டெல்லி: 2016-ல் தொடங்கப்பட்ட முகேஷ் அம்பானியின் Reliance Jio தான் இன்று இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் நிறுவனமாக வளர்ந்திருக்கிறது. இந்தியாவில் டெலிகாம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் Reliance Jio தன் பெரிய போட்டியாளரான ஏர்டெல்லை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.
இந்திய டெலிகாம் சந்தையை நிர்வகித்து நெறிமுறைப்படுத்தும் டிராய் அமைப்பின் கணக்குப் படி மே 2019 நிலவரப்படி, Reliance Jioவின் வாடிக்கையாளரின் எண்ணிக்கை 32.29 கோடியாக இருக்கிறது. ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 32.08 கோடியாக இருக்கிறது. வொடாஃபோன் மற்றும் ஐடியா செல்லூலர் இரண்டும் ஒன்றாகச் சேர்ந்திருப்பதால், அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 38.75 கோடியாக இருக்கிறதாம்.
இன்றைய தேதிக்கு இந்தியாவின் டெலிகாம் நிறுவனங்களில், லாபம் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரே நிறுவனம் Reliance Jio மட்டும் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. Reliance Jio நிறுவனத்தின் மார்ச் 2019 காலாண்டில், 11,100 கோடி ரூபாயை வருவாயாகவும், சுமார் 840 கோடி ரூபாயை லாபமாகவும் பார்த்திருக்கிறது ஜியோ.
தற்போது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை பலமாக அதிகரித்திருப்பதால் இந்த வருவாயும் லாபமும் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறார்களாம். குறைந்த விலைத் திட்டங்களுக்காக Reliance Jio-வில் பல வாடிக்கையாளர்கள் புதிதாக இணைந்திருப்பதால், நிறுவனத்தின் ஒட்டு மொத்த வருவாய் மற்றும் லாபம் அதிகரிக்கலாம். ஆனால், ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து Reliance Jio நிறுவனத்துக்கு வரும் வருவாய் குறையலாம் எனவும் எதிர்பார்க்கிறார்களாம்.
சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து டெலிகாம் நிறுவனத்துக்கு வரும் வருவாயைத் தான் ARPU - Average Revenue Per User என்று சொல்வார்கள். இந்த ARPU ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடந்த ஐந்து காலாண்டாக குறைந்து கொண்டிருக்கிறதாம். கடந்த டிசம்பர் 2017-ல் ஜியோவின் ARPU ரூ. 154 ரூபாயில் இருந்து டிசம்பர் 2018-ல் ரூ.130 ஆக குறைந்திருக்கிறது. இப்போது மார்ச் 2019-ல் ஜியோவின் ARPU 126.2 ரூபாயாக குறைந்திருக்கிறது.
ஜியோவுக்கு தனிப்பட்ட முறையில் ARPU குறைந்தாலும் இந்திய டெலிகாம் நிறுவனங்களிலேயே அதிக ARPU வைத்திருக்கும் நிறுவனம் Reliance Jio தான் என்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 2019-ல் ஏர்டெல் நிறுவனத்தின் ARPU 123 ரூபாயாக அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.