5 டிரில்லியன் டாலர் கனவில் இருக்கும் மோடி அரசுக்கு இந்தச் செய்தி நிச்சயம் அதிர்ச்சியாகத் தான் இருக்கும், ஆனால் பாதிப்பு மொத்தமும் மக்களுக்குத் தான்.
இந்தியாவின் மிக முக்கியத் தொழிற்துறைகளில் ஒன்று, ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் துறை. உற்பத்தி, விநியோகம், ஏற்றுமதி, இறக்குமதி, மொத்த விற்பனை, சில்லறை விற்பனை எனப் பல வகையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 50 லட்ச பேருக்கு வேலைவாய்ப்பை அளித்து வரும் இத்துறை தற்போது மாபெரும் சிக்கலில் சிக்கியுள்ளது.
ஆட்டோமொபைல் துறை எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய வர்த்தகச் சரிவைச் சந்தித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் மட்டும் பயணிகள் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கை 18.4 சதவீதம் குறைந்துள்ளது. ஜூன் மாத விற்பனை அளவு சுமார் 18 வருடச் சரிவைச் சந்தித்து மொத்த ஆட்டோமொபைல் துறையையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இச்சரிவின் காரணமாக வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தயாரிப்பு அளவை அதிகளவில் குறைக்க முடிவு செய்துள்ளது. இதன் எதிரொலியாக ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களும் உற்பத்தியைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
இதன் விளைவு, லட்சக்கணக்கான ஊழியர்கள் நாடு முழுவதும் பணிநீக்கம்.
இதுகுறித்து இந்திய ஆட்டோமொபைல் உதிரிப் பாகங்கள் உற்பத்தியாளர்கள் அமைப்பு தலைவர் ராம் வெங்கட்ரமணி கூறுகையில், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அறிவித்துள்ள உற்பத்தி குறைப்பு ஆட்டோமொபைல் துறையில் மாபெரும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இதோடு ஆட்டோமொபைல் துறையில் இதே நிலை தொடர்ந்தால் இத்துறையில் சுமார் 10 லட்சம் பேர் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடும் எனவும் விளக்கமாகக் கூறியுள்ளார்.
ஆட்டோமொபைல் துறையில் ஏற்படும் இந்த உற்பத்தி சரிவு நாட்டின் மொத்த உற்பத்தியில் 50 சதவீதத்தைப் பாதிக்கும்.
இதோடு எலக்ட்ரிக் வாகன கொள்கை மீது அரசுக்குத் தெளிவான புரிதல் இல்லாத காரணத்தால் ஆட்டோமொபைல் துறையில் முதலீடும் முற்றிலும் முடங்கியுள்ளது, இதனால் வளர்ச்சி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
ஆட்டோமொபைல் துறையில் இந்த மோசமான நிலையை உடனடியாகச் சரி செய்ய ஓரே வழி, வாகனங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை அதிகளவில் குறைப்பது மட்டும் தான் எனவும் ராம் வெங்கட்ரமணி கூறியுள்ளார்.