மங்களூரு, கர்நாடகா: நேற்று (ஜூலை 29, 2019) மாலை நேரத்தில் CCD Founder V G Siddhaartha மாயமானார். இதுவரை எந்த ஒரு தெளிவான தகவல்களும் கிடைக்கவில்லை. கடைசியாக CCD Founder V G Siddhaartha-வை பார்த்த கார் ஓட்டுநர் பசவராஜ் பாட்டீல் தொடங்கி அவர் செல்போனில் பேசியவர்கள், நேரடியாகச் சென்று பேசியவர்கள் என பலரிடமும் கர்நாடக காவல் துறை துருவி துருவி விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள்.
CCD Founder V G Siddhaartha வெறும் காபி டேவின் நிறுவனர் மட்டுமல்ல. இவர் முன்னாள் கர்நாடக முதல் அமைச்சர் மற்றும் மத்திய அமைச்சரான எஸ் எம் கிருஷ்ணாவின் மருமகனும் கூட. ஆகையால் ஒட்டுமொத்த கர்நாடகமே பதற்றத்திலும், வேகத்திலும் ராப் பகலாக பணியாற்றத் தொடங்கி இருக்கிறது. இந்த இக்கட்டான சூழலில் அரசியல் நாகரீகத்துக்காகவும், நட்புக்காகவும் எஸ் எம் கிருஷ்ணாவின் ஆதரவாளர்கள், டி வி சிவகுமார் போன்ற கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள், தற்போதைய முதல்வர் எடியூரப்பா என பலரும் தொடர்ச்சியாக எஸ் எம் கிருஷ்ணாவுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பக்கம் இத்தனையும் நடந்து கொண்டிருக்க பங்குச் சந்தை வேறு மாதிரியான விளைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. Cafe Coffee Day நிறுவனம் கடந்த 2015 அக்டோபர், நவம்பர் காலங்களில் தான் ஐபிஓ முறையில் பங்குச் சந்தையில், பங்குகளை வெளியிட்டு முதல் திரட்டியது. ஐபிஓ விலை ஒரு பங்குக்கு 328 ரூபாயாக இருந்தது. அப்படி Cafe Coffee Day ஐபிஓ வெளியிட்ட பின் தன் வாழ்நாள் உச்சமாக வெறும் 349 ரூபாயைத் தான் தொட்டு வர்த்தகமானது. அதுவும் ஐபிஓ வெளியான அக்டோபர் 2015-ம் ஆண்டுக்குப் பிறகு, சுமார் 26 மாதங்கள் கழித்து ஜனவரி 2018-ல் தான் இந்த விலையைத் தொட முடிந்தது.
தற்போது Cafe Coffee Day நிறுவனர் V G Siddhartha காணாமல் போன செய்தி கேள்விப்பட்ட உடனேயே பங்குச் சந்தையில் Cafe Coffee Day நிறுவன பங்குகளின் விலை சுமார் 20 சதவிகித விலை இறக்கத்திலேயே வர்த்தகமாகி வருகின்றன. நேற்று திங்கட்கிழமை மாலை 191.75 ரூபாய்க்கு வர்த்தகம் நிறைவடைந்த Cafe Coffee Day பங்கு விலை தற்போது சுமார் 38.50 ரூபாய் சரிந்து வெறும் 153 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது.