டெல்லி : ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடும் கடன் பிரச்சனை காரணமாக தனது, உள்நாட்டு விமான சேவை மற்றும் வெளிநாட்டு விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது. இதனால் ஜெட் ஏர்வேஸ்சின் பல ஆயிரம் ஊழியர்கள் வேலையிழந்து கஷ்டபட்டது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
மத்திய அரசு இவர்களுக்காக தற்போது தனியாக ஒரு வெப் போர்ட்டலை உருவாக்க போவதாகவும், இதன் மூலம் மற்ற ஏர்லைன் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையானவர்களை வேலைக்கு எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
ஆமாங்க.. இந்த நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர். பலர் வேறு நிறுவனங்களில் வேலைக்கு சேர்ந்தாலும், இன்னும் பலர் வேலை கிடைக்காமல் தவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அதே போல் விமான நிறுவனம் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய சம்பள பாக்கியை வழங்காத காரணத்தால், இந்த விமான ஊழியர்கள் டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தினர்.
மேலும் ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் டெல்லியில் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை நேரில் சந்தித்து, விமான நிறுவனம் வழங்க வேண்டிய நிலுவை தொகையை பெற்று தர வேண்டும் எனவும், வேலையிழந்த பணியாளர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் வேலையிழந்துள்ள ஜெட் ஏர்வேஸ் ஊழியர்களின் ஒவ்வொருவரின் பெயரையும் அவர்கள் தகுதியுடன் பிற நிறுவனங்கள் பணிக்கு எடுக்கும் வகையில் பட்டியலிட்டு வருவதாகவும், இதற்காக புதிய வெப் போர்டல் ஒன்று உருவாக்கப்பட்டு வேலையிழந்தவர்களின் பெயர்கள் பதிவேற்றம் செய்யப்படும் எனவும் மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியுள்ளார்.
எனினும் ஒரு தனியார் நிறுவனத்தின் வணிக தோல்விக்கு அரசாங்கம் பொறுப்பேற்றக முடியாது என்றும், ஜெட் ஏர்வேஸின் நிதி திரட்டுவதில் அரசாங்கத்திற்கு எந்தப் பங்கும் இல்லை என்றும், ஏனெனில் அது அந்த நிறுவனத்தின் சொந்த விஷயம்.
அதோடு ஒவ்வொரு விமான நிறுவனமும் தனது சொந்த சந்தை மதிப்பீடு மற்றும் பொறுப்புகளின் அடிப்படையில் தனது வணிக திட்டத்தினை தயாரிக்கிறது. அவர்களின் வணிகத் திட்டத்தின் அடிப்படையில் திறமையான செயல்பாடுகள் மற்றும் நிதி ஆதாரங்கள் விமானங்களின் பொறுப்பாகும் என்றும் ஹர்தீர் கூறியுள்ளார்.