டெல்லி: தற்போது அதிக அளவிலான ரொக்கத்தை வங்கிக்கணக்கில் செலுத்துவதற்கு பான் எண்ணை பயன்படுத்துவதில் அதிக அளவில் முறைகேடுகள் நடப்பதால், அதை தவிர்க்க இனிமேல் பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பையும் கட்டாயமாக்க மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் தொகையின் உச்சவரம்பு குறித்து முடிவெடுக்கப்படாத நிலையில், ஆண்டுக்கு சுமார் 20 முதல் 25 லட்சம் ரூபாய் வரையிலும் டெபாசிட் செய்யும்போது ஆதார் எண் கட்டாயம் என்னும் நடைமுறை அமல்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
நாடு முழுவதும் இருந்து வந்த கள்ள நோட்டுக்களை முற்றிலும் ஒழிக்கும் விதமாக கடந்த 2016ஆம் ஆண்டில் 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு செல்லாததாக அறிவித்தது. கூடவே, அனைத்து வங்கி வாடிக்கையாளர்களையும் தங்களின் பான் எண் மற்றும் ஆதார் எண்ணையும் இணைக்க உத்தரவிட்டது.
பான் மற்றும் ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காவிட்டால் வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்றும் அனைத்து வங்கிகளின் சார்பில் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அப்போதைய சூழ்நிலையை சமாளிக்கும் விதமாக பெரும்பாலான வங்கி வாடிக்கையாளர்களும் தங்களின் பான் எண் மற்றும் ஆதார் எண்ணையும் வங்கிக் கணக்குடன் இணைத்து விட்டனர்.
மேலும், செல்லாத நோட்டு அறிவிப்புக்கு பின்பு மத்திய அரசு, ரொக்க பரிமாற்றத்தை முடிந்த அளவில் குறைத்துக்கொண்டு, அதற்கு பதிலாக அதிக அளவில் டிஜிட்டல் பரிமாற்றம் எனப்படும் மின்னணு பரிமாற்றம் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. கூடவே, அதிக அளவில் டிஜிட்டல் பரிமாற்றம் செய்யும் நபர்களுக்கு குலுக்கல் முறையில் ஊக்கப்பரிசுகளும் அவ்வப்போது அளித்து வந்தது.
அதே போல், வாடிக்கையாளர்கள் அதிக அளவில் ரொக்கத்தை வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்வதற்கு அதிக அளவில் சேவைக் கட்டணமும் விதித்துவருகிறது. அதிக அளவில் கட்டணம் விதித்தால் ரொக்க டெபாசிட்டுகள் கணிசமாக குறையும் என்ற நினைப்பில் அதிக சேவைக் கட்டணம் விதித்து வருகிறது. இருந்தாலும் கூட, வாடிக்கையாளர்கள் இன்னமும் தொடர்ந்து அதிக அளவிலான ரொக்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்துவருகின்றனர்.
வாடிக்கையாளர்கள் தற்போது ரொக்கத்தை டெபாசிட் செய்வதற்கு பான் எண்ணையே உரிய அத்தாட்சியாக அளித்துவருகின்றனர். ஆனால் தற்சமயம் நாடு முழுவதும் அதிக அளவில் போலி பான் கார்டுகள் இருப்பதால் அதிக அளவிலான ரொக்க டெபாசிட்டுகள் நடக்கும்போது போலி பான் எண்ணைக் குறிப்பிட்டால் அதிக அளவிலான ரொக்கப்பரிமாற்றத்தை அடையாளம் காண முடியாமல் போகிறது.
இதனை உணர்ந்த மத்திய அரசு, இனிமேல் அதிக அளவிலான ரொக்க டெபாசிட்டுகளுக்கு பான் எண்ணுடன் கூடுதலாக தங்களுடைய ஆதார் எண்ணையும் இணைக்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பான் எண்ணுடன் ஆதார் எண்ணையும் இணைத்து வங்கிகளில் தாக்கல் செய்யும் போது அதிக அளவிலான ரொக்க டெபாசிட் செய்யும் வாடிக்கையாளர்களை உடனடியாக அடையாளம் கண்டுகொண்டு உரிய நடவடிக்கை எடுக்க முடியும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.
இதற்காக வங்கிகளில் வாடிக்கையாளர்களின் வருகையை அடையாளம் காணும் வகையில், பயோமெட்ரிக் கருவியை பயன்படுத்துவது அல்லது ஆதார் எண் அடிப்படையில் வாடிக்கையாளர்களின் மொபைல் எண்ணுக்கு ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண்ணை (OTP) வைத்து ரொக்க டெபாசிட் செய்யும் முறையை கொண்டு வரவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஒருவேளை, ரொக்கமாக டெபாசிட் செய்யப்படும் தொகை குறித்து உறுதியான முடிவெடுக்கப்படாத நிலையில், ஆண்டுக்கு குறைந்த பட்சமாக சுமார் 20 அல்லது 25 லட்சம் ரூபாய் முதல் செய்யப்படும் ரொக்க டெபாசிட்டுகளுக்கு பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் நடைமுறை அமல்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.