இந்திய டெலிகாம் சந்தையில் ஜியோ உடன் போட்டிப்போட வோடபோன் மற்றும் ஐடியா இணைந்தது நாம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஜியோவில் வளர்ச்சியும் சேவை விரிவாக்கமும் அசுர வேகத்தில் இருப்பதால் வோடபோன் - ஐடியா கூட்டணியால் போட்டிப் போட முடியவில்லை.
இதனால் வோடபோன் - ஐடியா கூட்டணி வர்த்தகச் சரிவு, வாடிக்கையாளர் இழப்பு எனத் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்து வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு வர்த்தகப் பிரிவை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
வோடபோன் - ஐடியா நிறுவனங்கள் இணைந்த சில மாதங்களிலேயே வோடபோனின் M-pesa, ஆதித்யா பிர்லா பேமெண்ட்ஸ் வங்கியுடன் இணைந்தது. ஆனால் வர்த்தகச் சரிவின் காரணமாகவும், வர்த்தக வளர்ச்சி ஏதும் இல்லாத காரணத்திற்காகவும் ஆதித்யா பிர்லா பேமெண்ட்ஸ் வங்கி மூடங்கியது.
இதன் வாயிலாகத் தற்போது வோடபோனில் M-pesa சேவையும் முழுமையாக முடங்கி நிற்கிறது. ஆதித்யா பிர்லா பேமெண்ட்ஸ் வங்கி துவங்கி வெறும் 17 மாதங்கள் மட்டுமே ஆன நிலையில் ஜூலை 20ஆம் தேதி முற்றிலுமாக முடிங்கியது.
இதுகுறித்து வோடபோன் ஐடியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறுகையில், பேமெண்ட் வங்கியின் நிர்வாகக் கொள்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், இந்திய டெலிகாம் சந்தையில் உருவாகியுள்ள போட்டியும் தான் எங்களை இந்த முடிவை எடுக்கத் தூண்டியது எனத் தெரிவித்தார்.
பேமெண்ட்ஸ் வங்கி சேவையை மூடப்பட்ட நிலையில் வோடபோன்-ஐடியா நிறுவனம் ப்ரீபெய்டு மற்றும் இதர நிதி சேவைகளுக்குச் சந்தையில் இருக்கும் பிற நிதியியல் நிறுவனங்களை நாட முடிவு செய்துள்ளது.
M-pesa சேவை மூடப்பட்டுள்ள நிலையில், ஜூன் காலாண்டில் வோடபோன் ஐடியா கூட்டணி சுமார் 210 கோடி ரூபாய் நஷ்டத்தைச் சந்தித்துள்ளது.
2015இல் இந்திய ரிசர்வ் வங்கி பேமெண்ட்ஸ் வங்கி அமைக்க ஒப்புதல் கொடுத்த 11 நிறுவனங்களில் வோடபோன் M-pesaவும் ஒன்று. இதில் டெக் மஹிந்திரா, சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட், சன் பார்மா, ஐடிஎப்சி வங்கி, டெலிநார் பைனான்சியல் சர்விசஸ் நிறுவனங்கள் வர்த்தகத்தைத் துவங்குவதற்கு முன்பாகவே உரிமத்தை திரும்பக் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
இத்தகைய மோசமான வர்த்தகச் சூழ்நிலையில், வோடபோன்-ஐடியா தனது 3ஜி சேவைகளை நிறுத்திவிட்டு ஜியோ, ஏர்டெல் உடன் போட்டிப்போடும் வகையில் 4ஜி சேவைகளை மட்டும் குறிவைத்து இயங்க முடிவு செய்துள்ளது.