டெல்லி: மின்சார வாகன உற்பத்தியையும் விற்பனையையும் அதிகரிக்கும் வகையில் அவற்றுக்கு ஜிஎஸ்டி வரியில் இருந்து விலக்கு அளிக்க ஜிஎஸ்டி ஆணையம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி அறிவிப்பு வெளியாகும் என்றும் தெரிகிறது.
நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பில் எலெக்ட்ரிக் வாகன கடன்கள் மீதான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரையில் வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, இப்பொழுது ஜிஎஸ்டி ஆணையமும் ஜிஎஸ்டியில் வரி விலக்கு அளிக்க முன்வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
வருமான வரி செலுத்தும் தனி நபர் மற்றும் மாதச் சம்பளதாரர்கள் தங்களின் வரி விலக்கு உச்சவரம்பை அதிகரிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு ஆண்டு தோறும் கோரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர். இவர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் நடப்பு 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு வரிச் சலுகை அளிக்கும் விதமாக அவர்கள் வாங்கு எலெக்ட்ரிக் வாகன கடன்கள் மீதான வட்டியில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
இப்பொழுது மத்திய அரசு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்தது விட்டது போல் சந்தோசத்தில் திளைக்கிறது. எலெக்ட்ரிக் வாகனம் வாங்குவோரின் கடன் மீதான வட்டியில் ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கும் அதே சமயத்தில் வாகன உற்பத்தியையும், விற்பனையையும் அதிகரித்தது போல் ஆயிற்று.
அந்த வகையில் தற்போது அடுத்த கட்டமாக ஜிஎஸ்டி ஆணையமும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியையும் விற்பனையையும் அதிகரிக்கும் பொருட்டு, எலெக்ட்ரிக் வாகங்களுக்கு ஜிஎஸ்டியில் இருந்து முற்றிலும் வரி விலக்கு அளிக்க முடிவெடுத்துள்ளது. வரும் 25ஆம் தேதி நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் இது பற்றி விவாதித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு விதிக்கப்படும் 12 சதவிகித ஜிஎஸ்டி வரியை 5 சதவிகிதமாக குறைப்பது பற்றி விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவித்திருந்தார். இந்நிலையில் எலெக்ட்ரிக் வாகன உற்பத்திக்கும் விற்பனைக்கும் ஜிஎஸ்டியில் இருந்து முற்றிலும் விலக்கு அளிக்க ஜிஎஸ்டி ஆணையம் முடிவெடுத்துள்ளது.
அதே போல், மின் உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு, காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களுக்கும் சூரிய மின்சக்தி திட்டங்களுக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பில் இருந்து விலக்கு அளிக்கவும் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
தற்சமயம் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு 28 சதவிகிதம் வரை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. எனவேதான், சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க ஜிஎஸ்டி ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.