டெல்லி: தற்போது நிர்ணயிக்கப்பட்ட 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் என்ற இலக்கு என்பது வானித்தில் இருந்து ஒன்றும் குதிக்கவில்லை. அதற்கு முக்கிய காரணமே 2014ஆம் ஆண்டு வரையிலும் மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிதான் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காட்டமாக தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷாரின் பிடியில் இருந்த வரையிலும் பூஜ்ஜியமாக இருந்த இந்தியப் பொருளாதாரம், சுதந்திரத்திற்கு பின்னர் முன்னாள் பிரதமர் நேரு மற்றும் நரசிம்மராவ் போன்றவர்களின் திட்டமிட்ட நடவடிக்கைகளினால் தான் என்றும் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
அதே போல் பாஜக நினைப்பதுபோல் நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி ஒன்றும் தானாக வந்துவிடவில்லை. அதற்கு முக்கிய காரணம், 2014ஆம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியே காரணம் என்றும் பிரணாப் முகர்ஜி சுட்டிக் காட்டினார்.
முடங்கிய பொருளாதார வளர்ச்சி
கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது 6.8 சதவிகிதத்தோடு முடங்கிவிட்டது. இதற்கு கடந்த ஆண்டில் ஏமாற்றிய பருவமழையே காரணம் என்றும், இதனால் எதிர்பார்த்த விவசாய விளைச்சலும் வீழ்ச்சியடைந்து விட்டது. இதன் தாக்கம் கடந்த நிதியாண்டின் நான்காவது காலாண்டில் வெளிப்பட்டது. அதைத் தொடர்ந்து நடப்பு நிதியாண்டிலும் அது தொடரும் என்று அப்போதே எதிர்பார்க்கப்பட்டது.
இந்த வருஷம் 7 சதவிகிதம்
ஆனால், கடந்த ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை லோக்சபாவில் தாக்கல் செய்த தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியனும், கடந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 6.8 சதவிகிதமாகவே உள்ளது என்றும், நடப்பு நிதியாண்டில் நிச்சயம் 7 சதவிகிதத்தை எட்டும் என்றும், அதோடு அடுத்த நிதியாண்டில் 8 சதவிகித வளர்ச்சி இலக்கை தொடும் என்றும் கணித்து சொல்லியிருந்தார்.
நொண்டிச் சாக்கு
தலைமை பொருளாதார ஆலோசகர் கூறியதற்கு ஒத்துப்போவது போலவே, ஆசிய வளர்ச்சி வங்கியும் (Asian Development Bank) நடப்பு 2019-20ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நிச்சயமாக 7 சதவிகிதத்தை எட்டும் என்று தனது ஆய்வறிக்கையில் தெளிவுபடுத்தி இருந்தது. முன்னதாக இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நடப்பு ஆண்டில் 7.2 சதவிகிதமாக உயரும் என்றும் கணித்திருந்தது. ஆனால் கடந்த 2018-19ஆம் நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி குறைந்துபோனதே நடப்பு ஆண்டிலும் குறைவதற்கு காரணம் என்று சமாதானம் சொன்னது. இருந்தாலும் நடப்பு நிதியாண்டில் பருவமழை எதிர்பார்ப்பதுபோல் பெய்துவருவதால் பொருளாதார வளர்ச்சி விகிதம் 7 சதவிகிதத்தை எட்டும் என்று சத்தியம் செய்தது.
2024ஆம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர்
அதேபோல், கடந்த 2014ஆம் ஆண்டில் சுமார் 1.55 லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதார நாடாகவே இருந்த நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த ஐந்து ஆண்டுகளில் வளர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரித்து தற்போது 2.7 லட்சம் கோடி டாலர் கொண்ட பொருளாதார நாடாக உயர்ந்துள்ளது. இது மேலும் அதிகரித்து வரும் 2024ஆம் ஆண்டில் 5 லட்சம் கோடி டாலர் உடைய பொருளாதார நாடாக நிச்சயம் உயரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்திருந்தார்.
அவிங்க தான் இதுக்கு காரணம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அதோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லை. இந்தியா பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கி இருந்ததற்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட மோசமான அரசியல், பொருளாதார மற்றும் நிதிக் கொள்கைகளே காரணம் என்றும், மோடி ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆட்சியின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத் தன்மை உள்ளதால் முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்பட்டு பொருளாதார வளர்ச்சி விகிதம் அதிகரிக்கத் தொடங்கியது என்றும் முந்தைய காங்கிரஸ் ஆட்சியை குற்றம் சாட்டியிருந்தார்.
சொர்க்கத்தில் இருந்து குதிக்கவில்லை
ஆனால், தற்போது இந்தியா எட்டியுள்ள பொருளாதார வளர்ச்சிக்கு பாஜக மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது என்றும், தற்போதைய ஆட்சியாளர்கள் நினைப்பது போல் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி ஒன்றும் சொர்க்கத்தில் இருந்து குதித்து விடவில்லை என்று முன்னால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி காட்டமாக கூறியுள்ளார்.
காங்கிரஸூக்கும் பங்கிருக்கில்ல
டெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்ட பிரணாப் முகர்ஜி, நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்தார். அப்போது அவர், பாஜக நினைப்பதுபோல் நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி ஒன்றும் தானாக வந்துவிடவில்லை. அதற்கு முக்கிய காரணம், 2014ஆம் ஆண்டு வரையில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சியே காரணம் என்று சுட்டிக் காட்டினார்.
திறமையான பொருளாதார கொள்கை
இந்தியா சுதந்திரத்திற்கு முன்பு வரையிலும் பிரிட்டிஷாரின் ஆட்சி இருந்த வரை, பொருளாதார வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியமாகவே இருந்தது. ஆனால் சுதந்திரம் பெற்ற பின்பு, பிரதமராக திறம்பட ஆட்சி செய்த ஜவஹர்லால் நேரு உருவாக்கிய ஐ.ஐ.டி (IIT), ஐ.ஐ.எம் (IIM) போன்ற அமைப்புகளாலும், 1990ஆம் ஆண்டுகளில் பிரதமராக இருந்த நரசிம்ம ராவ் மற்றும் 10 ஆண்டுகள் ஆட்சி செய்த டாக்டர் மன்மோகன் சிங் போன்றவர்கள் உருவாக்கிய திறமையான புதிய பொருளாதார கொள்கை மற்றும் உறுதியான கட்டமைப்பு ஆகியவற்றால் தான் நீங்கள் இப்போது காணும் இத்தகைய உயர்வு என்பதை மறந்துவிடக்கூடாது.
உங்கள் கட்டமைப்பு கிடையாது
அதே போல் நீங்கள் நினைப்பது போல் வரும் 2024ஆம் ஆண்டு இலக்கான 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார வளர்ச்சி ஒன்றும் நீங்கள் உருவாக்கிய கட்டமைப்போ அல்லது சொர்க்கத்தில் இருந்து நேராக உங்கள் கையில் வந்து விழவில்லை. அதற்கு அடித்தளமிட்டதே முந்தைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் தான் என்று பிரணாப் முகர்ஜி காட்டமாக கூறினார்.
பிரணாப் முகர்ஜி பதிலடி
ஆளும் பாஜக கூட்டணி எதற்கெடுத்தாலும், நாடு தற்போது இருக்கும் மோசமான நிலைக்கு 55 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சிதான். அது நாட்டுக்கு உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டி வரும் நிலையில் முன்னால் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதிலடி கொடுத்திருப்பது அரசியல் அரங்கில் பெருத்த அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.