டெல்லி: உங்களுக்கு நல்ல தரமான சாலை வசதிகள் வேண்டுமென்றால், சுங்கச் சாவடியில் அவர்கள் கேட்கும் சுங்கக் கட்டணத்தை நீங்கள் செலுத்தித் தான் ஆகவேண்டும் என்று மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் லோக்சபாவில் தெரிவித்தார்.
சாலைகளை விரிவாக்கம் செய்வதில் நாங்கள் எந்தவிதமான பாரபட்சமும் காட்டுவது கிடையாது. பாஜக ஆட்சியில் இல்லாத தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிப்பதாக சொல்வதை நாங்கள் ஏற்க முடியாது என்றும் நிதின் கட்கரி லோக்சபாவில் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உள்ள சாலைகளை விரிவாக்கம் செய்வற்காகவும், புதிதாக தேசிய நெடுஞ்சாலைகளை அமைப்பதற்காகவும் மத்திய அரசு, தனியார் துறையுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. இது கடந்த 15 ஆண்டுகளாக இருந்துவரும் நடைமுறையாகும். இதற்கு பிரதிபலனாக, சில குறிப்பிட்ட காலகட்டத்திற்கு அந்த தனியார் நிறுவனங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச் சாவடிகள் அமைத்து அந்த சாலைகளை பயன்படுத்துபவர்களிடம் இருந்து சுங்கக் கட்டணம் வசூலித்துக் கொள்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. அதோடு அவ்வப்போது அந்த சாலைகளை பராமரிப்பு செய்யவேண்டும் என்றும் மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த நடைமுறை கடந்த 15 ஆண்டுகளாகவே நடைமுறையில் இருந்து வருகிறது,
ஆனால், தேசிய நெடுஞ்சாலைகள் தொடக்கத்தில் போட்டதோடு சரி, அதன்பின்னர், அந்த தெடுஞ்சாலைகளை பராமரிக்கும் வேலையை அடியோடு மறந்துவிட்டனர். இதன் காரணமாக, நாளடைவில் நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான தேசிய நெடுஞ்சாலைகள், குண்டும் குழியுமாக காட்சியளிக்க ஆரம்பித்தன. சாலைகளின் மோசமான பராமரிப்பினால் அடிக்கடி கோர விபத்துகளும் உயிர்பலிகளும் நடக்கத் தொடங்கின.
அடிக்கடி நடக்கும் விபத்துகளை அடுத்து சில பொதுநல அமைப்புகள், உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தொடர்ந்தன. வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் தேசிய நெடுஞ்சாலைகளை முறையாக பராமரிக்காவிட்டால் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடைவிதிக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து சுங்கக் கட்டணம் வசூலிப்பதில் படுதீவிரமாக இருக்கின்றன.
இந்நிலையில் லோக்சபாவில் நெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கைக்கு பதில் அளிக்கும்போது, மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, வாகன ஓட்டிகளுக்கு நல்ல உயர்தரத்துடன் கூடிய சாலை வசதிகள் வேண்டும் என்றால், அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்தி தான் ஆகவேண்டும். அப்போது தான் சாலைகளை முறையாக பராமரிக்க முடியும். ஆனால் மத்திய அரசிடம் இதற்கான போதிய நிதிவசதி கிடையாது. இதனால் அந்தப்பொறுப்பை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. எனவேதான் அவர்கள் சுங்கக் கட்டணம் வசூலிக்கிறார்கள். சுங்கக் கட்டணம் வசூலிக்கும் திட்டத்தை ரத்து செய்யும் எண்ணம் எதுவும் மத்திய அரசுக்கு கிடையாது என்று பதிலளித்தார்.
மேலும், பல மாநிலங்களில் சாலை வசதிகள் மிக மோசமாக இருப்பதாகவும், புதிய திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டுகிறார்கள். குறிப்பாக தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களை மத்திய அரசு புறக்கணிப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அதில் துளியும் உண்மை இல்லை. மத்திய அரசு அனைத்து மாநிலங்களையும் பாரபட்சமின்றி தான் நடத்துகிறது.
நெடுஞ்சாலைகளை அமைக்க தேவைப்படும் நிலங்களை கையகப்படுத்தும் பணி, மத்திய அரசுக்கு பெரும் சவாலாகவே உள்ளது. அதோடு அந்தந்த மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளித்தால் மட்டுமே சாலை திட்டங்களை விரைவாக நிறைவேற்ற முடியும். சாலை அமைக்கும் திட்டத்திற்கு குறைந்த பட்சமாக 80 சதவிகித நிலங்களாவது கையகப்படுத்தி இருந்தால்தான் பணிகளை தொடங்கவே முடியும்.
ஆனால், பீகார், மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் சாலை திட்டங்களை செயல்படுத்துவதில் ஆமை வேகத்திலேயே செயல்பட்டு வருகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைத்த போது, சுமார் 400க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இருந்தன. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 40 ஆயிரம் கி.மீக்கு நெடுஞ்சாலைகளை அமைத்துள்ளோம்.
நாடு முழுவதும் சுங்கக் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக சில உறுப்பினர்கள் கவலை தெரிவிக்கின்றனர். பல பகுதிகளில் விதிமுறைகளுக்கு மாறாக சுங்கக்கட்டணம் வசூலிப்பதாகவும், நிர்ணயித்த தொகையை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டகளை அடுக்குகின்றனர். வாகன ஓட்டிகளுக்கு நல்ல தரமான வசதியான சாலை வசதிகள் வேண்டுமானால் சுங்கக் கட்டணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என்றும் நிதின் கட்கரி தெரிவித்தார்.
அதெல்லாம் சரிதான், ஒரே தேசம் ஒரே வரி முறை என்று சொல்லி ஜிஎஸ்டி வரிமுறை கொண்டு வந்தீர்களே, அந்த ஜிஎஸ்டி வரிமுறையில் சுங்க வரியையும் ஏன் கொண்டுவரவில்லை என்று வாகன ஓட்டிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.