டெல்லி: இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு செல்லும் விமானங்களும், மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் விமானங்களும் தங்கள் நாட்டு வான் வழியை பயன்படுத்த விதித்திருந்த தடையை நேற்று பாகிஸ்தான் திடீரென்று விலக்கிக்கொண்டதால் இந்திய விமான நிறுவனங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளன.
இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான் வழியை பயன்படுத்தாமல் பிற நாடுகளின் வான் வழியை பயன்படுத்தி வந்ததால் தேவையில்லாமல் கால விரயமும் அதிக செவும் ஏற்பட்டன. இப்படி காதைச் சுற்றி மூக்கை தொடும் ரெண்டுங்கெட்டான் நிலையால் விமானங்களுக்கு கூடுதல் எரிபொருள் செலவும் ஏற்பட்டதோடு பயண நேரமும் அதிகரித்தது.
இதில் குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மட்டும் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 491 கோடி ரூபாய் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது பாகிஸ்தான் தனது வான்வழியை பயன்படுத்த இந்திய விமானங்களுக்கு அனுமதி அளித்துள்ளது இந்திய விமான நிறுவனங்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
ஜின்னா போட்ட பிள்ளையார் சுழி
சுமார் ஆயிரம் ஆண்டுகளாக தொப்புள் கொடி உறவாக இருந்து வந்த இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை 1947ஆம் ஆண்டில் சுதந்திரம் என்ற மிட்டாயை பிரிவினை என்ற கத்தியை வைத்து கூறுபோட்டு பிரிட்டிஷ் அரசாங்கம் பிரித்து கொடுத்ததோ அன்றிலிருந்தே பாகிஸ்தான் தினந்தோறும் நம் நாட்டிற்குள் தீவிரவாதத்தை ஓய்வில்லாமல் நடத்திக்கொண்டு வருகிறது. முகம்மது அலி ஜின்னா பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்த பயங்கரவாதச் செயல்களை அதன் ஆட்சியாளர்கள் இன்றுவரையிலும் தொடர்ந்து நடத்திக்கொண்டு வருகிறது என்பது வேதனைதான்.
இன்னமும் தாகம் தீரவில்லை
சுதந்திரத்திற்கு பின்பு பாகிஸ்தான் நம் மீது தொடர்ந்து இரண்டு முறை போர் தொடுத்து தோல்வியை தழுவினாலும் இன்னும் அதன் தாகம் தீரவில்லை. நாமும் என்னதான் அஹிம்சை வழியை பின்பற்ற முன்வந்தாலும், பாகிஸ்தானோ, அதெல்லாம் முடியாது எங்கள் வழி ஜின்னா வழிதான் என்று, மேலும் மேலும் நம்மீது தாக்குதல் நடத்த ராகு காலம் பார்த்துக்கொண்டுதான் உள்ளது.
கொடூர தாக்குதல்
அதன் தொடர்ச்சி தான் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா என்ற இடத்தில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் இந்திய ராணுவ வாகனத்தின் மீது நடத்திய கொடூர தாக்குதலில் 41 இந்தியா ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த கொடூர தாக்குதலால் நம் நாட்டு மக்கள் அனைவருமே அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்தனர். மேலும் இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது போர் தொடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
ட்ரம்ப் கடும் கண்டனம்
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய பயங்கரவாத செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கடும் கண்டனத்தை தெரிவித்தன. பாகிஸ்தானின் நட்பு நாடான சீனவும் பாகிஸ்தானின் இந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் பாகிஸ்தானின் தீவிரவாத செயலுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்ததோடு தனது நிதியுதவியையும் உடனடியாக நிறுத்தியது. நமது நட்பு நாடான ரஷ்யாவோ இந்தியா எடுக்கும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும் நாங்க ஆல்வேஸ் சப்போர்ட் பண்ணுவோம் என்று துணை நின்றது.
நல்ல நேரம் வாய்த்தது
உலக நாடுகள் கொடுத்த ஊக்கத்தினால் உற்சாகமடைந்த நமது ராணுவமும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க நல்ல நேரம் பார்த்து காத்திருந்தது. அந்த நல்ல நேரமும், பாகிஸ்தானுக்கு கெட்ட நேரமும் ஒன்று சேர்ந்து வெகு சீக்கிரத்திலேயே வாய்த்தது. ஒன்றே செய், அதையும் நன்றே செய், அதையும் இன்றே செய் என்று சொல்வதற்கு ஏற்ப, இந்திய விமானப்படை கடந்த பிப்ரவரி மாதம் 26ஆம் தேதியை நல்ல முகூர்த்த தினமாக நினைத்து தாக்குதல் நடத்த தீர்மானித்தது.
சவக்குழியான பதுங்கு குழி
பிப்ரவரி 26ஆம் தேதி இந்திய ராணுவ உயரதிகாரிகள் கொடுத்த உத்தரவை அடுத்து அன்றைக்கு நள்ளிரவில் இந்திய விமானப்படை விமானங்கள் பாகிஸ்தானின் ரேடார்களின் கண்காணிப்பையும் மீறி அந்நாட்டின் எல்லைக்குள் ஊடுருவி பாலகோட் என்ற இடத்தில் பதுங்கு குழியில் ஹாயாக உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த பயங்கரவாதிகள் மீது எதிர்பாராத தாக்குதல் நடத்தி பதுங்கு குழியை பயங்கரவாதிகளின் சவக்குழியாக்கிவிட்டு வெற்றிகரமாக திரும்பியது. இத்தாக்குதலில் 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அபிநந்தன் சிறைபிடிப்பு
இந்த விமானப்படை தாக்குதலில் ஈடுபட்ட அபிநந்தன் என்ற விமானப்படை விங் கமாண்டரை பாகிஸ்தான் ராணுவம் சிறைபிடித்ததோடு, அவரை போர் ஒப்பந்தத்தையும் மீறி கொடுமைப்படுத்தியது. பாகிஸ்தானின் இந்த அடாவடி செயலுக்கு இந்தியாவும் உலக நாடுகளும் கண்டனம் தெரிவித்ததால் வேறு வழியில்லாத பாகிஸ்தான் அபிநந்தனை விடுவித்தது.
எங்கள் எல்லைக்குள் வராதே
தன்னுடைய கையாளாகாத செயலை எண்ணி ஆத்திரமடைந்த பாகிஸ்தான் உடனடியாக எதிர்வினையாற்றத் தொடங்கியது. இனிமேல் இந்திய விமானங்கள் எதுவும் எங்களின் 11 வான் எல்லையை பயன்படுத்தக்கூடாது என்றும் ஒருவேளை எங்கள் எச்சரிக்கையையும் மீறி எங்கள் வான் எல்லையில் பறந்தால் சுட்டு வீழ்த்தப்படும் என்றும் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தது.
கூடுதல் செலவு
பாகிஸ்தானின் எச்சரிக்கையை அடுத்து கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்திய விமானங்கள் அனைத்தும் பாகிஸ்தானின் வான்வழியை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து விட்டு வேறு மார்க்கத்தை பயன்படுத்தி வருகின்றன. சுருக்கமாக சொன்னால் நாம் காதை சுற்றி மூக்கை தொடுவது மாதிரிதான் இதுவும். இதனால் இந்திய விமான நிறுவனங்களுக்கு தினந்தோறும் கோடிக்கணக்கில் செலவாகி வந்தன.
அரபிக்கடலுக்கு மேல் பயணம்
உதாரணமாக, ஏர் இந்தியா விமானமோ அல்லது இண்டிகோ விமானமோ டெல்லியில் இருந்து இஸ்தான்புல் நகருக்கு செல்வதாக இருந்தால் நீண்ட கடல் வழியான அரபிக்கடல் வான் வழியாக பறந்து சென்று வளைகுடா நாடான கத்தார் நாட்டின் தோஹா நகரில் சற்று இளைப்பாறி விட்டு பெட்ரோல் போட்டுக்கொண்டு பின்னர் புறப்பட்டு இஸ்தான்புல் நகருக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது,
ரூ.491 கோடி நட்டம்
இப்படி காதைச் சுற்றி மூக்கை தொடும் ரெண்டுங்கெட்டான் நிலையால் விமானங்களுக்கு கூடுதல் எரிபொருள் செலவும் ஏற்பட்டதோடு பயண நேரமும் அதிகரித்தது. இதில் குறிப்பாக ஏர் இந்தியா நிறுவனத்திற்கு மட்டும் கடந்த நான்கு மாதங்களில் சுமார் 491 கோடி ரூபாய் வரையில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஏர் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியா அனுமதி
இந்தியாவின் மற்ற விமான சேவை நிறுவனங்களான ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ ஏர் மற்றும் கோஏர் ஆகிய நிறுவனங்களும் முறையே ரூ.30.73 கோடி, 25.1 கோடி மற்றும் ரூ.2.1 கோடி இழப்பை சந்திக்க நேர்ந்தது. பாகிஸ்தானின் வான்வழி தடையின் காரணமாக இந்தியாவும் தனது வான்வழியை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை விதித்திருந்தது. இருந்தாலும் கடந்த மே மாதம் 31ஆம் தேதியன்று இந்த தடையை நீக்கியது.
நாங்களும் அனுமதிக்கிறோம்
இந்தியா சற்று இறங்கி வந்து தனது வான் வழியில் பறப்பதற்கு பாகிஸ்தான் விமானங்களுக்கு அனுமதி அளித்ததை அடுத்து பாகிஸ்தானும் பெருந்தன்மையுடன் நடந்து கொள்ளும் என்று பெரும்பாலானவர்கள் எதிர்பார்த்திருந்தனர். அனைவரும் எதிர்பார்த்தது போல் பாகிஸ்தானும் தனது வான் எல்லையை நேற்று முதல் பயன்படுத்த இந்திய விமான நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது.
சிவில் விமானப் போக்குவரத்து துறை
இது குறித்து விளக்கமளித்த சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம், இது வரையில் நீடித்து வந்த தடை நீக்கப்படுவதால், இரு நாட்டு வான் எல்லையில் இரு நாட்டு விமானங்களும் பறப்பதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்று ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.
பயண நேரம் மிச்சமாகும்
பாகிஸ்தானின் அறிவிப்பு நேற்று நள்ளிரவு 12.41 மணிக்கு வெளியானது. அதில் இந்தியாவின் அனைத்து விதமான சிவில் விமானங்களும் பாகிஸ்தானின் வான் வழியில் பறப்பதற்கு உடனடியாக அனுமதி அளிக்கப்படுவதாக உத்தரவு கிடைத்தது. பாகிஸ்தான் தனது வான் வழி தடையை நீக்கி இருப்பதன் மூலம் சுமார் 70 முதல் 80 நிமிடங்கள் வரை விமான பயண நேரமும் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவுக்கு செல்லும் போது ஏற்படும் செலவில் சுமார் ரூ.5 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலும் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கடந்த நான்கு மாதங்களாக நீடித்து வந்த சிக்கல் தீர்ந்ததை அடுத்து இந்தியா -பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையில் வான்வழி போக்குவரத்து இன்று முதல் சீரடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.