் பொழுது போக்கு + தகவல்களைக் காணலாமாம். அதோடு வைபை வசதி, மற்றும் மொபைல் சார்ஜிங் புள்ளிகளும் இருக்குமாம்.
2. பிளைண்டர்ஸ்களுடனான ஸ்மார்ட் ஜன்னல்கள் இருக்குமாம். குட்டி பாண்ட்ரியும் இருக்குமாம்.
3. தேஜாஸ் ரயிலின் வெளிப்புறத்தைப் போலவே இருக்கைகளிலும் அதே நிறம் இருக்குமாம்.
4. தேஜாஸ் ரயில் பெட்டிகளுக்குள் எல்இடி லைட்டுகள் தானாம். பெட்டி உட்புறம் ஃபைபர் ரீ இன்ஃபோர்ஸ் செய்த பிளாஸ்டிக் பேனல்களால் செய்யப்பட்டதாம். மடூலர் கழிவறைகள் இருக்குமாம்.
5. ரயில் பெட்டிகளுக்கான கதவுகள் தானியங்கி முறையில் இருக்குமாம்.
இந்த தேஜாஸ் ரயில் காலை 6.50 மணிக்கு லக்னெள சந்திப்பில் கிளம்பி மதியம் 1.35 மணிக்கு எல்லாம் டெல்லியை வந்து சேருமாம். மதியம் 3.35 மணிக்கு புறப்படும் தேஜாஸ் மீண்டும் இரவு 10.05 மணிக்கு எல்லாம் லக்னெள சந்திப்பில் சென்று சேர்ந்து விடுமாம். ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகள் நீங்களாக வாரம் முழுக்க இந்த தேஜாஸ் ரயில் சேவை இருக்குமாம். இதைத் தான் தனியாருக்கு சோதனை அடிப்படையில் இயக்க, இன்னும் சில நாட்களில் மத்திய அரசு அனுமதி கொடுக்கப் போகிறார்களாம்.