டெல்லி: Reliance Jio- தான் அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களான பி எஸ் என் எல் மற்றும் எம் டி என் எல் நிறுவன செல்போன் டவர்களின் மிகப் பெரிய வாடிக்கையாளர் என சில தினங்களுக்கு முன் பாராளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.
அரசு தகவல் தொலைத் தொடர்புத் துறை நிறுவனமான பி எஸ் என் எல் 13,051 செல்போன் டவர்களை வாடகைக்கு விட்டிருக்கிறதாம். இதில் 8,307 செல்போன் டவர்களை Reliance Jio நிறுவனத்துக்கு மட்டும் வாடகைக்கு பி எஸ் என் எல் நிறுவனம் விட்டிருக்கிறதாம். மீதமுள்ள 4,744 செல்போன் டவர்களில் 2,761 செல்போன் டவர்களை ஏர்டெல் நிறுவனத்துக்கும், 892 செல்போன் டவர்களை வோடாஃபோன் நிறுவனத்துக்கும், 941 செல்போன் டவர்களை ஐடியா செல்லூலர் மற்றும் 127 செல்போன் டவர்களை சிஃபி நிறுவனத்துக்கும் வாடகைக்கு விட்டிருக்கிறார்களாம்.
அதே போல எம் டி என் எல் 392 செல்போன் டவர்களை வாடகைக்கு விட்டிருக்கிறதாம். அதில் 137 செல்போன் டவர்களை Reliance Jio-க்கு மட்டும் வாடகைக்கு விட்டிருக்கிறார்களாம். மாதம் ஒன்றுக்கு 21,000 ரூபாய் முதல் 38,700 ரூபாய் வரை அரசின் பி எஸ் என் எல் நிறுவனம் ஒரு டவருக்கு மாத வாடகையாக, தனியார் டெலிகாம் நிறுவனங்களிடம் இருந்து வாங்குகிறார்களாம். அதே போல எம் டி என் எல் ஒரு செல்போன் டவருக்கு மாத வாடகையாக, ஒரு டெலிகாம் நிறுவனத்திடம் இருந்து, சுமார் 30,000 ரூபாய் முதல் 1,50,000 ரூபாய் வரை செல்போன் டவர் இருக்கும் இடம், நகரம், கிராமபுறம், மக்கள் அடர்த்தி போன்றவைகளைக் கணக்கில் கொண்டு வசூலிக்கிறதாம்.
தனியார் டெலிகாம் நிறுவனங்கள், பெரும்பாலும் சரியான நேரத்தில் தங்கள் மாத வாடகைகளைச் செலுத்தி விடுகிறார்கள். அப்படி ஒழுங்காகச் செலுத்தாதவர்கள் மீதும் சரியான நடவடிக்கை எடுத்து பாக்கியை வசூலித்து விடுவதாக, பாராளுமன்றத்தில் சொல்லி இருக்கிறார் மத்திய எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.