டெல்லி: கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், இந்திய Railways நிர்வாகம் 140 கோடி ரூபாயை வெறும் ப்ளாட்ஃபார்ம் டிக்கெட்களை விற்றே வருவாய் ஈட்டி இருப்பதாக ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று (ஜூலை 26, 2019, வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார்.
அதோடு பாராளுமன்ற மேலவையான ராஜ்யசபாவில் பேசிய பியுஷ் கோயல், கடந்த 2018 - 19 நிதி ஆண்டில், இந்திய ரயில் நிலையங்களிலும், ரயில் நிலையங்களில் இருக்கும் கடைகளில் போட்ட விளம்பரங்கள், ப்ளாட்ஃபார்ம்களில் இருக்கும் கடைகளில் போடும் விளம்பரங்கள் வழியாக சுமார் 230 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.
தற்போது இந்திய Railways நிர்வாகத்தில் இருக்கும் கொள்கைகள் படி, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே ப்ளாட்ஃபார்ம்களில் இயங்கும் கடைகளை நடத்த திறந்த ஏலம் நடத்தி, உரிமங்களை வழங்கி இருக்கிறார்களாம். அதே போல, ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே ப்ளாட்ஃபார்ம்களில் விளம்பரம் செய்யவும் திறந்த ஏலம் நடத்தி உரிமங்களை வழங்கி இருக்கிறார்களாம்.
ஆகையால் என்ன விலைக்கு கடைகளை நடத்தவும், விளம்பரங்களைச் செய்து கொள்ளவும் உரிமங்கள் வழங்கப்பட்டது, ஏலம் கொடுக்கப்பட்டது எனச் சொல்வது சரியாக இருக்காது என பாராளுமன்ற மேலவையில் சொல்லி இருக்கிறார் மத்திய ரயில்வே, வணிகம் & தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல்.
ரயில் நிலையங்களில் கடை நடத்தவும் விளம்பரம் செய்து கொள்ளவும், ஒரு குறைந்த பட்ச உரிமத் தொகையை முதலில் முடிவு செய்து விடுகிறார்களாம். அப்போது தான் Railways-க்கு ஒரு குறிப்பிட்ட தொகை குறைந்தபட்ச வருமானம் வந்து கொண்டே இருக்குமாம். அதன் பிறகு தான் ஒரு திறந்த ஏலம் நடத்தப்பட்டு தொகையை நிர்ணயித்து விளம்பரம் செய்யவும், கடைகளை நடத்தவும் உரிமங்களைக் கொடுப்பதாகச் சொல்லி இருக்கிறார் மத்திய ரயில்வே, வணிகம் & தொழில் துறை அமைச்சர் பியுஷ் கோயல்.
இதை எல்லாம் இழுத்துப் பிடித்து சிறப்பாக செய்யும் இதே அமைச்சர் தான், இந்திய ரயில்வேயை தனியார் மயமாக்குவதிலும் அத்தனை அவசரம் காட்டுகிறார் என்பது தான் கொஞ்சம் திடுக்கிட வைக்கும் செய்தியாக இருக்கிறது. ஏற்கனவே தனியாருக்கு தாரை வார்க்க ஒரு ரயிலைத் தயார் செய்துவிட்டார்கள். இன்னொரு ரயிலைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.