டெல்லி: சுவிட்சர்லாந்து அரகின் கெடுபிடியால் சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்திய கருப்புப் பண முதலைகள் தங்கள் பணத்தை எடுத்து தென்கொரியாவில் வங்கிகள் அல்லாத துறைகளிலும், பிற வைப்புகளாகவும் தொடர்ந்து முதலீடு செய்து வருவதாக சர்வதேச வங்கித் தரவுகள் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
இந்திய அரசும் அடுத்தடுத்த எடுத்து வரும் அதிரடி நடவடிக்கையின் காரணமாக சுவிஸ் அரசு சுவிஸ் வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்களை அவ்வப்போது வெளியிட்டு வருவதால், கருப்புப் பணப் பதுக்கல்காரர்கள் சுவிஸ் வங்கிகளில் பதுக்கி வைத்திருந்த பணத்தை எடுத்து தென் கொரியாவில் பதுக்கத் தொடங்கியுள்ளதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
குறிப்பாக இந்தியர்கள் தான் கடந்த 2018ஆம் ஆண்டில் சுமார் 900 சதவிகிதம் வரை கருப்புப்பணத்தை தென் கொரியாவில் முதலீடு செய்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டில் சுமார் ரூ.45 ஆயிரத்து 940 கோடியாக இருந்து முதலீடு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து கடந்த 2018ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ.65 ஆயிரத்து 140 கோடியாக கூடியது என்று அந்த புள்ளிவிவர ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
நாங்க சம்பாதிச்சதுங்க
உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெரும்புள்ளிகளும், தொழில் துறையினரும், தங்களின் சொந்த நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் வகையில் வரி செலுத்தவதை தவிர்க்கும் பொருட்டு, முறைகேடாக சேர்த்த பணத்தை எல்லாம் ஹவாலா பரிவர்த்தனைகள் மூலமாகவும் , வேறு மார்க்கமாகவும் சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் கருப்புப் பணமாக பதுக்கி வைத்து வருகின்றனர்.
பதுக்கலுக்கு பாதுகாப்பு
சுவிட்சர்லாந்து நாட்டு சட்டவிதிகளின் படி அந்த நாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ளவர்களின் தனிப்பட்ட விவரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும் என்பதால் பல்வேறு நாடுகளில் இருந்தும் கருப்புப் பணப் பதுக்கல்காரர்களுக்கு சுவிஸ் வங்கிகள் சொர்கபுரியாக இருந்துவருகிறது. இந்தியர்களும் பல்லாண்டு காலமாகவே சுவிஸ் வங்கிகளில் பணத்தை பதுக்கி வைத்து இந்தியப் பொருளதார வளர்ச்சிக்கு பெரும் அச்சுறத்தலாகவும் சவாலாகவும் இருந்து வருகின்றனர்.
மோடி அதிரடி
கடந்த 2014ஆம் ஆண்டில் முதன் முதலாக ஆட்சிக்கு வந்தவுடனே பிரதமர் மோடி, வெளிநாடுகளில் சட்டத்திற்கு புறம்பாக பதுக்கி வைத்திருக்கும் அனைத்து கருப்புப் பணத்தையும் சட்டத்திற்கு உட்பட்டு முறையாக இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டு அவை நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டு மக்களுக்கு பயன்படும் வகையிலும் பயன்படுத்தப்படும் என்று உறுதி அளித்திருந்தார்.
சிறப்பு புலனாய்வுக்குழு
மோடி சொன்னதை நிறைவேற்றும் வகையில், மத்திய அரசும் இந்தியர்கள் முறைகேடாக கருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக சந்தேகப்பட்டியலில் உள்ள நாடுகளுடன் தொடர்பு கொண்டு, கருப்புப் பணத்தை இந்தியாவிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டது. குறிப்பாக சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியோர் குறித்து விசாரணை நடத்துவதற்காகவே, மத்திய அரசு ஒரு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து, சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியோர் குறித்த விவரங்களை வழங்குமாறு சுவிட்சர்லாந்து அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
பட்டியல் வெளியிடத் தயார்
மத்திய அரசு அமைத்த சிறப்பு புலனாய்வுக்குழு நடத்திய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர், சுவிஸ் வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியவர்களின் விவரங்களை வெளியிட சுவிட்சர்லாந்து அரசு முன்வந்தது. அதோடு கருப்புப் பணத்தை பதுக்கியோரின் விவரங்களை வெளியிடுவது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தமும் ஏற்படுத்தப்பட்டது.
பட்டியல் வெளியிடக்கூடாது
இரு நாடுகளுக்கு இடையில் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தை அடுத்து சுவிட்சர்லாந்து அரசு, அந்நாட்டு வங்கிகளில் கருப்புப் பணத்தை பதுக்கியுள்ளவர்களில் 50 பேர்களின் விவரங்களை வெளியிட தயாரானது. இதை அறிந்த கருப்புப்பணப் பதுக்கல்காரர்கள் தங்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிடக்கூடாது என்று சுவிட்சர்லாந்து அரசிடம் மேல்முறையீடு செய்தனர். ஆனால் அதற்கான போதிய ஆவணங்களை தாக்கல் செய்யாததால் சுவிஸ் அரசு அவர்களின் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. இதனையடுத்து அந்த 50 பேர்களின் விவரங்கள் விரைவில் மத்திய அரசுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதுக்கல்காரர்களின் சொர்க்கம்
இந்நிலையில் மத்திய அரசு கருப்புப்பணப் பதுக்கல்காரர்களக்கு எதிராக எடுத்து வரும் அதிரடி தொடர் நடவடிக்கையின் காரணமாக சுவிஸ் வங்கிகளில் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் பணத்தை சுரண்டி எடுத்து அவற்றை ஆசிய நாடான தென் கொரியாவில் முதலீடு செய்துவருவதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இதன் காரணமாக தென் கொரியா மற்றொரு சுவிட்சர்லாந்தாக மாறி வருவதாகவும், பதுக்கல்காரர்களின் சொர்க்கமாக திகழ்வதாகவும் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
தொடரும் பதுக்கல்
வங்கிகளின் சர்வதேச பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யும் ஆய்வறிக்கை (Bank of International Standard) சமீபத்தில் ஒரு தரவறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கருப்புப்பணப் பதுக்கல்காரர்கள், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரையிலும் தொடர்ச்சியாக முறைகேடாக சேர்த்த சொத்துக்களை தென்கொரியாவில் வங்கிகள் அல்லாத பிற துறைகளில் முதலீடு செய்தும், வைப்புத் தொகையாகவும் பதுக்கி வைப்பதாகவும் ஆய்வறிக்கை பகீர் புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது.
900 சதவிகிதம் அதிகரிப்பு
குறிப்பாக இந்தியர்கள் தான் கடந்த 2018ஆம் ஆண்டில் சுமார் 900 சதவிகிதம் வரை கருப்புப்பணத்தை தென் கொரியாவில் முதலீடு செய்துள்ளதாக சர்வதேச ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டில் சுமார் ரூ.45 ஆயிரத்து 940 கோடியாக இருந்து முதலீடு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் படிப்படியாக அதிகரித்து கடந்த 2018ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ.65 ஆயிரத்து 140 கோடியாக கூடியது என்று அந்த புள்ளிவிவர ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.
எல்லாம் இங்க சம்பாதிச்சதுதான்
வெளிநாடுகளில் முறைகேடாக கருப்புப் பணத்தை பதுக்கியவர்கள் எல்லாம் இந்தியாவில், கட்டுமானத்துறை, நிதிச்சேவைகள், தகவல் தொழில்நுட்பம், வீடு அலங்காரத்துறை, ஜவுளித்துறை, பொறியியல் துறை, நகைகள் மற்றும் ஆபரணக் கற்கள் ஏற்றுமதி போன்ற துறைகளில் அதிக அளவில் வர்த்தக பரிவர்த்தனைகளை மேற்கொண்டு இந்தியாவில் வரி செலுத்துவதை தவிர்ப்பதற்காக முறைகேடாக வெளிநாடுகளில் கருப்புப்பணத்தை பதுக்கி வந்துள்ளது கவனிக்கத்தக்கது.