டெல்லி : நெடுஞ்சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி ரூ.1.25 டிரில்லியன் கடன் தர ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
ஆமாங்க.. நெடுஞ்சாலை உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி ரூ.1.25 டிரில்லியன் லட்சம் கோடி கடன் தர ஒப்புதல் அளித்துள்ளதாம்.
இது குறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க, உள்கட்ட மைப்பு வசதியினை மேம்படுத்த வேண்டியுள்ளது. இதற்காக ரூ.8.41 டிரில்லியன் மதிப்பிலான பாரத்மாலா திட்டம் நாடு முழுவதும் நெடுஞ்சாலைப் போக்குவரத்து வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அதே நேரம் இந்தத் திட்டத்தை செயல்படுத்த தேவையான நிதியைத் திரட்டுவதில் பல்வேறு புதுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் வரப்படுகிறது என்கிறார் மத்திய அமைச்சர். மேலும் இதற்காக தேசிய நெடுஞ்சாலைத் துறை கடன் பத்திரங்களை வெளியிட்டு நிதித் திரட்டவும் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தக் கடன் பத்திரங்களில் ஆண்டுக்கு ரூ.25,000 கோடி எனவும், 2024 வரையில் ஐந்து ஆண்டுகளுக்கு ரூ.1.25 டிரில்லியன் வரை முதலீடு செய்ய எல்.ஐ.சி ஒப்புக் கொண்டுள்ளது என மத்திய சாலை போக்கு வரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
இந்த நிதி முழுவதுமாக பாரத்மாலா திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலைகளை அமைக்க செலவிடப்பட உள்ளது எனவும் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
பாரத்மாலா திட்டத்தில் தற்போது ரூ.5.35 டிரில்லியன் அளவுக்கு திட்டங்களைச் செயல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் முதலில் 34800 கிலோ மீட்டர் அளவுக்கு சாலைகள் அமைக்கப்பட உள்ளன. இதில் நேஷனல் ஹைவே என்ற தேசிய நெடுஞ்சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் மீதமுள்ள 10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரமும் அடங்கும் என்கிறார்.
இந்த நிலையில் பாரத்மாலா திட்டத்துக்கான நிதி செஸ் வரி, சுங்கக் கட்டண வருவாய், சந்தை கடன்கள், தனியார் துறை பங்களிப்பு, காப்பீடு நிதி, ஓய்வுகால நிதி, பாண்டுகள் போன்றவற்றிலிருந்து பெறப்பட உள்ளன. அடுத்த 30 வருடங்களில், இந்த நிதித் திரட்டப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கான வட்டி விகிதம், 10 வருடத்துக்கு ஒரு முறை மாற்றப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த வகையில் நிதியமைச்சகம் இந்த ஆண்டு 75,000 கோடி நிதியினை திரட்ட ஒப்புதல் அளித்துள்ளது என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார். மேலும் பொருளாதாரத்தை உருவாக்குவதில் முதுகெலும்பாக இருக்கும் நிதியினை பெருக்க உள்கட்டமைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறைகள் தூண்களாக இருப்பதால் இந்த நிதியினை இதற்காக செலவழிக்க தமது துறை அதிவேகமாக செயல்படுகிறது என்றும் கூறியுள்ளார்.