இந்திய வங்கிகள் தற்போது வராக்கடன், கடன் மோசடி எனப் பல பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில் முதலீட்டாளர்களும் வங்கித்துறையில் முதலீட்டுச் செய்ய யோசித்து வருகின்றனர். ஆனால் ஆக்சிஸ் வங்கியின் காலாண்டு முடிவுகளைப் பார்க்கும் போது வங்கித் துறை முதலீட்டாளர்களுக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஆக்சிஸ் வங்கி சுமார் 95 சதவீத லாப உயர்வைச் சந்தித்துள்ளது.
லாபம்
நாட்டின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றாக விளக்கும் ஆக்சிஸ் வங்கி ஜூன் 30 உடன் முடிந்த காலாண்டில் 1370 கோடி ரூபாய் லாபத்தைப் பெற்றுள்ளது.
இது கடந்த நிதியாண்டின் ஜூன் காலாண்டை ஒப்பிடுகையில் சுமார் 95 சதவீதம் அதிகமாகும். 2018-19 நிதியாண்டின் ஜூன் காலாண்டில் இதன் அளவு 701 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருவாய்
ஜூன் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி 4,798 கோடி ரூபாய் வருவாயைப் பெற்றுள்ளது, இது கடந்த நிதியாண்டில் 4,337 கோடி ரூபாயாக இருந்தது.
மார்ச் காலாண்டில் 3,012 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வருமான வழிகள்
ஜூன் காலாண்டில் ஆக்சிஸ் வங்கி தனது அதிகளவிலான லாபத்தை மொத்த வட்டி வருமானமாகவும், இதர வருவாய் மற்றும் இயக்க லாபத்தின் வாயிலாகப் பெற்றுள்ளது.
வட்டி வருமானம்
கடந்த நிதியாண்டை ஒப்பிடுகையில் நடப்பு ஜூன் காலாண்டில் ஆக்சிஸ் வங்கியின் வட்டி வருமானம் 13 சதவீதம் அதிகரித்து 5843.65 கோடி ரூபாயாக உள்ளது.
கடன் அளவீடுகள்
இக்காலாண்டில் உள்நாட்டுக் கடன் பிரிவில் 19 சதவீதமும், சில்லறை வர்த்தகப் பிரிவில் 22 சதவீதமும், உள்நாட்டுக் கார்ப்பரேட் கடன் பிரிவில் 16 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதோடு வைப்பு நிதி அளவீட்டில் 21 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ளது.
கணிப்பு
சந்தை கணிப்பின் படி ஆக்சிஸ் வங்கி ஜூன் காலாண்டில் 1897 கோடி ரூபாய் லாபமும், 5910.7 கோடி ரூபாய் வருமானத்தையும் பெறும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், சந்தை கணிப்புகளை எட்ட தவறிவிட்டது ஆக்சிஸ் வங்கி.
பங்கு விலை
இன்றைய வர்த்தக முடிவில் ஆக்சிஸ் வங்கி சந்தை கணிப்புகளை எட்ட முடியாத காரணத்தால் 1.82 சதவீதம் சரிந்து அதாவது ஒரு பங்கிற்கு 13.10 ரூபாய் சரிந்து 706.55 ரூபாய் விலையில் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது.