ஜெய்பூர், ராஜஸ்தான்: ஜெய்பூர் நகரவாசிகளுக்காக ராம் நிவாஸ் பாக் மற்றும் ராம்பாக் சர்கில் பகுதிகளில் ஸ்மார்ட் கழிவறைகளைக் கட்டத் தொடங்கி இருக்கிறது ஜெய்பூர் மேம்பாட்டு ஆணையம். இந்த ஸ்மார்ட் கழிவறை ஜெய்பூர் பேருந்து நிலையத்துக்கு அருகில் கட்டிக் கொண்டிருக்கிறார்களாம்.
அப்படி என்ன ஸ்மார்ட் கழிவறையில் இருக்கிறது..? எனக் கேட்டால்,
1. பேருந்துக்காக காத்திருப்பவர்களுக்கு தனி இடம் இருக்குமாம்.
2. பெண்களுக்கான கழிவறைகளில் நாப்கின்களை வழங்கும் இயந்திரம் பொருத்தப்பட்டு இருக்குமாம்.
3. அதோடு பயன்படுத்திய நாப்கின்களைச் சேகரிக்க incinerator-களையும் வைக்கப் போகிறார்களாம்.
4. மிக முக்கியமாக கைக் குழந்தையை வைத்திருக்கும் தாய் மார்கள், தங்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்ட தனி அறையை ஒதுக்க இருக்கிறார்களாம்.
அதோடு இந்த ஸ்மார்ட் கழிவறைக்கு அருகிலேயே
1. குளிர்ந்த நீரைக் கொடுக்கும் இயந்திரம்,
2. வங்கிகளில் இருந்து பணம் எடுக்க உதவும் ஏடிஎம் இயந்திரம்
3. Wifi போன்ற வசதிகளையும் கொடுக்க இருக்கிறார்களாம்.
இந்த ஸ்மார்ட் கழிவறைகளை கிட்ட தட்ட கட்டி முடித்துவிட்டார்களாம். இன்னும் சில வாரங்களில் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப் போகிறார்களாம்.
இந்த ஸ்மார்ட் கழிவறை மக்களுக்கு கூடுமான வரை அனைத்து வசதிகளையும் பொது இடத்தில் கொடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார் ஜெய்பூர் நகர மேம்பாட்டு ஆணைய இயக்குநர் வி எஸ் சுனந்தா.
மேலே சொன்னது போல, பேருந்துக்காக காத்திருப்பவர்களுக்கு என்று தனி காத்திருப்பு அறை வசதிகள் டெல்லி, மும்பை போன்ற பெரு நகரங்களில் நடைமுறையில் இருக்கிறது எனவும் சொல்லி இருக்கிறார்கள் ஜெய்பூர் நகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள். இதெல்லாம் போக கட்டி முடிக்கப்படும் இந்த ஸ்மார்ட் கழிவறையை யார் நடத்துவது என இன்னும் தீர்மானிக்கவில்லையாம்.
பெரும்பாலும் ஜெய்பூர் நகராட்சி தான் ஏற்று நடத்த வேண்டி இருக்கும். யார் ஏற்று நடத்துவார்கள் என்கிற விவரத்தை கூடிய விரைவில் தெரிவிக்கிறோம் எனச் சொல்கிறார்கள் ஜெய்பூர் நகர மேம்பாட்டு ஆணைய அதிகாரிகள். இப்படி ஒரு கழிவறையைக் கட்ட சுமார் 60 லட்சம் ரூபாய் செலவாகிறதாம். இப்படி ஜெய்பூர் நகரத்தின் முக்கியமான பகுதிகளில் ஐந்து கழிவறைகளைக் கட்ட அரசிடம் கேட்டார்களாம்.
ஆனால் போதுமான பட்ஜெட் இல்லாததால், இரண்டு ஸ்மார்ட் கழிவறைகளை மட்டுமே கட்டிக் கொண்டிருக்கிறார்களாம். மேலே சொன்ன எல்லா வசதிகளும் ஓகே. ஆனால் கழிவறையில் Wifi வசதி எதற்கு என்று தான் தெரியவில்லை.