மும்பை: பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒதுக்கப்பட்ட இடத்தினை தற்போது, பாபா ராம்தேவின் பதஞ்சலி குழுவிற்கு ஒதுக்கியுள்ளதாம் மஹாராஷ்டிரா அரசு.
மொத்தம் 400 ஏக்கர் பரப்பளவில் இந்த இடம், சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் அமைக்க ஒதுக்கப்பட்ட இடமாம். ஆனால் தற்போது பற்பல சலுகைகளுடன் பதஞ்சலிக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக இன்றைய மார்கெட் விலையில் பாதி விலைக்கும் மஹாராஷ்டிரா அரசு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது மட்டும் அல்லாமல் இன்னும் பல சலுகைகள் இந்த இடத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாம். குறிப்பாக மின் கட்டண சலுகை மற்றும் ஜி.எஸ்.டியில் சலுகை, பத்திரபதிவில் சலுகை என வாரி வழங்கியிருக்கிறதாம் மஹாராஷ்டிரா அரசு.
முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் மஹாராஷ்டிரா மா நிலத்தை சேர்ந்த விலாஸ்ராவ் தேஸ்முக் கனரக தொழிதுறை அமைச்சராக இருந்த போது இந்த இடம் பெல் நிறுவனத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலையில், பெல் நிறுவனம் இங்கு அமையவில்லை, அதோடு எந்தவொரு சிறு கூறு நடுத்தர நிறுவனமும் இங்கு அமையவில்லையாம்.
இந்த நிலையில் தான் இந்த இடம் தற்போது பதஞ்சலிக்கு கைமாறியுள்ளது. எனினும் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதிலும் விவசாயிகள் தாங்கள் இதில் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார்களாம்.
தங்களிடம் இருந்து வெறும் 3.5 லட்ச ரூபாய்க்கு மட்டுமே இந்த இடம் வாங்கப்பட்டதாகவும், தற்போது இந்த இடம் 45 லட்சம் ரூபாய் வரை செல்வதாகவும் விவசாயிகள் தரப்பில் கூறப்படுகிறதாம்.
அதுமட்டும் இல்லாமல் இந்த நிலத்தை ஒட்டி தற்போது ஹைவே செல்வதாகவும், பெல் நிறுவனம் வந்தால் எங்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கலாம் என்றும் நினைத்தோம், ஆனால் அப்படி ஏதும் அமையவில்லை, மாறாக தற்போது பதஞ்சலி நிறுவனம் தான் இங்கு வருகிறது. எங்களுக்கும் வேலை வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை என்றும் கூறுகிறார்களாம்.
நாங்கள் ஒரு தேசிய திட்டத்திற்காகத் தான் இந்த இடத்தை கொடுத்தோம், ஆனால் தற்போது இங்கு தனியார் திட்டம் தான் கொண்டுவரப்படுகிறது. இதற்கு அரசு எங்களுக்கு, சந்தை மதிப்பில் ஈடுகட்ட வேண்டும் என்றும் நில உரிமையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறதாம்.
இந்த இடத்தில் எந்த மாதிரியான தொழிற்சாலை அமையும் என்று இன்னும் தெளிவாக வெளியிடாத பட்சத்தில், பதஞ்சலியின் சோயா பீன்ஸ் பதப்படுத்தும் தொழிற்சாலை அமையவிருப்பதாக சில செய்திகள் வெளியாகியுள்ளன.