சென்னை : அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை அதிரடியாக குறைத்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இதன் படி ஆகஸ்ட் 10ம் தேதி முதல் மாதம் ரூ.106 ஆக கட்டணம் குறைகிறது.
இந்த நிலையில் தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கேபிள் டி.வி. தொழிலில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசும், கேபிள் டி.வி. நிறுவனத்தை கடந்த 2011-ம் ஆண்டு முதல் நடத்தி வருகின்றது.
தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வகுத்த புதிய வரைமுறையின்படி, கேபிள் டி.வி. கட்டணம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது, இந்த நிலையில் தமிழகத்தில் கேபிள் கட்டணம் ஆகஸ்ட் 10 முதல் இந்த கட்டணம் குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டணத்தை குறைக்க தொடர் கோரிக்கைகள்
முன்னர் மாதம் ரூ.130 கட்டணத்தில் பல்வேறு டி.வி. சேனல்களை கண்டுகளித்த மக்கள் இன்று, ரூ.250 செலவு செய்தும் குறிப்பிட்ட சேனல்களை மட்டுமே பார்த்து வருகின்றனர். எனவே கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்கவேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் வைக்கப்பட்டு வந்தன. இந்த நிலையிலேயே இந்த அதிரடி குறைப்பு நிகழ்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
கேபிள் டிவி நுகர்வோருக்கு இரண்டு தொகுப்புகள் மட்டுமே
இந்த நிலையில் அரசு கேபிள் டிவி நுகர்வோருக்கு இரண்டு தொகுப்புக்கு மட்டுமே நடமுறையில் இருக்கும். முதல் தொகுப்பு மூலம் 142 சேனல்களை வழங்கும், இதற்கு 141.60 ரூபாய் வரை சந்தாவும், இரண்டாவது தொகுப்பில் 260 ரூபாய்க்கு பதில் இனி வெறும் 154 ரூபாய் கட்டணமாக வரும் என்றும், இதன் மூலம் 191 சேனல்களை, இந்த இரண்டாவது தொகுப்பில் பார்க்க முடியும் என்றும் கூறப்படுகிறது.
சேனல் உரிமையாளர்களுடன் ஆலோசனை
இந்த நிலையில் சென்னை எழும்பூரில் உள்ள அரசு கேபிள் டி.வி. தலைமை அலுவலகத்தில் கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்பது தொடர்பாக மாவட்ட அளவிலான கேபிள் டி.வி. ஆபரேட்டர் குழு நிர்வாகிகள், தாசில்தார்கள், கட்டண சேனல்கள் உரிமையாளர்கள் ஆகியோருடன் அமைச்சரும், அரசு கேபிள் டி.வி. நிறுவன தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர் சங்கர் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்தினர்.
குறைந்த கட்டணத்தில் சலுகை
இந்த நிலையில் அரசு கேபிள் டி.வி. கட்டணத்தை அதிரடியாக குறைத்து தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவையை பெறுவதற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் ஜெயலலிதாவால் புத்துயிர் ஊட்டப்பட்டு சந்தாதாரர்களுக்கு மிக குறைந்த கட்டணத்தில் 100 சேனல்களை வழங்கி வந்தது.
சுமார் 35.12 லட்சம் செட் டாப் பாக்ஸ்காள் இதுவரை இலவசம்
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், இதுவரை 36 லட்சம் செட்-டாப் பாக்ஸ்கள் கொள்முதல் செய்து, சுமார் 35.12 லட்சம் செட்-டாப் பாக்ஸ்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாக வழங்கி உள்ளது. தற்போது தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம் பொதுமக்கள் அதிகம் விரும்பும் சேனல்களை வழங்கி வருகிறது.
இனி கேபிள் சந்தாதாரர்கள் அதிகரிப்பார்கள்
ஆனால் தொடர்ந்து மக்களின் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு முழுவதும் (வேலூர் மாவட்டம் நீங்கலாக) வருகிற 10-ந்தேதி முதல் ரூ.130 உடன் ஜி.எஸ்.டி. என்ற மாத சந்தா கட்டணம் நிர்ணயித்துள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது அரசு கேபிள் டி.வி. கட்டணமாக மாதம் ரூ.220 ஜி.எஸ்.டி. கட்டணம் சேர்த்து ரூ.259.60 வசூலிக்கப்பட்டது. கட்டண குறைப்பு மூலம் இனி ரூ.153.40 வசூலிக்கப்படும். இதன்படி கட்டணம் ரூ.106 அதிரடியாக குறைகிறது. இந்தநிலையில் கேபிள் டி.வி. கட்டணம் குறைக்கப்பட்டிருப்பதால், அரசு கேபிள் டி.வி.க்கு இன்னும் ஏராளமான சந்தாதாரர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.