திருச்சிராப்பள்ளி : என்ன தான் பொருளாதாரமும், தொழில்நுட்பமும் வளர்ந்து வந்தாலும், இந்த இயந்திர தனமான வாழ்க்கையில், இன்றளவிலும் கூட சில கிராமங்களில், சில கலாச்சாரங்கள் கடைபிடிக்கப்பட்டு தான் வருகின்றன. அப்படிப்பட்டவைகளில் ஒன்றுதான் இந்த மொய் விருந்து.
ஆமாங்கா.. பொருளாதார நிலையில் மிகவும் பின்தங்கியுள்ளவர்களை, உறவினர்கள், ஊர்மக்கள் சேர்ந்து கைதூக்கி விடுவதற்காக நடத்தப்படும் ஒரு அரிய நிகழ்ச்சி. இன்னும் எளிதாகக் கூறுவதென்றால் தொழில் அல்லது விவசாயம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களை முன்னேறச் செய்ய அளிக்கப்படும் வட்டியில்லாக் கடன் தான் இந்த மொய்.
அதிலும் நம்முடைய முன்னோர்கள் எந்த ஒரு நிகழ்வையும் காரணமில்லாமல் செய்து விடவில்லை. ஆனால் அவைகள் கால போக்கில், அவை எல்லாம் சம்பிரதாயமாக மாறி, பின்னர் சிதைந்து போனது தான் உண்மை.
மொய் செய்முறை- மறைமுக உதவி!
மொய் என்ற ஒன்றுகூட அப்படித்தான். திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் ஆகட்டும், துக்க நிகழ்ச்சிகள் ஆகட்டும் சம்பந்தப்பட்டவர்களின் நிகழ்ச்சி செலவுக்கு ஆகும் பணத்தை உறவினர்கள் மொய், செய்முறை என்ற பெயரில் சம்பிரதாயமாக மறைமுகமாக தந்து உதவினர். ஆனால் இன்றைய காலங்களில் இது தற்போது மறைக்கப்பட்டு விட்டது. சில இடங்களில் மறந்தும் விட்டனர்.
உயிருடன் இருக்கும் கலாச்சாரம்
ஏதோ சில இடங்களில் இன்னும் நமது கலாச்சாரம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்று இந்த மாதிரியான செய்திகளை பார்க்கும் போதுதான் தெரிகிறது. ஆமாங்க.. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், வடகாடு மற்றும் சில கிராமங்களிலும், தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தொகுதியில் உள்ள கிராமங்களிலும், கடந்த 25 ஆண்டுகளாக மொய்விருந்து களைகட்டி வருகிறது.
பொருளாதாரத்தில் நலிந்தவர்களுக்கு உதவி
பொருளாதாரத்தில் நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், கல்யாணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கு பணத்தேவை இருப்பவர்கள் இந்த மொய் விருந்தை நடத்துவதுண்டு. இந்த நிலையில் இந்த விருந்தில், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கை.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட மொய்
இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவெனில், முன்னரொல்லாம் ஒரு தனி நபரின் மொய் வசூல் ஒரு கோடி ரூபாய் வரை இருந்து வந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக அதிகபட்சமாக ரூ.5 கோடி வரை வசூலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த ஆண்டு கஜா புயலின் பாதிப்பால் மொய் விருந்தும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாம். எதிர்பார்க்கும் அளவைவிட மிக குறைவான தொகையே வசூலாகிறது என்கிறார்கள் மொய் விருந்து வைக்கும் நபர்கள்.
அடியில் திருமண நிகழ்வுகளும் & விவசாயிகளுக்கு வேலை இருக்காது
இந்த நிலையில் கீரமங்கலம், செரியலூர், மேல்பனைக்காடு, குளமங்கலம், பனங்குளம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடி மாதம் முதலில் இருந்தே இந்த மொய்விருந்துகள் நடந்து வருகிறது. இதே போல் வடகாடு, மாங்காடு, கொத்தமங்கலம், அணவயல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் ஆடி மாதம் முதல் தொடங்கி மொய் விருந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக இந்த மாதத்தில் இந்த விருந்தினை வைக்க காரணம் விவசாயிகளும் அதிக வேலையில்லாமல் இருப்பர். அதோடு திருமண முகூர்த்தங்களும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.
கிருஷ்ணமூர்த்தியின் மொய் விருந்து!
இந்த நிலையில், புதுக்கோட்டை அருகேயுள்ள வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி பிரமாண்டமான அளவில் மொய் விருந்து நடத்தியுள்ளார். இதற்காக பெரிய அளவில் பந்தல் அமைக்கப்பட்டு, விருந்தும் வைக்கப்பட்டதாம். இந்த மொய் விருந்தில் பங்கேற்பவர்கள் வழங்கும் மொய்ப் பணத்தை எண்ணுவதற்காக தனியார் வங்கி அலுவலர்கள் பணம் எண்ணும் எந்திரங்களுடன் சேவை மையத்தை அமைத்திருந்தனராம். இந்த நிலையில் சுமார் 20 இடங்களில் மொய் எழுதப்பட்டடுள்ளது. வசூல் செய்யப்பட்ட மொய் பணம் தனியார் வங்கி சேவை மையத்தில் எண்ணப்பட்டதாம்.
தடபுடலாக நடந்த மொய் விருந்து?
இந்த மொய் விருந்தையொட்டி, சுமார் 50,000 அழைப்பிதழ்கள் அச்சடிக்கப்பட்டு உற்றார், உறவினர்களுக்கு கொடுக்கப்பட்டு இருந்ததாம். மேலும் 200க்கும் மேற்பட்ட விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது. மேலும் ஒரு டன் ஆட்டுக்கறி சமைக்கப்பட்டு அசைவ விருந்தும் பரிமாறப்பட்டதாம்.
சைவம் & அசைவம் உண்டு
அசைவம் சாப்பிடாதவர்களுக்கு சைவ உணவு தனியாக சமைத்து தனிப்பந்தலில் பரிமாறப்பட்டது. உணவு நேரத்தில் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் தண்ணீர் பாக்கெட்டுகளை தவிர்த்துவிட்டு அனைவருக்கும் குவளையில் தண்ணீர் கொடுக்கப்பட்டது. உணவு சமைக்கவும், விருந்து பரிமாறவும் சுமார் 100 பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர். இந்த மொய் விருந்திற்காக மட்டும் ரூ.15 லட்சம் வரை கிருஷ்ணமூர்த்தி செலவு செய்துள்ளாராம்.
மொத்த மொய் ரூ.4.5 கோடி தான்
இந்த நிலையில் மாலை விருந்து முடிந்த நிலையில் வசூல் செய்யப்பட்ட மொய் பணம் எண்ணப்பட்டது. அதில் ரூ.4.5 கோடி வரை கிடைத்திருந்தது. இந்த ஆண்டில் இதுவரை நடந்த மொய் விருந்துகளில் தனிநபரின் அதிகபட்ச மொய் வசூல் இது தான் என்றும் கூறப்படுகிறது. ஆனால் இவருக்கு 7 கோடி ரூபாய்க்கும் மேல் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் விவசாயிகளின் வருமானம் குறைவு என்பதால் இந்த வசூல் குறைந்துள்ளது என்று விருந்துக்கு வந்த மக்களிடையே கூறப்படுகிறதாம்.