வதோதரா: ஒட்டகப் பால்ல டீ போட்றா, ஒட்டகப் பால்ல டீ போட்றான்ன கேக்குறியாடா, துபாய்ல எல்லாருமே ஒட்கப் பால்ல தான் டீ போட்றாங்க, இனிமே நீயும் அதே மாதிரி ஒட்டகப் பால்ல டீ போடு என்று 20 ஆண்டுகளுக்கு முன் வடிவேலு ஒரு படத்தில் வசனம் பேசியிருப்பார். அந்த டயலாக் இன்றைக்கும் வெகு பிரபலம். அது விரைவில் உண்மையாகவே நடக்கப்போகிறது. பிரபல பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான அமுல் விரைவில் ஒட்டகப் பாலையும் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
200 மில்லி ஒட்டகப் பாலின் விலை சுமார் 25 ரூபாயாக இருக்கும் என்றும் அமல் நிறுவன உயரதிகாரிகள் தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த ஜனவரி மாதத்தில் 500 மில்லி பாட்டிலை ரூ.50 என்ற விலையில் அறிமுகப்படுத்தியது. அதற்கு கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து தற்போது அதைவிட குறைந்த அளவில் 200 மில்லி லிட்டர் பாட்டிலை அறிமுகப்படுத்த முன்வந்துள்ளது.
இந்தியாவின் பிரபலமான பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான அமல். கடந்த 1946ஆம் ஆண்டு குஜராத்தில் ஆரம்பிக்கப்பட்ட கூட்டுறவு ஒன்றியமாகும். குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் ஆனந்த் என்னும் ஊரில் இயங்கும் பால் உற்பத்தியாளர் ஒன்றியமாகும். இதன் காரணமாகவே இதற்கு ஆனந்த் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் (Anand Milk Producers Union Limited-AMUL) ஆகும்.
பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பெறப்படும் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதோடு, பால் துணைப் பொருட்களான பால் பவுடர், வெண்ணெய், மற்றும் ஐஸ் கீரீம் போன்றவற்றையும் உற்பத்தி செய்து நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது. மேலும் பால் துணைப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் ஆண்டு தோறும் சுமார் 200 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி வருகிறது.
இந்நிலையில் அமுல் நிறுவனம், ஒட்டகப் பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய முடிவெடுத்தது. குஜராத்தின் தலைநகரான காந்தி நகரில் உள்ள அமுல் உற்பத்தியகத்தில் 500 மி.லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒட்டகப் பால் பாட்டில்கள் தயார் செய்யப்பட்டு கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.50க்கு விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது.
ஒட்டகப் பாலுக்கு பொதுமக்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்பை அடுத்து, தற்போது அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்படுத்தும் வகையில் 200 மி.லிட்டர் பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளது. 200 மி.லிட்டர் பாட்டிலின் விலை சுமார் 25 ரூபாய் என விலை நிர்ணயம் செய்துள்ளது.
200 மி.லிட்டர் பாட்டில் ஒட்டகப் பால் இன்னும் ஒரு சில தினங்களில் விற்பனைக்கு வரும் என்று அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்எஸ் ஷோதி (RS Sodhi) தெரிவித்துள்ளார். அப்போ இனி குஜராத் போனா டீ கடைகளில் ஒட்டகப்பாலில் டீ போடு என்று தைரியமாக கேட்கலாம்.
குஜராத்தில் அமுல் பாலுக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து, அதை முன்மாதிரியாகக் கொண்டு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் இயங்கி வரும் ஆவின் (Aavin) நிறுவனமும் அமுல் உற்பத்தியாளர்கள் இணையத்தை முன் மாதிரியாகக் கொண்டே உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.