டெல்லி : ஏர் இந்தியாவின் துணை விமான நிறுவனமான அலையன்ஸ் ஏர் இந்தியா நிறுவனம் ஒரு அதிரடி சலுகையை வெளியிட்டுள்ளது.
ஆமாங்க.. இரயில் கட்டணத்தில், விமானத்தில் பயணிக்கக் கூடிய அளவு கட்டணத்தை குறைத்து அதிரடி சலுகை ஒன்றை அறிவித்துள்ளது.

ஏர் இந்தியாவின் துணை நிறுவனமான அலையன்ஸ் ஏர், வெள்ளிக்கிழமையன்று சுதந்திர தின விற்பனை திருவிழா என்ற சலுகையை அறிவித்துள்ளது. இதன் படி தள்ளுபடியின் மூலம் குறைந்தபட்சம் கட்டணம் 990 ரூபாயிலிருந்து ஆரம்பிக்கும் என்றும் இந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த சலுகையானது குறிப்பிட்ட நாட்களுக்கு மட்டுமே என்றும் கூறியுள்ளது.
குறிப்பாக இந்த சலுகை ஆகஸ்ட் 3 முதல் ஆகஸ்ட் 9 வரை மட்டுமே என்றும் இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சலுகையின் மூலம் பெறப்படும் டிக்கெட்கள் ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 30 வரை செல்லுபடியாகும் என்றும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து அலையன்ஸ் ஏர் நிறுவனம் கூறுகையில், ரயில் டிக்கெட்களை விட மலிவான இந்த விமான கட்டணங்கள், ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்கு, விமானத்தில் பறக்கும் அனுபவத்தை வழங்க விரும்புவதாக கூறியுள்ளது.
அலையன்ஸ் ஏர் நிறுவனம் தற்போது 53 இடங்களுக்கு, ஒரு நாளைக்கு 110 விமானங்களை இயக்குகிறது. குறிப்பாக குலு, கொச்சின், மைசூரு, டையூ மற்றும் பாசிகாட், அருணாசலபிரதேசம், சிம்லா, கோலாப்பூர், பந்த்நகர், பதிந்தா, லூதியானா, குவாலியர், பிகானேர் உள்ளிட்ட பல இடங்களுக்கு இந்த விமான நிறுவனம் விமான சேவைகளை இயக்கி வருகிறது.
இதற்கிடையில் ஏர் இந்தியா குளிர்காலத்தில் இருந்து நேரடியாக லக்னோ - ஜெட்டாவுக்கு விமானத்தை இயக்க உள்ளது என்றும் கூறியுள்ளது. தற்போது உத்திரபிரதேச தலை நகரிலிருந்து புதுடெல்லி வழியாக ஜெட்டாவுக்கு தினசரி விமானத்தை இயக்கி வரும் நிலையில், அறிமுகப்படுத்தவுள்ள இந்த நேரடி விமானத்தால் லக்னோவிலிருந்து பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வளைகுடா நகரத்திற்கு நேரடி விமான சேவைகளுக்கான நீண்டகால கோரிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், ஏர் இந்தியா ஜூலை முதல் கொல்கத்தாவிலிருந்து துபாய்க்கு தனது இடைவிடாத விமான சேவையையும் தொடங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications