டெல்லி, மானேசர் (Manesar): Maruti Suzuki (மாருதி சுசுகி) கார் நிறுவனம் தான் இந்தியாவில் விற்பனையாகும் மொத்த கார்களில் சுமார் 50 சதவிகிதத்தை உற்பத்தி செய்கிறது.
சுமாராக கடந்த 10 மாதங்களுக்கு மேல் தொடர்ந்து சரிந்து கொண்டிருக்கும் இந்திய ஆட்டோமொபைல் விற்பனையால், தற்போது ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு ஆட்டோமொபைல் துறையில் வேலை பார்ப்பவர்கள் தொடங்கி, அரசாங்கம் வரை அனைவரின் வயிற்றிலும் புளியைக் கரைத்திருக்கிறது.
அப்படி என்ன செய்துவிட்டார்கள்..? அரசாங்கமே பதறும் அளவுக்கு ஒரு கார்ப்பரேட் நிறுவனத்தால் எதையாவது செய்ய முடியுமா..? எனக் கேட்டால் இப்போது முடியும் என நிரூபித்திருக்கிறது மாருதி சுசுகி (Maruti Suzuki).
வீட்டுக்கு போங்க
Maruti Suzuki நிறுவனத்தின் ஒரு மின்னஞ்சலில் "கடந்த ஜனவரி 2019 முதல் ஜூன் 2019 வரையான முதல் ஆறு மாதங்களில் Maruti Suzuki-ல் 18,845 தற்காலிக பணியாளர்கள் வேலை பார்த்து வருகிறார்களாம். இது கடந்த ஜனவரி 2018 முதல் ஜூன் 2018 வரையான முதல் அரையாண்டை விட 6 சதவிகிதம் குறைவு". அதாவது 1,181 பேரை வீட்டுக்கு அனுப்பி இருக்கிறோம் எனச் சொல்லி இருக்கிறார்கள். அதோடு கடந்த ஜூன் 2019-ல் இருந்து தான் தற்காலிக பணியாளர்களை வேலையை விட்டு அனுப்புவது அதிகரித்திருக்கிறதாம். ஆனால் Maruti Suzuki-ல் நிரந்தர ஊழியர்களை வேலையில் இருந்து அனுப்பவில்லை என்பதையும் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்கள். மேற்கொண்டு புதிய ஊழியர்களை பணிக்கு எடுப்பதையும் Maruti Suzuki நிறுத்தி வைத்து இருக்கிறார்களாம்.
வேலை இல்லா திண்டாட்டம்
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் கடந்த ஜூலை 2019-ல் 7.51 சதவிகிதமாக அதிகரித்திருக்கிறது. வேலை இல்லா திண்டாட்டம், அதற்கு முந்தைய ஜூலை 2018-ல் 5.66 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. என CMIE என்கிற அமைப்பு தன் அறிக்கையில் சொல்லி இருக்கிறது. இதில் தினக் கூலிகள், தங்கள் திறமைக்குக் குறைவான பணிகளில் வேலை செய்பவர்களை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமலேயே இந்த அபாயகரமான வேலை இல்லா திண்டாட்ட எண்கள் வந்திருப்பதாகவும் சொல்கிறது CMIE. இதனால் தான் Maruti Suzuki என்கிற ஒரு தனியார் நிறுவனத்தின் அறிவிப்புகள் அரசையே கொஞ்சம் கலக்கம் அடையச் செய்கின்றன.
சரிவு
Maruti Suzuki நிறுவனம், கடந்த ஜூலை 2018-ல் விற்ற வாகனங்களை விட சுமார் 33 சதவிகிதம் குறைவான வாகனங்களைத் தான் ஜூலை 2019-ல் விற்க முடிந்திருப்பதையும் இங்கு கவனிக்க வேண்டி இருக்கிறது. இந்த காரணத்தால் தான் வாகனங்கள் தயாரிப்பில் கடந்த ஜனவரி 2019 முதல் ஜூன் 2019 வரையான காலத்தில் சுமார் 10 சதவிகித உற்பத்தியைக் குறைத்திருப்பதையும் சுட்டிக் காட்டுகிறது. Maruti Suzuki நிறுவனத்தின் தலைவர் ஆர் சி பார்கவா "Maruti Suzuki-ன் வியாபாரம் குறைந்திருப்பதால், பணியாளர்கள் எண்ணிக்கையைக் கொஞ்சம் குறைத்திருக்கிறோம்" எனவும் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
ஊழியர்கள் கவலை
"ஒரு நாளைக்கு 3 ஷிப்ட் வேலை பாக்குறது எல்லாம் பெருசா குறஞ்சிருச்சுங்க. இன்னும் சொல்லப் போனா சில அசெம்ப்ளி லைன்ல (Assembly Line) வேலையே இல்ல. அதனால் சும்மா போட்டு வெச்சிருக்காங்க" என Maruti Suzuki நிறுவனத்தின் உற்பத்தி ஆலையில் பணியாற்றும் பணியாளர்கள் சொல்கிறார்கள். Maruti Suzuki-ன் மானேசர் மற்றும் குருகிராம் உற்பத்தி ஆலை இரண்டையும் சேர்த்தால் ஒரு ஆண்டில் சுமார் 15 லட்சம் வாகனங்களுக்கு மேல் தயாரிக்க முடியுமாம். ஆனால் இப்போதைய நிலவரப்படி, ஆண்டுக்கு 12 - 13 லட்சம் வாகனங்கள் விற்றாலே பெரிய விஷயமாக இருக்கும் போல என வருத்தப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள் Maruti Suzuki நிறுவனத்தினர்கள்.
எச்சரிக்கை
ஏற்கனவே இந்தியாவின் ஆட்டோமொபைல் உதிரிப் பாக உற்பத்தியாளர்கள் சங்கத்தினர், சுமார் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் பறி போகலாம் எனச் சொல்லி வேலை தேடும் இளைஞர்கள் தொடங்கி கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள், அரசாங்கத்தினர்கள் வரை அனைவரையும் பயமுறுத்தினார்கள். அவர்கள் சொன்னது கொஞ்சம் கொஞ்சமாக நடைமுறைக்கு வந்து கொண்டிருக்கிறது. சில தினங்களுக்கு முன் தான் சுமார் 286 ஆட்டோமொபைல் டீலர்கள் கடையை இழுத்து மூடி 32000 பேருக்கு வேலை பறி போனது எனச் செய்தி வந்தது. இன்று Maruti Suzuki நிறுவனம் தன் 1,181 பேரை கடந்த ஆறு மாதங்களில் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
ஊழியர்கள் வேதனை
Maruti Suzuki நிறுவனத்தில் ஒரு தற்காலிக பணியாளருக்கு சுமார் 17,500 ரூபாய் மாத சம்பளம் கொடுக்கிறார்கள் என, Maruti Suzuki நிறுவனத்தின் பணியாளர்கள் யூனியன் பொதுச் செயலர் குல்தீப் ஜாங்கு. சம்பளம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்படி தற்காலிக பணியாளர்களாக இருப்பவர்கள் பொதுவாக அதிகம் படிக்காதவர்களாக இருக்கிறார்கள். தற்போது வேலையில் இருந்து நீக்கப்பட்ட பெரும்பாலான ஊழியர்களுக்கு இந்த வேலையை விட்டால் வேறு பிழைப்பு தெரியாது என்கிற நிலை தான். ஒட்டு மொத்த ஆட்டோமொபைல் துறையும் மந்த நிலையில் இருக்கும் போது, Maruti Suzuki நிறுவனத்தில் இருந்து நீக்கப்பட்டவர்கள் வேறு எங்கு சென்று வேலை பார்த்து பிழைப்பது எனத் தெரியாமல் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
வேறு வழி
வேலையே இல்லாத போதும் சுமார் 33 சதவிகித விற்பனை சரிந்திருக்கும் போதும் 1,181 பேரைத் தான் வீட்டுக்கு அனுப்பி இருக்கிறார்கள் என கொஞ்சம் நிம்மதி அடைவதா..? இல்லை, அந்த 1,181 பேருக்கு வேலை போய்விட்டதே என வருத்தப்படுவதா..? எனத் தெரியவில்லை. ஆட்டோமொபைல் நிறுவனங்களும், தங்களுக்குப் போதுமான விற்பனை இல்லாமல், உற்பத்தியை அதிகரிக்க முடியாது. உற்பத்தி வேலை இல்லை என்றால், ஊழியர்களுக்கு மட்டும் சம்பளம் கொடுத்துக் கொண்டிருக்க முடியாது தானே..? என வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கனவே வேலை இல்லா திண்டாட்டத்தால் திக்கு முக்காடிக் கொண்டிருக்கும் இந்திய இளைஞர்களுக்கு அரசு தான் ஏதாவது ஒரு வழி செய்ய வேண்டும். இந்த இக்கட்டான சூழலில் அரசைத் தவிர வேறு யாரை நம்புவது..?