பெங்களூரு: அமெரிக்காவில் புதிதாக படித்து முடித்து வேலைக்கு வரும் இளைஞர்களுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை செலவு செய்கிறோம்.
அதே அளவுக்கான தொகையைத் தான், இந்தியாவில் இருந்து இந்திய ஊழியர்களை அழைத்துச் சென்று வெளிநாடுகளில் வேலைக்கு அமர்த்துவதற்கும் ஆகிறதாம்.
இப்படி Wipro நிறுவனத்தின் மனித வள மேம்பாட்டுத் துறைத் தலைவர் செளரப் கோவில் (Saurabh Govil) சொல்லி இருக்கிறார். இப்போது புரிந்திருக்குமே..! ஆம் இந்தியர்களை ஓரம் கட்டத் தொடங்கி இருக்கிறது ஐடி நிறுவனங்கள். காரணம் செலவு மற்றும் உடனடியாக ப்ராஜெக்டில் இறங்குவது.
கோடிங் பரிட்சை
"Wipro ஒரு கோடிங் பரிட்சை வைத்தது. அதில் இந்தியாவின் தலை சிறந்த கல்லூரிகள் கூட இன்னும் கடந்து வர வேண்டிய தூரம் நிறைய இருப்பதை உணர முடிந்தது. Wipro ஊழியர்களுக்கு மாறிக் கொண்டிருக்கும் டெக்னாலஜி உலகைப் பற்றிப் பயிற்சியளிக்க, Wipro-விடம் வலுவான பயிற்சி கட்டமைப்புகள் இருக்கின்றன. ஆனால் குறுகிய காலத்தில் ப்ராஜெக்டில் இறக்கி வேலை பார்ப்பதில் தான் சிக்கல்கள் இருக்கின்றன" என்கிறார் செளரப்.
குறைவான பயிற்சி
அதோடு அமெரிக்க ஐடி ஊழியர்களுக்கு, இந்திய ஐடி ஊழியர்களுக்கு கொடுக்கும் பயிற்சியை விட குறைவான பயிற்சியே போதுமானதாக இருக்கிறது. அமெரிக்கர்களை விரைவில் ப்ராஜெக்டில் இறக்கி வேலை வாங்க முடிகிறது எனவும் சொல்லி பகீர் கிளப்பி இருக்கிறது Wipro. ஏற்கனவே Wipro நிறுவனத்தின் மிகப் பெரிய ஐடி சந்தைகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏகப்பட்ட உள்நாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தி பயிற்சி கொடுத்து ப்ராஜெக்ட்களிலும் இறக்கிக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
6000 பேர்
Wipro கடந்த ஏப்ரல் 2019 முதல் ஜூன் 2019 வரையான காலாண்டில் மட்டும் சுமார் 6,000 ப்ரெஷ்ஷர்களை பல்வேறு நாடுகளில் வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம். குறிப்பாக அமெரிக்காவில் நிறைய ப்ரெஷ்ஷர்களை வேலைக்கு எடுத்திருக்கிறார்களாம். ஆனால் அமெரிக்காவில் எத்தனை ப்ரெஷ்ஷர்களை வேலைக்கு எடுத்திருக்கிறார்கள் என்கிற விவரத்தை வெளியில் சொல்லவில்லை. இது நாள் வரை Wipro, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் போன்ற இந்திய ஐடி நிறுவனங்கள் என யாரைக் கேட்டாலும் இந்தியர்களை வெளிநாட்டுக்கு அனுப்பி வேலை பார்ப்பதைத் தான் முன் மொழிந்தார்கள். ஆனால் இப்போது அந்த டிரெண்டை மெல்ல உடைக்கத் தொடங்கி இருக்கிறது Wipro. காரணம் செலவு குறைவு மற்றும் உடனடியாக ப்ராஜெக்டில் இறங்கி அடிக்கும் அமெரிக்கர்கள்.
அமெரிக்க கெடுபிடி
கடந்த சில ஆண்டுகளாக அமெரிக்கா தன் வேலைவாய்ப்பை பாதுகாத்துக் கொள்ளும் வேலையில் படு தீவிரமாக இறங்கி இருக்கிறது. ஐடி துறையில் இந்தியர்களுக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஹெச் 1 பி விசா வழங்களில் இந்தியர்களை புரட்டி எடுத்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. இப்போது ஐடி நிறுவனங்களும் இந்தியர்களை விட்டு விட்டு அடுத்த ஆட்களைப் பிடித்து வேலை வாங்கத் தொடங்கி இருக்கிறது.
யாருக்கு என்ன பிரச்னை என்றாலும், கம்பெனியை நடத்தியாக வேண்டுமே அது தானே கார்ப்பரேட் தர்மம்.