டெல்லி : காணாமல் போன கஃபே காஃபி டே நிறுவன அதிபர் விஜி சித்தார்த்தின் உடல் 36 மணி நேரத்திற்கு பின், மங்களூருவில் உள்ள நேத்ராவதி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
காஃபி டே நிறுவன அதிபர் சித்தார்த்தா உடல் மங்களூருவில் நேத்ராவதி ஆற்றின் கரையில் ஒதுங்கப்பட்டதாகவும், பின்னர் இன்று (புதன் கிழமை காலை 6.50 மணிக்கு கண்டெடுக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
சித்தார்த்தா கடந்த திங்கட் கிழமை இரவிலிருந்து காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், சித்தார்த்தாவின் உடல் புதன்கிழமை மங்களூரில் உள்ள ஹோய்கே பஜார் அருகே நேத்ராவதி ஆற்றின் கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஏற்றுமதியாளராக வளர்ச்சி!
ஆமாங்க.. கர்நாடகாவின் சிக்கமகளூருவில் பிறந்து மங்களூரு பல்கலைக்கழகத்தில் தனது கல்விப் படிப்பை நிறைவு செய்த சித்தார்த்தா, பங்குச்சந்தை தரகு நிறுவனம் ஒன்றில் ஒரு பயிற்சியாளராகத் தனது பணியைத் தொடங்கினார். இதன் பின்னர் 1992 -ம் ஆண்டு தான் சித்தார்த்தா முதன்முதலாக காஃபி தொழிலில் கால் பதித்தார். 'பீன் கம்பெனி ட்ரேடிங் எனப் பெயரிடப்பட்டு தொடங்கிய நிறுவனம்தான் இன்றைய கஃபே காஃபி டே. காஃபி கொட்டைகளைப் பிரித்து எடுப்பதிலிருந்து தூளாக ஏற்றுமதி செய்யும் அளவுக்கு தொழில் வளர்ந்தது.
காஃபி டே தொடர் நஷ்டமே
கடந்த 2018 ஆம் நிதியாண்டில் 2,061 கோடி ரூபாய் தொழில் நிறுவனமாக கஃபே காபி டே மாறியது. எனினும் கடந்த 2015லிருந்து இந்த நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் நஷ்டத்திலேயே இருந்து வந்துள்ளது. குறிப்பாக கடந்த 2015 மார்ச் மாதத்தில் 127.46 கோடி ரூபாய் நஷ்டம் கண்டதாகவும், இதுவே கடந்த 2016 மார்ச்சில் 110.56 கோடி ரூபாய் நஷ்டத்திலும், இதுவே 2017 மார்ச்சில் 79.58 கோடி ரூபாய் நஷ்டத்திலும், 2018 மார்ச்சில் 61.49 கோடி ரூபாய் நஷ்டத்தில், 2019ல் 67.79 கோடி நஷ்டத்திலேயும் இருந்துள்ளது. இவ்வாறு தொடர்ந்து நஷ்டத்தினையே தொடர்ந்து இந்த நிறுவனம் கண்டுள்ளது.
காஃபி டே பல நாடுகளில் உள்ளது
இந்தியாவின் முதல் காஃபி கஃபே டேயை தொடங்கியவர் சித்தார்த்தா. இந்த நிலையில் கடந்த 1996ம் ஆண்டு பெங்களூருவில் முதல் கஃபே காஃபி டே தொடங்கப்பட்டது. இந்தியாவில் மட்டும் அல்ல இன்று மலேசியா, நேபாளம் எகிப்து வியன்னா, செக் குடியரசு உள்ளிட்ட நாடுகளிலும் கஃபே காஃபி டே கிளைகள் வெற்றிகரமாகவே செயல்பட்டு வருகின்றன.
வருமான வரி சோதனைக்கு பின்பே ஆரம்பித்த பிரச்சனை
இந்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு சித்தார்த்தாவின் தொழில் நிறுவனங்களில் நடந்த வருமான வரி சோதனையின் பின்னரே அவரது பிரச்சனை ஆரம்பமானதாக தொழில் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. கடந்த திங்கள்கிழமை மாலையில் காணாமல் போனதாக கூறப்பட்ட நிலையில், அவர் சக்லேஷ்பூர் நகரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தபோது, மங்களூரு நோக்கி திரும்புமாறு டிரைவரிடம் கூறியுள்ளதாகவும், பின்னர் நேத்ராவதி ஆற்றின் குறுக்கே உள்ள பாலத்தின் அருகே இறங்கி காணாமல் போனதாகவும் கூறப்படுகிறது.
தொழிலதிபராக நான் தோற்று விட்டேன்
மேலும் அவர் காணாமல் போன சில மணிநேரங்களுக்குப் பிறகு, அவரது நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு மற்றும் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் அவர் சிறந்த முயற்சிகள் இருந்த போதிலும் சரியான வணிக மாதிரியை நான் உருவாக்கத் தவறிவிட்டேன் என்றும், வணிகத்தைப் பொறுத்தவரையில் நிதிக் கட்டுப்பாடுகளை மேற்கோள் காட்டியும் கூறியுள்ளாராம், அதோடு ஒரு தொழிலதிபராக நான் தோற்றுவிட்டேன் என விஜி சித்தார்த்தா உருக்கமாக தனது ஊழியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளாராம்
சித்தார்த்தின் உடன் நேத்ராவதி ஆற்றில் கண்டெடுப்பு
இந்த நிலையில் தான், 60 வயதான பிரபல காஃபி டே நிறுவன அதிபர் VG. சித்தார்த்தாவின் உடல் புதன்கிழமை மங்களூரில் உள்ள ஹோய்கே பஜார் அருகே நேத்ராவதி ஆற்றின் கரையில் காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கின் விலை 20 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு 123 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.