டெல்லி : ஆசிய பசிபிக் பகுதிகளிலேயே மிகச் சிறந்த ராணுவமாக "இந்திய ராணுவம்" விளங்குகிறது. இந்த நிலையில் மேலும் இந்திய ராணுவத்தினை வலுபடுத்தவும் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் எல்லைகளை கண்கானிக்கவும் புதிய டிரோன்களைப் வாங்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்டை நாடான பாகிஸ்தான் மற்றும் சீனாவுடனான அதன் நிலையற்ற எல்லைகளில் கண்கானிப்பு திறனை அதிகரிப்பதற்காக, இந்தியா தனது 1.2 மில்லியன் பலம் கொண்ட இராணுவத்திற்கு பெரிய அளவில் ட்ரோன்களை வாங்க திட்டமிட்டுள்ளதாம்.
இந்த ட்ரோன்கள் எல்லையில் உள்ள அச்சுறுத்தல்களுக்கு எதிராக, 24 மணி நேர கண்காணிப்பை மேற்கொள்ள உதவும் என்று இந்திய ராணுவத் தலைவர் பிபின் ராவத் புதுடெல்லியில் கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் சீனாவின் சவால்களை எதிர்கொள்ளவும், இராணுவ நவீன மயமாக்கலுக்காக 2025ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் 250 பில்லியன் டாலர்களை செலவிடவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், கடந்த ஏழு தசாப்தங்களில் இந்தியா பாகிஸ்தானுடன் மூன்று பெரிய போர்களையும், 1999ல் கார்கிலில் ஒரு சிறிய அளவிலான போரையும் நடத்தியது. எனினும் கடந்த 1962ல் சீனாவுக்கு எதிரான போர் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.
தற்போதைக்கு 150க்கும் மேற்பட்ட இஸ்ரேலிய உளவு ட்ரோன்களை இயக்கும் இந்திய ராணுவம், 600 ஆளில்லா வான்வழி வாகனங்கள் வாங்குவதற்காக, கடந்த 2017ம் ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கப்பட்ட டெண்டரைத் தற்போது தொடர்கிறது. மேலும் அமெரிக்கா தயாரித்த ஆயுத ட்ரோன்களை ஒரு தனி கொள்முதல் திட்டத்தில் வாங்கவும் இந்தியா முயன்று வருகிறது.
இந்த நிலையில் கார்கில் போருக்கு பிறகான 20 ஆண்டுகள் என்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட ராணுவப்படை தளபதி பிபின் ராவத் உரையாற்றியுள்ளார். இதில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்குள் அத்துமீறி புகுந்து தாக்குதல் நடத்தினால், இதற்கு இந்தியாவின் பதிலடி மிகக் கடுமையாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
அதோடு வரும் காலத்தில் சண்டைகள் வருமேயானால் அது மிக வன்முறையானதாக இருக்கும். பாகிஸ்தான் ராணுவம் நேரிடையாகவோ அல்லது மறைமுகமாகவோ தாக்குதல் நடத்தினால், அதற்கான பின்விளைவுகள் எதிர்பாராத விதமாக இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.