சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு மத்திய அரசு அதிக ஊக்கமளித்து வருவதால், அதற்கு ஏற்றார்போல் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், எலெக்ட்ரிக் கார் உற்பத்தி திட்டத்தில்
சென்னை: சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு மத்திய அரசு அதிக ஊக்கமளித்து வருவதால், அதற்கு ஏற்றார்போல் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், எலெக்ட்ரிக் கார் உற்பத்தி திட்டத்தில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடப்பு நிதியாண்டு வருமான வரி செலுத்துபவர்கள் வாங்கும் வாகன கடன் மீதான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரையில் வரி விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது ஹூண்டாய் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எலெக்ட்ரிக் கார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்பதால் விலையும் நடுத்தர மக்கள் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் எதிர்பார்க்கும் விலையிலேயே விற்பனைக்கு வரும் என்றும், கூடவே வருமான வரிச்சலுகை பெறவேண்டி பெரும்பாலானவர்கள் எலெக்ட்ரிக் கார்களை போட்டி போட்டு வாங்க முன்வருவார்கள் என்றும் ஹூண்டாய் நிறுவனம் எதிர்பார்க்கிறது.
முதல் கார் உற்பத்தி நிறுவனம்
கடந்த 1990ஆம் ஆண்டுகளின் மத்தியில் உலகமயமாக்கல் மற்றும் உலகளாவிய வர்த்தகத்துக்கு இந்தியா தனது கதவை அகலமாக திறந்து விட்டது. இதில் முதல் ஆளாக ஓடிவந்து கடை பரப்பியது ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனம் தான். கார் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கிய சூட்டோடு வெகு விரைவில் குறைந்த விலையில் சாண்ட்ரோ கார்களை தயாரித்து சாதனை படைத்தது.
1 லட்சம் கார்கள்
அதோடு மிகக் குறைந்த காலக் கெடுவிற்குள்ளாகவே சுமார் 1 லட்சம் கார்களை தயாரித்ததோடு பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து சாதனை படைத்து குறிப்பிடத்தக்கது. ஒரு காலத்தில் மற்ற நாடுகளில் இருந்து விலை உயர்ந்த கார்களை அதிக விலை கொடுத்து வாங்கிய நம் மக்கள், குறைந்த விலையில் ஹூண்டாய் கார் தயாரித்து விற்பனைக்கு வந்தவுடன் போட்டி போட்டு சாண்ட்ரோ கார்களை வாங்கத் தயாராகிவிட்டனர்.
விற்பனையில் முன்னிலை
ஹூண்டாய் கார்களுக்கு இந்திய கார் சந்தையில் இருந்து வரும் அமோக வரவேற்பை அடுத்து தொடர்ந்து புதிய புதிய மாடல்களில் கார்களை உற்பத்தி செய்து சந்தைப் படுத்தியது. இதற்கு முக்கியமாக மற்ற நிறுவன கார்களுடன் ஒப்பிடும்போது ஹூண்டாய் நிறுவனம் உற்பத்தி செய்யும் கார்கள் விலை சற்று குறைவாக இருந்ததே காரணமாகும். இதன் காரணமாக இந்தியச் சந்தையில் கார்களின் விற்பனையில் மற்ற நிறுவன கார்களைக் காட்டிலும் ஹூண்டாய் கார்களின் விற்பனை முன்னணியில் உள்ளது.
பசுமை வாகன உற்பத்தி
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத பசுமை வாகன உற்பத்தி செய்வதற்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமும் பசுமை வாகன உற்பத்திக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்றும் வலியுறத்தி வருகிறது. பசுமை வாகனங்களை பயன்படுத்தும்போது சுற்றுச்சூழலுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்பதால் மத்திய அரசம் அதற்கு முக்கியத்துவம் அளிக்க முன்வந்துள்ளது.
இ-வாகனங்களுக்கு முன்னுரிமை
இதனையடுத்து கடந்த ஜூலை 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்தார். கூடவே எலெக்ட்ரிக் வாகன கடன் மீதான வட்டியில் சுமார் 1.50 லட்சம் ரூபாய் வரையிலும் வருமான வரி விலக்கும் அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
ரூ.2000 கோடி முதலீடு
எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கு மத்திய அரசு ஊக்கமளிக்க முன்வந்ததை அடுத்து நாட்டில் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாகனங்களின் விற்பனை சூடுபிடிக்கத் தொடங்கியது. இதை நன்கு உணர்ந்துகொண்ட ஹூண்டாய் கார் உற்பத்தி நிறுவனமும் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக எலெக்ட்ரிக் கார் தயாரிக்கும் திட்டத்தில் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய முன்வந்துள்ளது. முதல் கட்டமாக சுமார் 10 லட்சம் எலெக்ட்ரிக் கார்கள் எனப்படும் இ-கார்களை தயாரித்து இந்தியச் சந்தையில் விற்பனைக்கு விட திட்டமிட்டுள்ளது. இ-கார்களின் விலை அநேகமாக சுமார் ரூ.10 லட்சம் வரையில் இருக்கும் என்று தெரிகிறது.
கோனா எஸ்யுவி
ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில் கோனா எஸ்யுவி (XUV) எனப்படும் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து சந்தையில் இறக்கிவிட்டது. ஆனால் அதன் விலை நடுத்தர மக்களுக்கு ஏற்ற வகையில் இல்லாததால், கார் பிரியர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இதனையடுத்தே தற்போது குறைந்த விலையில் எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க முன்வந்துள்ளது.
உறுத்தாத டிசைன்கள்
புதிதாக தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் கார்கள் அநேகமாக மின எஸ்யுவி (XUV) கார்களாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கார்கள் அனைத்தும் முதலில் சென்னையில் உள்ள தொழிற்சாலையிலேயே தயாரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதோடு சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத கார்கள் என்பதால் அதற்கேற்பவே கார்களின் டிசைன்களும் உறுத்தாத வகையில் வெவ்வேறு மாடல்களில் கண்ணைக் கவரும் வகையில் இருக்கும் என்றும் தெரிகிறது.
சென்னையில் உற்பத்தி
ஹூண்டாய் நிறுவனம் புதிதாக தயாரிக்க திட்டமிட்டுள்ள எலெக்ட்ரிக் கார்கள் அனைத்தும் முதலில் சென்னையில் உள்ள தொழிற்சாலையிலேயே தயாரிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகளை ஹூண்டாய் நிறுவனம் முழுவீச்சில் மேற்கொள்ள உள்ளதாக தெரிகிறது. சென்னை தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் எலெக்ட்ரிக் கார்கள் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் பிற ஆசிய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வரிச்சலுகைக்கு ஏற்ற கார்
எலெக்ட்ரிக் கார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்பதால் விலையும் நடுத்தர மக்கள் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் எதிர்பார்க்கும் பட்ஜெட் விலையிலேயே விற்பனைக்கு வரும் என்றும், கூடவே வருமான வரிச்சலுகை பெறவேண்டி பெரும்பாலானவர்கள் எலெக்ட்ரிக் கார்களை போட்டி போட்டு வாங்க முன்வருவார்கள் என்றும் ஹூண்டாய் நிறுவனம் எதிர்பார்க்கிறது.


Click it and Unblock the Notifications