மும்பை : உள்நாட்டு ஆயுள் காப்பீட்டுத் துறை வளர்ச்சி ஆண்டுக்கு 14 - 15 சதவிகிதம் இருக்கலாம் என்றும் Care Ratings மதிப்பீடு செய்துள்ளது.
கடந்த புதன் கிழமையன்று வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், குறிப்பாக ஓய்வூதியம் மற்றும் வருடாந்திர ஓய்வூதியம் போன்ற தயாரிப்புகளுக்கான அதிக தேவை, அரச்சாங்கத்தால் வழங்கப்படும் சமூக பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு, ஓய்வூதிய திட்டமிடல் குறித்த விழிப்புணர்வு உள்ளிட்ட பல காரணிகள், இன்சூரன்ஸ் துறையில் ஒரு நல்ல வளர்ச்சியை ஏற்படுத்த வழி வகுக்கும் என்றும் கூறப்படுகிறது.
இளைஞர்கள் தூய்மையான பாதுகாப்புத் திட்டங்களைத் தேர்தெடுக்கும் புள்ளிவிவர அட்டவணையில் இன்சூரன்ஸை தேர்தெடுப்பது போன்ற காரணிகளால் இத்துறை மேலும் வளர்ச்சி காணும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் கிராமப்புறங்களில் இன்சூரன்ஸ் குறித்தான உந்துதலை அதிகரித்தல், கிராமப்புறங்களுக்கு ஏற்ற இன்சூரன்ஸ் திட்டங்கள், இதற்கான பல சேனல்கள் என பலவற்றை ஊக்கப்படுத்துவதன் மூலமும், தொடர்ச்சியான வரிச்சலுகை என பல காரணிகள் மூலம் இத்துறை வளர்ச்சி காண வழியுள்ளது என்று கேர் மதிப்பீடு செய்துள்ளது.
இன்சூரன்ஸ் துறையில் மேலும் வளர்ச்சி காண, அரசு இன்சூரன்ஸ் திட்டங்களில் மாற்றங்களைக் கொண்டு வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது என்றும் கேர் கூறியுள்ளது.
மேலும் இன்சூரன்ஸ் துறையில் தனிப்பட்ட முகவர்களின் குறைந்த அளவிலான வருமானம், இன்சூரன்ஸ் பிரிவில் தொடர்ந்து நீடிக்க கூடிய குறைந்த நிலைத்தன்மை விகிதம் உள்ளிட்ட சவால்களை முன்னிலைப்படுத்தியுள்ளது. அதோடு இத்துறையை மேம்படுத்த, இத்துறையில் உள்ள ஆழமான சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என்றும் கேர் வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் கடந்த 2017 - 2018ம் நிதியாண்டில் மொத்த பிரீமியம் 10.3 சதவிகிதம் வளர்ச்சி கண்டு, 4.58 லட்சம் கோடி ரூபாய் வருவாயை கண்டுள்ளது. இதுவே கடந்த 2006 - 2007ம் நிதியாண்டில் 1.56 லட்சம் கோடி ரூபாயாக பிரீமிய வருவாய் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுவே உலகளாவிய ஆயுள் காப்பீட்டுத் துறையானது கடந்த 2007 முதல் 2017 வரையிலான காலத்தில் 0.8 சதவிகிதம் மட்டுமே வளர்ச்சி கண்டுள்ளதாகவும், இது கடந்த 2017ம் ஆண்டில் கிட்டதட்ட 2.7 டிரில்லியன் டாலர் சந்தை அளவை அடைந்துள்ளது என்றும், இது கடந்த 2007ம் ஆண்டில் 2.5 டிரில்லியன் டாலர் அளவில் இருந்தது என்றும் கேர் நிறுவனம் கூறியுள்ளது.
இந்திய இன்சூரன்ஸ் நிறுவனங்களின் வளர்ச்சி, கிராமப்புறங்களில் இன்சூரன்ஸ் வினியோகத்தை விரிவுபடுத்துதல், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் தனது நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், மேலும் இன்சூரன்ஸ் திட்டங்களை ஆன்லைனில் விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இந்த வளர்ச்சி கண்டுள்ளது என்றும் கேர் நிறுவனம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் மோசடிகள், அதிக இன்சூரன்ஸ் பாலிசிகள் லாப்ஸ், பொருளாதாரத்தில் சாதகமற்ற காரணிகள், வேலையின்மை உள்ளிட்ட பல முக்கிய காரணிகள் இந்த துறைக்கு முக்கிய சவால்களாக கருதப்படலாம் என்றும் கூறப்படுகிறது.