சேலம், தமிழ்நாடு: இந்திய பொதுத்துறை நிறுவனமான செயில் (SAIL - Steel Authority of India Ltd) நிறுவனத்தின் கீழ் சேலம் ஸ்டீல் பிளாண்ட் (Salem Steel Plant) என்கிற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
சுமார் 3,000 ஊழியர்களுக்கு நேரடியாகவும், 5,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த இரும்பு ஆலையைத் நடத்த விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள், அரசிடம் விண்ணப்பிக்குமாறு சொல்லி இருந்தது மத்திய அரசு.
தமிழகத்தில் அணு உலை, அணு கழிவு நிலையம், நியூட்ரினோ, 8 வழிச் சாலை, நீட்... என தமிழர்கள் குரல்களை நெறிப்பது போன்ற பிரச்னைகளோடு இப்போது மத்திய அரசு, தமிழக மக்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் கொஞ்ச நஞ்ச வேலைவாய்ப்புகளையும் முழுமையாக அழிக்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது.
அடுத்த போராட்டம்
சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதை கண்டித்தும், இது தொடர்பான டெண்டரை உடனே ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கடந்த வாரம் ஒருநாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. அதன் பிறகும் வழக்கம் போல மத்திய அரசு தமிழர்களின் குரல்களைக் கேட்டதாகத் தெரியவில்லை. ஆகையால் நேற்று அடுத்த கட்ட போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள்.
குடும்பத்துடன் ஊர்வலம்
சேலம் உருக்காலையில் பணி புரிந்து வரும் அனைத்து தொழிலாளர்களும், தங்கள் குடும்பத்தினருடன் ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என சில தினங்களுக்கு முன் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை உருக்காலையின் இரண்டாது நுழைவு வாயில் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினரும் தங்களது குடும்பத்தினருடன் திரண்டனர். இதில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களின் வேலை வாய்ப்பு பிரச்னைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் போராட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசியல் கட்சிகள்
இந்த போராட்டத்தில் சேலம் மக்களவை உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன், சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜேந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில தொண்டரணி செயலாளர் இமயவரம்பன் உள்பட பல கட்சியினரும், தொழிற்சங்க நிர்வாகிகளோடு போராட்டத்தில் கலந்து கொண்டனர். சேலம் இரும்பு உருக்காலையை தனியார் மயமாக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. மேலும், உருக்காலைக்காக நிலம் கொடுத்த விவசாயிகள், தங்கராஜ் என்பவர் தலைமையில் மாட்டு வண்டியில் ஏர் கலப்பையுடன் ஊர்வலமாக வந்து, சேலம் இரும்பு உருக்காலை தனியார்மயமாவதற்கு, தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.
ரயில்வே முதல் சேலம் வரை
பாஜக அரசின் 2.0 ஆட்சி பொறுப்புக்கு வந்து இன்னும் 50 நாட்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அரசு தன்னிடம் இருக்கும் அரசு நிறுவனங்களை திறமையாக நடத்தி லாபத்துக்கு இட்டுச் செல்வது பற்றி யோசிக்காமல், எல்லாவற்றையும் விற்று விட்டு வெளியேறவே விரும்புகிறது. உலகின் மிகப் பெரிய அரசு நிறுவனங்களில் ஒன்றான இந்திய ரயில்வேஸையே தனியார்மயமாக்க நினைத்த அரசுக்கு, இந்த சின்ன சேலம் உருக்காலையை தனியார்மயமாக்க நினைக்காதா என்ன..? மக்களின் வேண்டுகோளும், அழு குரலும் மத்திய அரசின் காதில் விழும் என நம்புகிறார்கள் தமிழக மக்கள். ஆளும் வர்க்கமே... தயவு செய்து மக்கள் வலியை காது கொடுத்து கேளுங்களேன்..!