மும்பை: சர்வதேச அளவில் எங்களின் வாட்ஸ்அப் செயலியை அதிக அளவில் பயன்படுத்தி வந்தாலும் கூட, இந்தியர்கள் தான் பயன்படுத்துவதில் உலக அளவில் முன்னணியில் உள்ளனர். எனவே இந்திய பயனாளர்களின் கைகளில் தான் எங்களின் எதிர்காலமே உள்ளது என்று வாட்ஸ்அப் நிறுவனத்தின் சர்வதேச தலைவர் வில் கேத்கார்ட் வெளிப்படையாக கூறினார்.
கடந்த பிப்ரவரி மாதத்தில் வாட்ஸ்அப் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 20 கோடியாக இருந்து நிலையில், படிப்படியாக அதிகரித்து தற்போது சுமார் 40 கோடி பயனாளர்களுடன் முன்னணியில் உள்ளது என்றும் கேத்கார்ட் தெரிவித்தார். இது உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரில் 36 சதவிகிதமாகும்.
உலகில் எந்த மூலையில் என்ன விதமான பொருட்கள் தயாரிக்கப்பட்டாலோ அல்லது கண்டுபிடிப்புகள் நடந்தாலோ, அது வெகுஜன மக்களை கவர்ந்தால் தான் வெற்றியடையும். இல்லாவிட்டால் அது காணாமல் போய்விடும், அல்லது விரைவில் வழக்கொழிந்து போய்விடும்.
அதுவும் உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட இந்திய சந்தையை கவர்ந்தால் தான் அந்த பொருளோ அல்லது கண்டுபிடிப்பு வெற்றியடையும் என்பதும் அனைவரும் ஒப்புக்கொண்ட உண்மையும் கூட. அது குண்டூசியாக இருந்தாலும் சரி அல்லது விலை உயர்ந்த ஸ்மார்ட் ஃபோனாக இருந்தாலும் சரி. இந்திய சந்தையில் வெற்றியடையாவிட்டால் அது குப்பை கூடைக்குத்தான் போகும். மேற்கண்ட உண்மையை வாட்ஸ்அப் நிறுவனத்தின் சர்வதேச தலைவரும் இப்பொழுது ஒப்புக்கொண்டுள்ளார்.
ஒரு காலத்தில் தகவல் பரிமாற்றத்திற்கு அதிக அளவில் பயன்படுத்திய தந்தி சேவை, கடிதப் போக்குவரத்து ஆகியவை தற்போது வழக்கொழிந்து கிடக்கின்றன. அதற்கு பதிலாக செய்திகளையும் தகவல்களையும் உடனடியாக மற்றவர்களுக்கு தெரிவிப்பதற்கு தொலைபேசி அல்லது மொபைல் ஃபோனுக்கு பதிலாக பெரும்பாலும் வாட்ஸ்அப் செயலியையே பயன்படுத்துகிறோம். இதற்கு முக்கிய காரணம் வாட்ஸ்அப்பில் தகவல்களை அனுப்புவதற்கு எந்தவிதமான கட்டணங்களும் கிடையாது என்பதுதான்.
இன்றைக்கு மொபைல்ஃபோன் பயன்படுத்தும் அனைவரும் காலையில் எழுந்தவுடன் கண்விழித்துப் பார்ப்பது வாட்ஸ்அப் செயலியைத் தான். அதில் அன்றைக்கு எத்தனை தகவல்கள், எத்தனை குட் மார்னிங் வந்துள்ளது என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளாவிட்டால் அன்றைக்கு அவர்களுக்கு எந்த வேலையும் ஓடாது. அந்த நாளும் நகராது. என்னமோ மந்திரித்து விட்டது போலவே நடந்துகொள்வார்கள். அந்த அளவிற்கு வாட்ஸ்அப் அனைவரின் ரத்த ஒட்டத்திலும் கலந்துவிட்டது என்றே சொல்லலாம்.
வாட்ஸ்அப் செயலி இந்த அளவிற்கு பிரபலமாவதற்கு முக்கிய காரணம், உலகின் எந்த மூலையில் எந்த ஒரு நல்ல நிகழ்வோ, அரசியல் மாற்றமோ, குற்றங்களோ நடந்தால் அது உடனடியாக வெளிச்சத்திற்கு வந்துவிடுகிறது. குற்றச் சம்பவங்கள் நடந்த சில மணி நேரங்களில் அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் வெகு சீக்கிரத்தில் கண்டுபிடிக்கப்பட்டுவிடுகிறார்கள். வாட்ஸ்அப் செயலி அந்த அளவிற்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது எனலாம். அதிலும் மொபைல் ஃபோன்களை அதிகம் பயன்படுத்தும் இந்தியாவில் வாட்ஸ்அப் செயலியின் தாக்கம் அதிகம். இன்றைக்கு உலகில் செய்திகளை பரிமாற்றம் செய்வதற்கு அதிகம் பயன்படுத்துவது வாட்ஸ்அப் செயலியைத்தான். வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்துவது நாளுக்கு நாள் கூடிக்கொண்டேதான் செல்கிறது,
உலகம் முழுவதும் வாட்ஸ்அப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை சுமார் சுமார் 110 கோடி பேர். இதில் இந்தியர்களின் எண்ணிக்கை சுமார் 40 கோடி பேர்களாகும். இது மொத்த வாட்ஸ்அப் பயன்படுத்துவோரில் சுமார் 36 சதவிகிதமாகும். அதேபோல் கடந்த பிப்ரவரி மாதத்தில் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்தும் இந்தியரிகளின் எண்ணிக்கையானது 20 கோடியாக இருந்தது. தற்போது இரண்டு மடங்காக அதிகரித்து இன்றைக்கு சுமார் 40 கோடியாக உயர்ந்துள்ளது. வாட்ஸ்அப் செயலியே இந்திய சந்தையை நம்பியே உள்ளது என்று சொல்லலாம்.
இன்றைக்கு வாட்ஸ்அப் செயலியே இந்திய சந்தையை நம்பியே உள்ளது. இந்த உண்மையை யார் ஒப்புக்கொள்கிறார்களோ இல்லையோ, வாட்ஸ்அப் செயலியின் சர்வதேச தலைவர் வில் கேத்கார்ட் (Will Cathcart) வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளார். எங்களின் எதிர்காலமே இந்தியா தான், உலகளாவிய அளவில் வாட்ஸ்அப் செயலியின் மிகப்பெரிய சந்தையே இந்தியாதான் என்று சந்தோசப்படுகிறார்.
வாட்ஸ்அப்பில் போலியான பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை தடுக்கவும், அதன் தரத்தை உயர்த்தவும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தற்போது செய்திகளை அதிக பட்சம் 5 நபர்களுக்கு மட்டுமே அனுப்பும் வசதி உள்ளது. அதையும் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதோபோல் உலகம் முழுவதும் சுமார் 20 லட்சம் போலியான கணக்குகளை கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்அப் செயலி மூலமாக பணப்பரிமாற்றம் செய்வதற்கு கட்டமைப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. பெரும்பாலான மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப இந்த ஆண்டிற்குள் அதுவும் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் வில் கேத்கார்ட் கூறினார்.