பெங்களூரு: வீட்டு உபயோகப் பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்து வரும் ஃபிளிப்கார்ட் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு நிறுவனம் தற்போது ஆஃப் லைனில் பொருட்களை வாங்கும் வகையில் பெங்களூருவில் ஃபர்னிச்சர் கடையை திறக்க முடிவு செய்துள்ளது.
வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை அதன் தரத்தையும் நம்பத் தன்மையையும் நேரடியாக சோதித்து பார்த்து வாங்கும் வகையில் சுமார் 1800 சதுர அடி பரப்பளவில் ஃபர்னிச்சர் கடையை விரைவில் திறக்கப் போவதாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை நேரடியாகவே பார்த்து ரசித்து அனுபவித்து வாங்கி மகிழ்ந்தனர். அதிலும் திருவிழாக் காலங்களில் என்றால் சொல்லவே வேண்டாம். தங்களுடன் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் புடைசூழ கடைகளுக்கு படையெடுத்து சென்று பொருட்கள் அள்ளி வருவதுண்டு.
நாளடைவில் பொதுமக்களும் வெளியில் சென்று அலைந்து திரிந்து நாலு கடைகள் ஏறி இறங்கி பொருட்களை வாங்குவது பெரிய இம்சை என்று நினைத்து இதற்கு ஏதாவது மாற்று வழி ஏதாவது வராதா என்று ஏங்கத் தொடங்கினர். இவர்களின் நினைப்பிற்கு தோதாக, ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்வதற்கென ஸ்டார்ட்அப் நிறுவனங்களான அமேசான், ஃபிளிப்கார்ட், இபே, ஸ்நாப்டீல் போன்றவை முளைக்க ஆரம்பித்தன.
பொதுமக்களும் தங்களுக்கு தேவையான அனைத்தையும் உட்கார்ந்த இடத்திலிருந்தே ஆன்லைனில் பொருட்களை தேர்ந்தெடுத்து வாங்க ஆரம்பித்தனர். ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் பொருட்களை சரியான நேரத்தில் டெலிவரி செய்வதை அறிந்த வாடிக்கையாளர்களும் போகப்போக அரிசி, பருப்பு, ஊறுகாய் முதல் வீட்டு உபயோகப் பொருட்களான அறைகலன் வரை அனைத்தையுமே ஆன்லைனில் வாங்க தொடங்கினர். இதனால் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் வர்த்தகம் எதிர்பார்க்காத அளவில் அதிகரிக்க ஆரம்பித்தன.
வாடிக்கையாளர்கள் அதிகரிக்க ஆரம்பித்த உடன் இதில் உள்ள பாதகமான அம்சங்கள் வெளிவரத் தொடங்கின. போட்டி நிறுவனங்களை சமாளிக்க ஒன்றையொன்று போட்டி போட்டு அதிரடி சலுகைகளை அள்ளி வழங்கத் ஆரம்பித்தன. இதனால் ஆன்லைன் விற்பனை நிறுவனங்களின் விற்பனையும் லாபமும் அதிகரித்தன. இதனால், சில சமயங்களில் நாம் தேர்ந்தெடுத்த பொருட்களுக்கு பதிலாக தரம் குறைந்த மலிவான பொருட்களையும் ஆன்லைன் விற்பனை நிறுவனங்கள் டெலிவரி செய்ய ஆரம்பித்தன.
மாற்றம் ஒன்றே மாறாதது என்பது போல், தற்போது பொதுமக்களும் மீண்டும் பழையபடி தங்களுக்கு விருப்பமான பொருட்களை தாங்களே நேரடியாக கடைகளுக்கு சென்று தேர்ந்தெடுத்து வாங்க தொடங்கியுள்ளது போல் தெரிகிறது. இதனை நன்கு உணர்ந்து கொண்ட ஆன்லைன் விற்பனை நிறுவனமான ஃபிளிப்கார்ட் தற்போது வாடிக்கையாளர்கள் பொருட்களை நேரடியாக பார்வையிட்டு தேர்ந்தெடுத்து அவற்றை நன்கு ஆராய்ந்து வாங்கும் வகையில் நேரடி விற்பனை நிலையத்தை திறக்கப் போவதாக அறிவித்துள்ளது.
பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுத்து வாங்கும் வகையில் பெங்களூருவில் சுமார் 1800 சதுர அடி பரப்பளவில், ஃபர்னிசூர் (FurniSure) என்ற பெயரில் ஆஃப்லைன் விற்பனை நிலையத்தை வெகு விரைவில் திறக்கப்போவதாக ஃபிளிப்கார்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் பொதுமக்கள் நேரடியாக தங்களுக்கு தேவையான பொருட்களை பார்வையிட்டு தொட்டுப்பார்த்து நன்கு ஆராய்ந்து அதை தங்கள் மொபைலில் உள்ள கூகுள் கேமரா மூலம் படம் பிடித்து ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளவும் முடியும்.
இது பற்றி விளக்கிய ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் துணைத் தலைவர் ஆதார்ஷ் மேனன், வாடிக்கையாளர்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் நோக்கத்திலேயே நாங்கள் தற்போது இந்த ஆஃப்லைன் விற்பனை நிலையத்தை தொடங்கவுள்ளோம். வரும் காலங்களில் மேலும் இரண்டு விற்பனை நிலையங்களை பெங்களூருவில் திறக்க முடிவு செய்துள்ளோம் என்றும், விரைவில் மற்ற நகரங்களிலும் அதே போல் ஆஃப்லைன் விற்பனை நிலையத்தை திறக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றம் கூறினார்.