ஹைதராபாத்: ஆந்திர பிரதேச மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதியை முழுவதும் கட்டமைக்கும் திட்டத்திற்காக கேட்டிருந்த சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதி உதவியை வழங்க முடியாது என்று உலக வங்கி கைவிரித்துவிட்டது, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமராவரி நகரை கட்டமைப்பு செய்வதற்காக ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை அழித்து புதிய நகரை உருவாக்குவதற்கு பல்வேறு சமூக நல அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது நல அமைப்புகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
ஒன்றுபட்ட மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகரான ஹைதராபாத்தை, பிரிந்து சென்ற தெலங்கானா மாநிலத்திற்கு தாரை வார்த்துவிட்டதை அடுத்து ஆந்திராவுக்கு புதிய தலைநகராக அமராவதி நகர் அறிவிக்கப்பட்டது. அந்நகரை கட்டமைப்பதற்காக உலக வங்கியிடம் நிதி கேட்டிருந்த நிலையில் தற்போது அது மறுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானா போராட்டம்
ஆதி தெலுங்கு எனப்படும் உண்மையான தெலுங்கு மொழி பேசும் பெரும்பாலான மக்கள் தொகை கொண்ட எங்கள் பகுதிக்கு பேர் சொல்லக்கூடிய அளவில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் செய்யாமல், எங்கள் பகுதியில் உள்ள அனைத்து இயற்கை வளங்களை எல்லாம் சுரண்டி தென்கிழக்கு பகுதியில் உள்ள மக்கள் நீண்டகாலமாக அனுபவிக்கிறார்கள் என்ற கொந்தளிப்பில் ஆந்திர மாநிலத்தை பிரித்து எங்களுக்கு தனி மாநிலம் அமைத்து தரவேண்டும் என்று கேட்டு போராட்டம் நடத்தினார் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சித் தலைவரான சந்திரசேகர ராவ்.
தெலங்கானா உதயம்
சந்திரசேகர ராவின் போராட்டத்திற்கு பணிந்து அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி கடந்த 2014ஆம் ஆண்டில், ஆந்திரா மாநிலத்தை இரண்டாக பிரித்து பெரும்பான்மை ஆதி தெலுங்கு மொழி பேசும் மக்கள் கொண்ட பகுதிகளை ஒன்றாக்கி தெலங்கானா என்ற மாநிலத்தை உருவாக்கி சந்திரசேகர ராவின் கையில் கொடுத்துவிட்டது. இதில் வளம் கொழிக்கும் பெரும்பான்மையான பகுதிகள் எல்லாமே தெலங்கானா வசம் சென்று விட்டன. கூடவே தலைநகர் ஹைதராபாத்தும்.
புதிய தலைநகர் எது
இதையடுத்து அடுத்த பத்து ஆண்டுகளுக்கு ஹைதராபார் நகரம் இரண்டு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகராக இருக்கும் என்றம் அதன் பின்பு தெலங்கானா வசம் சென்றுவிடும் என்றும் முடிவானது. ஹைதராபாத் தெலங்கானா வசம் சென்றுவிடும் என்பதால் தங்கள் மாநிலத்திற்கு வேறு ஒரு புதிய தலைநகர் தேவை என்ற இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது ஆந்திர மாநிலம்.
தலைநகரம் அமராவதி
ஆந்திர மாநிலத்துக்கு புதிய தலைநகரை தேடத் தொடங்கியபோது கண்ணில் பட்டது தான் அமராவதி கிராமம். இது கிருஷ்ணா நதிக்கரையின் தெற்கு கரையோரம் அமைந்துள்ள சிறிய கிராமமாகும். கி.பி 3ஆம் நூற்றாண்டு வரையிலும் ஆந்திராவை ஆட்சி புரிந்த சாதவாகனர்களின் தலைநகரமாக விளங்கியது இந்த அமராவதி என்பது இதன் சிறப்பம்சமாகும். சுமார் 1000 ஆண்டுகள் பழமையான அமராவதி கிராமம் சுதந்திர இந்தியாவில் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படும் வரை சென்னை மாகாணத்திற்கு உட்பட்டதாகவே இருந்தது என்பதும் இதன் சிறப்பாகும்.
ரூ.50 ஆயிரம் கோடி வேண்டும்
இவ்வளவு சிறப்புகள் கொண்ட அமராவதி கிராமத்தை தேர்ந்தெடுத்து, ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக முழுவதுமாக கட்டமைப்பு செய்வதற்கு அப்போதைய ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் இருந்த சந்திரபாபு நாயுடு திட்டமிட்டார். இதற்கான திட்ட மதிப்பீடு சுமார் 50 ஆயிரம் கோடி என்று நிர்ணயிக்கப்பட்டது. மேலும் இதற்காவே சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் அமராவதி என்னும் பெயரில் கடன் பத்திங்களும் வெளியிடப்பட்டன.
உலக வங்கியிடம் விண்ணப்பம்
அமராவதி நகரை கட்டமைப்பதற்கு தேவைப்படும் தொகையின் மதிப்பு சுமார் 50 ஆயிரம் கோடி என்பது மிக அதிகம் என்பதால் பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொதுத் துறை வங்கிகள் மத்திய அரசு மற்றும் உலக வங்கி என அனைத்து தரப்பிடமும் நிதி உதவி கேட்கப்பட்டது. இதில் உலக வங்கியிடம் சுமார் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவி கேட்டிருந்தார் அப்போதைய முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு.
ஆட்சி மாறியது
இந்நிலையில் கடந்த மே மாதம் நடைபெற்ற ஆந்திர மாநில சட்டசபைத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சியை படுதோல்வி அடையச் செய்து, முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்எஸ்ஆர் (YSR) காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தார். ஆட்சிக்கு வந்த உடனே புதிய தலைநகரை கட்டமைப்பு செய்யும் பணிகளை முடுக்கிவிட்டார்.
இதுவரை செலவானது ரூ.500 கோடி
முதல்வரான உடனே அமராவதி நகரை கட்டமைப்பு செய்யும் பணிகள் மிக வேகமாக முடுக்கிவிட்டார். இத்திட்டத்திற்காக ஆந்திர அரசு இது வரையில் சுமார் 500 கோடி ரூபாய் வரையிலும் செலவழித்திருந்தது. இந்நிலையில் திட்டத்தை மேற்கொண்டு தொடர்வதற்கு போதிய நிதி வசதி இல்லாத நிலையில் இத்திட்டம் முடங்கி இருந்தது. அதோடு ஆந்திராவின் ஒட்டுமொத்த வளர்ச்சிப் பணிகளும் தேக்க நிலையில் இருந்து வருகிறது.
உலக வங்கி கைவிரிப்பு
அமராவதி நகரை கட்டமைப்பு செய்யும் பணிக்கு மேற்கொண்டு நிதியுதவி தேவைப்பட்ட நிலையில், உலக வங்கியிடம் இருந்து விரைவில் 2 ஆயிரம் கோடி ரூபாய் வரும் என்று ஆந்திர அரசு எதிர்பார்த்திருந்தது. இந்நிலையில் தற்போது அமராவதி திட்டத்திற்கு தேவைப்படும் ரூ.2 ஆயிரம் கோடி நிதியுதவியை வழங்க முடியாது என்று உலக வங்கி மறுத்துவிட்டது.
தொண்டு நிறுவனங்கள் எதிர்ப்பு
அமராவரி நகரை கட்டமைப்பு செய்வதற்காக ஆயிரக்கணக்கான விளை நிலங்கள் மற்றும் நீர் நிலைகளை அழித்து புதிய நகரை உருவாக்குவதற்கு பல்வேறு சமூக நல அமைப்புகளும், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொது நல அமைப்புகளும் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தன. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் தொடர்ந்து போராடி வருகின்றன.
நல்ல முடிவு
தற்போது அமராவதி நகரை கட்டமைப்பு செய்வதற்கு தேவைப்படும் 2 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை வழங்க முடியாது என்று உலக வங்கி கையை விரித்துவிட்டது. உலக வங்கி நிதியுதவியை அளிக்க மறுத்ததை மேதா பட்கர் தலைமையிலான நர்மதா பச்சாவ் அந்தோலன் (Narmada Bachao Andolan) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் வரவேற்றுள்ளன. உலக வங்கி தற்போது தான் சரியான முடிவினை எடுத்துள்ளதாக பாராட்டியுள்ளன.